‘பருவம் படுத்தும் பாட்டில், பார்க்கும் இணைகளை எல்லாம், நமது துணைகளாக்கி மன அளவில் வாழ்ந்து, அது போய் அடுத்து வந்து, அதனையும் இதனையும் ஒப்பிட்டுப் பார்த்து, கூட்டிக் கழித்து, குறைகளை நிறைகளை சேர்த்துப் பார்த்து, சுழியத்தில் முடியும் கணக்கில் வெறுத்து, வெறுத்தும் சுழியம்தான் கணக்கில் வரத்து, என்பதை வாழ்வினில் சரியாய் அறிந்து, அறிந்ததில் நமக்கேது என்பதை புரிந்து, புரிந்தவர் புதிர் அது எதுவென உணர்ந்து, உணர்ந்ததில் நல்லது கெட்டது பகுத்து, பகுத்தலில் பெற்றதில் நல்வழி வகுத்து, வழி வரும் தளிராம் தலைமுறை எடுத்து, சேர்த்ததை எல்லாம் அவரிடம் விடுத்து, சேருவோம் இறையடி வாழ்வினை முடித்து’ என்று ஒரு நீண்ட மூச்சுக்கு பின் ஆன்மீகத்தையோ, துறவையோ விடுத்துப் போகலாம்.
ஆனால், நான் காதலிக்க பிறந்தவன்! அதிலும், அதில் பெருமிதம் உள்ளவன். ஏனெனில், ‘படைப்பதினால் என் பேர் இறைவன்’ என்னும் கண்ணதாசனின் வரிக்கேற்ப, இறைமை எதுவென பார்த்தால், துறவல்ல; காதல்தான். எப்படியெனில், காதல் உருவாக்கும்; துறவு உறவறுக்கும். காதல் வேண்டுமானால் துறவியைப் பிறப்பிக்கும்; உண்மைத் துறவறத்தில் காதல் பிறக்காது. துறவு முடிவை நோக்கி பயணிப்பது; காதல் துவக்கத்தை முதலீடாக்கி துளிர்ப்பது. துறவு இருப்பதை இழந்து உருவமற்றதைத் தேடுவது; காதல் உருவமற்றிருந்தும், உருவத்தில் திளைப்பது. மொத்தத்தில், துறவு துறப்பதை வலியுறுத்தும் எதிர்மறை; காதல் பெறுதலின் நேர்மறை. இந்த ஒப்பீடுகள் எதார்த்தவாதிகளுக்குப் பொருந்துமேயன்றி, போலிகளுக்குப் பொருந்தாது. நான் போலிகள் என்று குறிப்பிடுவது, எவர் எதை ஏற்றுக் கொள்கிறாரோ, அதற்கு எதிர்மறையாக வாழ்பவரை.
இன்றைய இவ்வளவு இயக்கங்களுக்கும், பெருக்கங்களுக்கும் பாலியலும், காதலும்தான் அடிப்படை என்றால் எவரால் மறுக்க இயலும்? வரையறையில்தான் வேறுபாடு இருக்க முடியுமே அன்றி, தேவையில் இல்லை. பாலியல் பற்றி பெரிதாக பாடம் எடுக்கவேண்டிய தேவையை இயற்கையே நமக்கு வைக்கவில்லை. அது குழந்தை முதலே வெவ்வேறு வடிவங்களில், தானாகவே தரப்பட்டு விடுவதால், காதலைப் பற்றி மட்டுமே கொஞ்சம் ஆய்ந்து என் பட்டறிவை துவக்க விரும்புகிறேன்.
எது காதல்? இதைப் பற்றி எவ்வளவோ பேர், எவ்வளவோ எழுதியும் இது போதும் என்று இனி வருபவர்கள் எழுதாமல் நிறுத்திக்கொள்ள போவதில்லை என்பதிலிருந்தே இதன் வலிமை புலப்படும். ஆனால், ஒற்றை வரியில், என் வரையில் விளக்கம் கொடுப்பதானால், ‘எந்த அன்பில் முறையான பாலியல் அனுமதிக்கப் படுகிறதோ அது காதல்’. தாய், தமக்கை, மகள் என எந்த உறவிலும் இல்லாத நெருக்கத்தை மனைவியிடம் நிலைநிறுத்தும் ஒரு சக்திதான் காதல். பருவத்தில், பாலியலின் குழந்தையாம் காதல்.
எனக்கும் காதலுக்கும் தொடர்பு பெற்ற என் வயது எது என்று சரியாக சொல்லிவிடும் அளவிற்கு என் நினைவில் இல்லை. ஆனால், பாலியல் முற்றிலும் பாவம் என்றும், அது ஆன்மீகத்திற்கு நேர் எதிரானது என்றும் நான் நினைத்துக் கொண்டிருந்த வயதிலேயே, என் வயதே உடைய என் நண்பன் ஒருவனால் பாலியல் பாடம் பெற்றேன் என்பதும், அவனால்தான் திருமணம் என்பதே பாலியலை பெறதான் என்றும் அறிந்தேன் என்பதும் இன்று நினைத்தாலும் வேடிக்கையாகத்தான் உள்ளது.
அழகான பெண்களைப் பார்வையுள்ள ஆண்கள் தன்னவளாகக் கற்பனை செய்துகொள்வதெப்படியோ, அப்படியே பார்வையற்ற ஆண்களும் குரலில் இனிய பெண்களை தன்னவளாக கற்பனை செய்வது இயல்புதான். அவ்வகையில், அக்காலச் சூழலில், அந்த வயதில், அப்போதைய அறிவில் நானும் மனதளவில் பலரைத் தேடி இருக்கிறேன். இசை என் வாழ்வில் ஒரு பகுதி என்பதால், நன்கு பாடும் திறம் பெற்ற பெண்கள் என் பட்டியலில் இருந்திருக்கிறார்கள்தான். அதனையும் கடந்து அடக்கம், படிப்பு, பண்பு, பக்குவம், நடைமுறை என இன்ன பிறவற்றை உள்ளடக்கிய அன்றையத் தேடலுக்கு யார்யாரெல்லாம் என் பட்டியலில் இடம் பெற்றார்கள் என்பதை, இன்று அவர்களில் பலர் பிறர் மனைவிகள் ஆகிவிட்டனர் என்பதால், எழுதுவது முறையாகாது.
நான் 10-ஆம் வகுப்பை முடித்த போது, நேரடியாகவே கடிதம் தந்த அந்த இரு பெண்களும், ‘என்னை நிலைப்படுத்திக் கொண்ட பிறகுதான் இதைப் பற்றி யோசிக்கவேகூட முடியும் என்பதால் காத்திருக்கவும்’ என்ற என் வாய்வழி பதிலுக்கேற்ப, எனக்கு வேலை கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை என்பதாலும், எனக்கு வேலை கிடைத்தபோது அந்த இருவரையும் உடனடியாக சந்திக்க முடியாமல் என் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் செய்துவிட்டன என்னும்போது பொருளற்றவையே.
என் போன்ற வயதில் இருப்பவர்கள், அதிலும் இங்கு என் பிள்ளைகளுக்குரிய வயதில் இருக்கும் வாசகர்களுக்கு இதைப் பற்றி எழுதும்போது, எவ்வளவு கவனத்துடன் எழுத வேண்டும் என்பதை நான் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் என்னும் தகுதியிலிருந்து இறங்காமலும், வாசகர் நலன் என்னும் பொறுப்பிலிருந்து பிறழாமலும் பதிவு செய்வதென்பது மிகமிகக் கட்டாயம். முடிந்தவரை மிகைகளைத் தவிர்த்து, உண்மையை உதிர்க்கவே முயற்சித்திருக்கிறேன். என் காதல் அனுபவத்தை எழுதும்படி ஏற்கெனவே பலர் வேண்டி விரும்பிக் கேட்டு வந்ததை நினைவில் கொண்டு, ஒரு வரையறைக்குள் எனது 30 ஆண்டுக்கு முன்பான வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட முயற்சிக்கிறேன்.
வாருங்கள்! தேசிய பார்வையற்றோர் பயிற்சி நிலையம், டேராடூன் போய் வருவோம்! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், குறைத்துக் கூறினாலும் நிறை என்று மகிழ்ந்தாலும் இந்நிலையம் எனக்கு மட்டுமல்ல; என் போன்ற பல பார்வையற்றவர்களுக்கும் மையப் பெயராக அமைந்துவிட்டதில் வியப்பில்லை. என் வேலைக்கும், காதலுக்கும் இந்நிலையம்தான் அடிப்படையாக இருந்தது. உறுதுணையாய் இருந்த இறைவனுக்கும், உதவி புரிந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளுடன் இன்னொன்றையும் இங்கு எழுதிவிட விரும்புகிறேன்.
நாங்களும் இந்த 30 ஆண்டுகளில், மண விலக்கை பற்றி பலமுறை பேசி இருக்கிறோம். அதற்கு, என்னிடம் இருக்கும் ஒரு குறையும் காரணம். பொதுவாக, காதல் என்பது இருவழிப் பயணம் என்பதும், இங்கு நான் என் வழியை மட்டுமே வெளிப்படையாக எழுத உரிமை உள்ளவன் என்பதாலும் இப்படி எழுதுகிறேன்.
தேசிய பார்வையற்றோர் நிலையத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனி பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதிகள் இருப்பதால், இருபாலரும் சந்திப்பது என்பது இயலாதது. இது ஏனைய பயிற்சிகளுக்குப் பொருந்துமேயன்றி சுருக்கெழுத்து பயிற்சிக்குப் பொருந்தாது. ஏனெனில், இருபாலரும் ஒரே இடத்தில்தான் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அது ஆண்கள் பயிற்சி நிலையத்தில் இருந்ததால், பெண்கள் அங்கு வந்து போவார்கள்.
மாதத்திற்கு ஒருமுறை, மனமகிழ் நிகழ்ச்சி (Cultural Programme) நடைபெறும். அது ஓரிரு மணிநேரம் இருக்கலாம். அந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் எங்களது நிகழ்ச்சி அரங்கத்திற்கு அழைத்துவரப்படுவார்கள். அந்நிகழ்ச்சியில், எவரால் எதுவெல்லாம் முடியுமோ அவற்றை முயற்சிப்பது வழக்கம். அந்த வகையில், ஒருவரை ஒருவர் கவர, முடிந்தவரை தத்தமது பெயரை எதிர்பாலருக்குத் தெரியப்படுத்த முயன்றவரை முயற்சிப்பதென்பது எதார்த்தமே. ஹிந்தி பேசும் அப்பகுதியில் தமிழர்களால் என்ன முடியும்?
பொதுவாக இசைக்கு மொழி இல்லை என்பார்கள். எனவே இசையை முயற்சிக்கலாம்தான். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கும். நாம் தென்னிந்தியர்கள், ஏற்கெனவே ஹிந்தி மற்றும் ஏனைய மொழிப் பாடல்களை மொழி தெரியாமலேயே கேட்டு இசைக்காக ரசிப்பதுபோல வட இந்தியர்கள் ரசிப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அதற்காக, வேறு வழி இல்லை என்னும்போது அதைதான் முயற்சித்தாக வேண்டும். நானும் தமிழ் பாடல்களை சில மாதங்கள் பாடிவந்தேன். இதற்குள், ஹிந்தியை பேசும் அளவிற்கு கற்றுக்கொண்டேன். ஆகையால், ஒரு வட இந்திய நண்பன் என்னிடம் வந்து, “நீ பாடுவது நன்றாகதான் இருக்கிறது, ஆனால் மொழிதான் புரியவில்லை. நீ ஏன் எனக்காக ஒரு ஹிந்திப் பாடலை முயற்சிக்க கூடாது?” என்றான்.
முதல் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். உச்சரிப்பு மற்றும் சொற்கள் இரண்டையுமே ஒருசேர என்னால் நினைவில் வைத்து பாடமுடியாது என்பது நன்கு தெரியவந்தது. எனவே, ஒரு தாளில் நான் பாட விரும்பிய பாடலை குமிழெழுத்தில் (பிரெயில்) எழுதிக்கொண்டேன். அந்த பாடலின் துவக்கம், ஒரு குரலிசையுடன் (Humming) துவங்கும். என் குரலிசை துவங்கியதும், “ஹே, ஹிந்தி பாடல்!” என்று பல குரல்கள் கேட்டன. அது போதாதா எனக்கு? பள்ளியில் தேர்ந்த பாடகர்கள் வராதபோது, உதிரி பாடகனாக பள்ளிக்காக மேடையில் பாடி பாராட்டை பெற்றிருக்கும் அனுபவம் இருந்ததாலும், ஊக்கப்படுத்தலாலும் அப்பாடலை தரமாகவே பாடி முடித்தேன். என்னை ஹிந்தி பாடல் பாடச் சொன்ன நண்பனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அடுத்த மாதம் ‘கோரி தேராகாவும் படா ப்யாரா’ என்ற ஜேசுதாசின் பாடலை முயற்சிக்க, அது ஏக வரவேற்பை பெற்றது. பெண்கள் பகுதியில், கைகளைத் தலைக்குமேல் தூக்கி தட்டியதாகவும் தனக்கு அப்படி வாய்க்கவில்லையே என்றும் குறைப்பார்வையுள்ள நண்பன் ஒருவன் சொல்லக் கேட்டேன். அவ்வளவுதான், என் பெயர் பயிற்சி நிலையமெங்கும் அன்று அடிக்கடி சொல்லப்பட்ட பெயராகியது. சற்றேறக்குறைய எல்லா மாதங்களிலும் நான் ஹிந்தி பாடல் பாட எதிர்பார்க்கப்பட்டேன். அதன் உச்சகட்டமாக, கௌரி என்ற மேற்குவங்கப் பெண், “அவர் விரும்பினால் நான் அவரை மணக்க விரும்புகிறேன்” என்று விருப்பம் தெரிவித்தது என்னுள் அவ்வயதிற்குரிய கிளுகிளுப்பை ஊட்டியது. அங்கே பெயர்களை எழுதாத நீ, இங்கே எழுதுவதெப்படி என்கிறீர்களா? இதைப் படிக்கும் யாரும், எழுதப்பட்ட பெயருக்குச் சொந்தக்காரரைப் பார்க்கக்கூட போவதில்லை என்கிற நம்பிக்கையில்தான். ஆனால், ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்’ என்னும் வரிகள் எனக்குள், என்னை நிலைப்படுத்தியது மட்டுமல்ல, நான் இப்போதும் பயிற்சியில்தான் இருக்கிறேனேயன்றி, வேலை கிடைக்கவில்லையே!
இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை விரும்பிய அந்த கௌரி ஒரு ஹரியானாவைச் சேர்ந்தவரைதான் பின்னர் மணந்தார் என்பதும், நானும் இன்னொரு ஹரியானாவைச் சேர்ந்தவரைதான் மணக்க நேர்ந்தது என்பதும். புகழ் ஒரு போதை; அது பொல்லாதது சாமி. அதன் உச்சத்தை தொட விரும்பி சகட்டு மேனிக்கு ஒருமுறை முயற்சிக்க, அங்கிருந்தவர்களில் 15 விழுக்காட்டினர்கூட கைகளைத் தட்டாத மோசமான பதிலையும் பெற்றேன். நின்று நிதானித்துக் கொண்டேன்; கிடைப்பதெதுவோ அதில் நிறைவுபெறும் நிலை அது. அடுத்து வந்த மாதங்களில், என்னால் ஈடு செய்துகொள்ள முடிந்தது.
வகுப்புத் தோழிகளை வளைத்துப் போடவோ, வளைந்து போகவோ வாய்ப்புகள் எனக்குக் கிட்டியதில்லை. கல்லூரி கதவுகளைக்கூடத் தட்டியிராத நான், நேராக அப்படி நினைக்க முடிந்ததோ, கனவு கண்டதோ இந்த வகுப்பில்தான். சுருக்கெழுத்துப் பயிற்சி ஒரு வகுப்பிலும், தட்டச்சுப் பயிற்சி இன்னொரு வகுப்பிலும் நடந்து வந்தன. காரணம், ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு தனித்தனியே சுருக்கெழுத்துக்கு வகுப்பறைகள் தேவைப்பட்ட மாதிரி, தட்டச்சுக்கு தேவை இல்லை. ஆகவே, தட்டச்சு வகுப்புதான் தனிமனித நிலையில் இருந்த எனக்குத் துணையென ஒருவரை தேடித்தரும் தடத்தைப் பதித்துத் தந்தது எனலாம்.
1985-ல் நான் சேர்ந்தபோது, வகுப்பில் இருந்த பெண் என்னிடம் பேசமாட்டார். முயற்சித்தாலும், பதில் ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். பொதுவாக இம்மாதிரிப் பெண்களை உடனடியாக தவிர்த்துவிடுவது என் பழக்கம். அடுத்து, 1986-இன் பிற்பகுதியில் வந்தவர் நன்கு பேசுவார். ஆனால், பேச்சு ஒரு அளவிற்கு உட்பட்டே இருக்கும். இவர்கள் இருவருடனும், இன்றும் குடும்பரீதியான நட்பு தொடர்கிறது என்பதும், என் மனைவி உட்பட இம்மூவரும் பள்ளித் தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து 1987-ல் வந்தவர்தான் இன்றளவும் என் வாழ்க்கையிலும் துணையாக வந்துகொண்டிருப்பவர்! எவ்வளவுதான் நீட்டி முழக்கி எழுதினாலும், மையத்தை தொடாமல் போக முடியாது இல்லையா? இதோ, மையத்திற்குள் நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
1987 ஜனவரி மாதம்; நாள் நினைவில் இல்லை! அவரைப் பார்த்ததும் எல்லாம் மறந்த மாதிரி, நாளும் மறந்து விட்டதா? அப்படித்தான் என்று நினைக்கிறேன்! அன்று ஆசிரியர் வரவில்லை. எப்போதும் உடன் வரும் வகுப்புத் தோழியும் ஏனோ அன்று வரவில்லை; வகுப்பில் நாங்கள் இருவரும்தான். ஆனால், நாங்கள் இருவருமே உண்மையில் ரொம்ப நல்லவங்க. உருப்படியாக உட்கார்ந்து தட்டச்சுப் பயிற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் அப்படி? தெரியாது! தெரிந்தது எதுவெனில், திடீரென எதிர்புற தட்டச்சு எந்திரம் நகராமல் நின்றுவிட்டது என்பதுதான். என் தட்டச்சு எந்திரமும் சரி, நான் அவர்களைக் கவனிப்பதும் சரி, தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஒரு நிலையில், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை என்றதும், ‘உச்’ என்ற ஒலி என்னை உதவிக்கு அழைத்தது. அது அழைப்பா, சலிப்பா? அந்த வயதில் அது அழைப்புதான். இப்போது நான் நிறுத்தியதால், என் தட்டச்சும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. நிமிர்ந்து உட்கார்ந்து சில வினாடிகள் யோசித்தேன். என்னவென்று கேட்கலாமா, வேண்டாமா? ஆசிரியர் வேறு இல்லை! இதைவிட நல்ல வாய்ப்பு பின் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து, கேட்டு விட்டேனோ என்னவோ, நினைவில் இல்லை!
“என்ன?” என்றேன் ஒற்றைச் சொல்லில். முதல் முறையாக என்னிடம் பேசினார் என் திருமதி. என்ன சொல்லி இருப்பார்? அதுதான் உங்களாலேயே கணிக்க முடியுமே! எழுந்து போனேன். வெவ்வேறு மாறுபட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தள்ளுருளையை (Carriage) தள்ளிப் பார்த்தேன். இயக்கம் பெற்றது எந்திரம். என் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் இயக்கம் தடைபட, அதே முயற்சி. மூன்றாம் முறையும் என் உதவிக்கு வந்தது எந்திரம். இம்முறை, எழுந்து போய், அவரது கையை நீட்டச் சொல்லி, கையை பிடித்து, எப்படி தள்ளுருளையை தள்ளினால் இயக்கம் பெறும் என்பதைக் காட்டினேன். எந்திரம் இயங்கியதுதான்! ஆனால், என்னுள் அன்று இயங்கிய மன இயக்கங்கள், இவ்வளவு நீண்ட, இன்ன பிற உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நான் நினைத்திருக்கவும் இல்லை. ‘தொடலதில் துவங்கி, தழுவலில் திளைத்து, என் தலைமுறை தழைக்கும், துவக்கம் அதுவென எழுதிடும் பேரை, எனக்கெழுதிய இறைவன்’ என்றோ ஒருநாள் நான் இப்படி எழுத, அன்று நிகழ்ந்த எதிர்பாரா தொடலது. எந்திர மறுப்பு, எங்களது ஈர்ப்புக்கு வழிவகுத்தது.
அடுத்தடுத்து அடம்பிடித்த எந்திரத்தை விடுத்து, அவராகவே பேசத் துவங்கினார். ஆசிரியர் இல்லாதபோதெல்லாம் பேசத் துவங்கிய நாங்கள், இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறோம். படிப்பு, குடும்பம், உடன் பிறந்தோர், விருப்பு, வெறுப்பு, நண்பர்கள், பழக்க வழக்கம், கலாச்சாரம், காலநிலை, உணவு, இட அமைப்பு போன்ற பல பொதுவானவற்றைப் பேசினோம். இருவேறு மாநிலத்தவர் என்பதால், பேச நிறைய தலைப்புகள் கிடைத்தன. பேசியவை பொதுவானவைதான் என்றாலும், முதன்முறையாக, நான் படித்த இடத்தில் வேறு மாநிலப் பெண்ணோடு நீண்ட நேரம் பேசிவிட்ட மகிழ்ச்சி. பேசிய மகிழ்ச்சியுடனும், வகுப்பு முடிந்துவிட்ட வருத்தத்துடனும் அன்றைய தினம் என்னை வகுப்பறையிலிருந்து வழியனுப்பி வைத்தது.
நமது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள, அவரவர் நிலையில் எவருக்கும் இருக்கும் நண்பர்கள்போல, எனக்குமிருந்த நண்பர்களிடம் எனது இனிமையைப் பகிர்ந்துகொண்டேன். சுண்டிய குதிரையாய், நாலு கால் பாய்ச்சலுக்கு ஆயத்தமான என் மனதை எந்தக் கடிவாளம் கொண்டு அடக்க? இருந்தது! என்னைப் பற்றி எப்போதுமே நன்கு அறிந்திருந்தேன். எங்களது வேறுபாடுகளும் என்னை எச்சரித்தன. என்ன அவை? பிறிதொரு சரியான இடத்தில் குறிப்பிட விரும்புவதால், அவற்றை இப்போதைக்கு விடுத்துப் போகிறேன்.
முன்பெல்லாம் ஊனமுற்றோர் விழா மார்ச் மாதங்களில் கொண்டாடப்பட்டது. ஊனமுற்றோர் விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகளுக்கென்று பயிற்சிக்காக மாணவர்களும், ஆசிரியர்களும் திறந்தவெளி அரங்கத்திற்குச் சென்றுவிட்டதால் தனிமை வேண்டிய அளவிற்கு கிடைக்கப் பெற்றோம். நான் பயிற்சியை முடிக்கும் நிலையில் இருந்ததாலும், எண்ணெய் நிலவாயுக் கழகத்தில் நேர்காணலுக்கு வாய்ப்பு பெற்றிருந்ததாலும் மாணவர்களுடன் சேர கட்டாயப்படுத்தப் படவில்லை; விரும்பினால் போகலாம், அவ்வளவே. எப்போதுமே நட்பு ரீதியான பேச்சுகளைத் தாண்டி வரையறை கடந்ததில்லை. இருப்பினும், ஒருவரோடொருவர் பேசுவதிலிருந்த ஈர்ப்பும் குறைந்ததில்லை. சக தோழி இருக்கும்போதெல்லாம் அவரும் பேச்சில் இணைந்துகொண்டது கூடுதல் சுவாரசியம்தான்.
நகர்ந்துகொண்டிருந்த நாட்கள், நழுவத் துவங்கின. மளமளவென கழிந்த மாதங்கள் ஒருமையைத் தொட, வாரமும் அப்படியே இறுதி என்னும் இலக்கில் வந்து நின்று, எங்களை இறுத்தியது. இறுதி நிகழ்வைக் குறிக்கும் பொருட்டு, இரு தோழிகளாலும் சிற்றுண்டிச் சாலை அழைக்கப்பட்டு வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டேன். ஆனால், எப்போதுமே அங்கு தரப்பட்ட உதவித் தொகையிலேயே திட்டமிட்டு செலவு செய்யும் என்னால், இவர்கள் அளவிற்கு செலவழிக்க எப்படி பணத்தை திரட்ட முடியும்? என் வரையறைக்குட்பட்டத் தொகையை நண்பர்களிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு, ஆசிரியரிடம் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினோம். போகும் வழியிலேயே திட்டமிட்டுக் கொண்டேன். அவர்கள் தருவிக்கும் வகைகளை முடிந்தவரை ஏதாவது சாக்கு சொல்லி குறைத்து, என்னிடமிருக்கும் தொகைக்குள்ளாக வைத்துக் கொள்வது எனவும், காரணம் கேட்டால், நண்பர்களோடு ஏற்கெனவே இம்மாதிரி வந்து போய் விட்டதாகக் கதை விடுவது எனவும் முடிவு. சில சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானத்துடன் நிறைந்தது வயிறு; பிரியப் போவதை எண்ணி கனத்தது மனது. ஒரே ஒரு நம்பிக்கை என்னவெனில், நான் மீண்டும் எண்ணெய் நிலவாயு மகளிர் மனமகிழ் மன்றம் மூலம் டேராடூன் அழைக்கப்படலாம் என்பதும், அப்படி வர நேர்ந்தால் கட்டாயம் இவர்களைச் சந்திக்க முடியும் என்பதுமே. இதற்கிடையில், ஒருவருக்கொருவர் விலாசங்களும், குரல்கள் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இறுதி நாளைத் தொட்டது என் பயிற்சிக் காலம். 18 மாதங்கள் ஓடி, ஆடி, விளையாடி, முரண்பட்டு, ஒருமித்து, சண்டையிட்டு, நட்பு பாராட்டி என எத்தனையோ உணர்வுகளைத் தந்த நண்பர்களைப் பிரியவும், இவர்களை உள்ளடக்கிய வளாகத்தை விட்டு வெளியேறவும் என வலிந்து வந்த காலம், மௌன அழுகையாய், இறுதி உணவின் போதும் சரி, இவர்கள் இருவரிடமும் கிளம்புவதை சொல்லிவிட்டு வந்தபோதும் சரி, எவருக்கும் தெரியாமல் சில கண்ணீர் துளிகளைத் துடைக்க வைத்தது.
தமிழ்நாடு திரும்பி வந்துவிட்டேன். அடுத்து என்ன செய்வதென்பதில் எந்தத் தெளிவும் இல்லை. எனினும், எதுவும் கைகூடாதபோது சென்னையிலுள்ள புனித லூயி பார்வையற்றோர் இசைக்குழுவில் சேர்ந்து விடுவதற்கான வாய்ப்பை ஒரு நண்பர் மூலம் பெற்றிருந்தேன். என் குடும்பம் ஓரிரு திருமணங்களைக் கண்டிருந்ததால், முன் போல் என்னால் வெட்டியாக இருக்க முடியாது. இதற்கிடையே, அந்த இருவரிடமிருந்தும் கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன்; எங்கும் படித்துக் காட்ட கூடியவைதான். எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், ஒலிநாடா அவர்களின் குரலை ஒலிக்கும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தை வரையறுத்துக் கொண்டேன். அதற்குள் டேராடூனிலிருந்து அழைப்பு வந்தால் புறப்படுவது, இல்லையேல் சென்னை இசைக் குழுவிற்கு பயணப் படுவதென முடிவு. என் வரையறையின் கடைசிநாள் ஒரு வெள்ளிக்கிழமை. கடிதக்காரரின் வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் வராத நிலையில், அன்றிரவு சென்னை புறப்படுவதாக திட்டம். ஆனால், இசைக் குழுவிற்காக புறப்படவேண்டிய தேவை நேரவில்லை. அன்று காலை 11 மணிக்கு அழைப்புக் கடிதம் கிடைத்துவிட்டது. இப்போதும் சென்னைதான் புறப்பட்டேன்; டேராடூனுக்கு பயணச் சீட்டு பதிவதற்காக. கணிப்பொறி இல்லாத அந்தக் காலங்களில், எங்கிருந்து வண்டி கிளம்புகிறதோ அங்கிருந்துதான் பதிவு செய்ய முடியும். பயணப் பதிவு கிடைக்காததால், சென்னையிலிருந்து டெல்லி வரை 36 மணிநேரம் என் பெட்டியைக் கீழே வைத்து, அதன்மீது அமர்ந்து பயணம் செய்த முதல் பட்டறிவையும் அப்போதுதான் பெற்றேன். வேலை என்னும் வேட்கையும், அவர்களைச் சந்திக்கப் போகும் ஆவலும் இதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்னும் நிலையைத் தந்திருக்கலாம்.
வளாகம் மீண்டும் வரவேற்றது. கூடுதல் இயக்குனரைப் போய் பார்த்தேன். நான் வேலையை ஏற்கவேண்டிய இடத்தில் அலுவலர் ஒரு வாரம் இல்லை என்றும் அதனால், அதுவரை நான் போய் வகுப்பறையில் பயிற்சியைத் தொடரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன்; பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி! நேரடியாக வகுப்பிற்குப் போனேன். பாலில் விழுந்த பழம் நழுவி என் வாயிலும் விழுந்த மாதிரி, அந்த ஆசிரியரும் ஒரு வாரம் விடுமுறை என்றனர். எங்களின் மகிழ்ச்சிக்கு ஏது எல்லை?
காதல் என்னும் ஒற்றைச் சொல் என்னைப் படுத்தும்போதெல்லாம், இவர்களை பொறுத்தவரை நட்பு மட்டுமே இயலும் என்றும், ஒருவேளை குடும்பங்களாக ஒருவரை ஒருவர் சந்திப்பது வேண்டுமானால் கைக்கூடலாம் என்று அடங்கிக் கிடந்த மனம், இந்த காலகட்டத்தில்தான் கட்டவிழ்ந்து விட்டதோ என்னவோ? அதிலும், ஒருவேளை முன்மொழிவு வருமானால், நான் இரண்டாவதாக குறிப்பிட்டிருந்தவரிடமிருந்தே வரலாம் எனக் கருதியதுண்டு. ஆனால், இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்த தேவன், எவரை எனக்காக எழுதி இருந்தாரோ, அவரையே எழுத வைத்ததில் வியப்பொன்றும் இல்லை.
குறித்த காலத்தில் என் வேலை இடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டேன். வாரம் ஒருமுறை பயிற்சி நிலையம் வருவது வாடிக்கை. வரும்போதெல்லாம் நிகழ்ச்சிக் குறிப்பில் சந்திப்பும் இடம்பெறும். இருப்பினும், அடிக்கடி நிகழ்ந்தக் கடிதப் பரிமாற்றத்தை இப்போது நினைத்தாலும் எனக்கே வேடிக்கை.
நான் வேலை செய்த இடத்தில், ஊழியர்களுக்கு வரும் கடிதங்கள் படிக்கப்பட்ட பிறகே உரியவர்களுக்குத் தரப்படும். ஆனால், எனக்கு வரும் கடிதம் பிரெயிலில் இருந்ததால், அந்த வசதியை அவர்களுக்குத் தரவில்லை. அவை, அலுவலர்களால் மேலும் கீழும் பார்க்கப்பட்டு, முன்னும் பின்னும் திருப்பப்பட்டு, பிரிக்கக்கூடப்படாமல் என்னிடமே தரப்பட்டுவிடும். இதை பார்வையுள்ள சக ஊழியர்கள் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.
பெரும்பாலும் கடிதங்கள் என் திருமதியிடமிருந்தே வரும். முதலில் நட்பிலேயே துவங்கியது. திடீரென ஒருநாள், ‘நீங்கள் அன்புள்ள என்று துவங்கி இருக்கிறீர்களே, இத்துவக்கம் இப்போதைக்கு மட்டுமா? இல்லை எப்போதைக்குமா?’ என்று கேட்டு, அவர்களது வீட்டில் அவர்களின் திருமணத்தின் நிலைப்பாடு மற்றும் என்னை மணக்க விரும்பும் அவரது சொந்த விருப்பத்தையும் வெளியிட்டிருந்தார்.
என் நண்பர்களிடம் வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிடுவதுண்டு. ‘வேலை கிடைக்காதபோது, வேலை கிடைக்கவில்லை என்னும் ஒரே வருத்தம்தான். வேலை கிடைத்துவிட்டாலோ குடும்பம், திருமணம், அலுவலகம், பொருளாதாரம், கடன் போன்ற எவ்வளவோ கவலை வந்துவிடுகிறது’ என்று. அதே மாதிரிதான், பொதுவாக பேசிக் கொண்டிருந்த வரையில் பெரிதாக எதுவும் இல்லை. முன்மொழிவு என்று வந்துவிட்டப் பிறகு பொருத்திப் பார்த்தல், சீர் தூக்கல் என்னும் சிக்கலான கோணங்களை நோக்கி மனம் மருளுவது எதார்த்தவாதிகளுக்கு உரியதுதான்.
என் வீட்டிலிருந்து எந்த உதவியும் பெரிய அளவில் கிடைக்காது என்பதால்தான் கல்லூரிப் படிப்பையே நான் நினைக்கவில்லை. நிறுவனத்தில் எந்த உடைகள் கொடுக்கப்பட்டனவோ, அந்த உடைகளைத்தான் நிறுவனத்திற்குள் இருக்கும்போது, நிறம் மங்கியே போனாலும் சரி, வேறு வழி இல்லாமல் உடுத்துவேன். மொத்தத்தில், என் மொத்தத் தேவைகளுக்கும் இருந்த பொருளாதார அடிப்படை மிகமிகக் குறுகியது. அவர்களைப் பொறுத்தவரை, அந்தக் காலத்திலேயே அவர்கள் வீட்டிலிருந்து ரூ. 300 கூட பணவிடை மூலம் மாதம்தோறும் அனுப்பப்படும். அவர்கள் வகுப்பறை வரும்போதே அவர்கள் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களின் வாசனை அவர்களது வருகையை அறிவித்துவிடும். கற்பனைச் சிறகு கட்டி மனம் பறந்தபோதெல்லாம், நான் அவர்களை அன்னாந்துதான் பார்த்திருக்கிறேன். எனில், நான் இப்போது செய்யவேண்டியது என்ன?
எனக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகளின் பட்டியலைதான் எழுதினேன். நான் கருப்பு; அவர்கள் சிவப்பு. நான் பத்தாம் வகுப்பு; அவர்கள் பட்டதாரி. பொருளாதாரத்தில் என் நிலை மோசம்; அவர்கள் நிலை போதுமானதாக இருந்தது. நான் தென்னிந்தியன் என்பதால் சென்னை வாசத்தையே விரும்புவேன்; அவர்கள் வட இந்தியர் என்பதால் அவர்கள் இலக்கு டெல்லியே. இன்னும் நான் எழுதிய சிலவற்றை என் நினைவு தொலைத்துவிட்டது. விரைந்தது பதில். எல்லாம் நான் விரும்பிய வகையிலேயே இருந்தது; ஒன்றே ஒன்றைத் தவிர. ஆனால், அந்த விரும்பாத ஒன்று என்னை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அது வேரொன்றுமில்லை; எல்லாவற்றிற்கும் சாதகமாக எழுதியவர் சென்னை மட்டும் வரமுடியாது என்று எழுதி இருந்தார். என் மனமோ, அவர்களைவிட சென்னையை அதிகமாக கட்டிக்கொண்டு அழுதது. அன்றுதான் புரிந்தது, நானும் அவர்களை மிகவும் விரும்பி இருக்கிறேன் என்பது. ஏனென்றால், அவர்கள் எனக்கு கிடைக்கப் போவதில்லை என்று என் வரையில் முடிவு செய்ததும், வருத்தத்தின் உச்சமெதுவோ அங்கு மனம் ஏறி நின்றுகொண்டு கீழே இறங்க மறுத்துவிட்டது. சில உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என்றுமே சொற்கள் முழுமையாக விளக்கியதில்லை. தனக்கு அந்நிலை வரும் வரை, எவருக்கும் அது முழுமையாக விளங்கியதுமில்லை. பக்கம்பக்கமாக எழுதித் தீர்த்தாலும், ‘அடடா!’ அல்லது ‘ஓஹோ!’ என்பதற்கு மேல் மிகப் போவதும் இல்லை. இருந்தாலும், எழுதவென கிளம்பிவிட்டப் பிறகு, இயன்றவரை எடுத்துச் சொல்வது எனது கட்டாயம் ஆகையால் இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகிறேன். என் நிலையைப் பார்த்து, நான் தங்கியிருந்த குடியிருப்பின் பக்கத்திலிருந்த காஞ்ச்சி என்ற பெண்மணி எனக்காகப் பேச பயிற்சி நிலையம் வந்தார். எங்கள் இருவருக்குமே தேடல் இருந்ததால், விட்டுவிட மனமில்லை. அதனால், தற்காலிக தீர்வு ஒன்று கிடைத்தது. அத்தீர்வு பின்னர் என் மனைவிக்கு விருப்பம் இல்லை எனினும் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
அதற்கும் முன்னால், கவலையை மறக்க மது உதவும் என்று நண்பர்களில் சிலர் கூற, அப்போதைக்கு மாணவர்களுடன் சகஜமாக பழகிய சுருக்கெழுத்து ஆசிரியரிடம் அதைக் கூறினேன். இன்றும் அவர் சொன்னது பசுமையாக நினைவில் இருக்கிறது. “கொஞ்ச நேரம் மறந்துவிடும் வாய்ப்பு இருக்கலாம்தான். ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் அக்கவலைக்கு நாம்தானே முகம் கொடுக்கப்போகிறோம்?” என்றார். அதுவரையில் நான் ருசித்ததுகூட இல்லை என்பதும், எனது 45 வயது வரை அதை ருசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பதும் ஒருவேளை நான் அதற்கு அடிமைப்படாததற்கு அந்த நண்பரும் காரணமோ என்னும் நன்றி உணர்வை, இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.
ஒலிநாடா பதிவுகள் மீண்டும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதில் இடையோடிக் கிடந்த என் சோகம், என் மனைவியால் திருமணத்திற்குப் பின் நையாண்டி செய்யப்பட்டதை உங்களைத் தவிர யாரிடம் சொல்ல முடியும்?
என் கிறித்துவ நம்பிக்கையின்படி நான் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். இதிலிருக்கும் நன்மை, தீமை பற்றி மனிதனாகிய எனக்குத் தெரியாது ஆகையால் அவரது விருப்பப்படி எது நிகழ வேண்டுமோ அதை நிகழ்த்தும்படி தனிமையில் வேண்டுவேன். எனக்கும் தீவிர விருப்பம் இருந்தது உண்மைதான். ஆனால், அதை நான் என் பொறுப்புகளின் அடிப்படையில் பொருத்திப் பார்த்து நிதானித்தேன். ஆனால், அவர்கள் தங்களது பொறுப்புகளை என்மீது முழுதும் சுமத்திவிடும் நம்பிக்கையில், நிறைய விட்டுக் கொடுத்திருக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவரை இழப்பு, பிரிவு, நிறைவின்மை போன்றவற்றை தந்திருக்கலாம். ஆனால், எனக்கு வாழ்க்கையில் நல்ல துணையென மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த சமுதாயத்திற்கு உதவும் குடும்பமாக எங்களை அடையாளப்படுத்தியதில் அவர்களது பொறுப்பு மிகமிகக் கூடுதல் என்றே கருதுகிறேன்.
காஞ்ச்சி என்னை மகிழ்ச்சியூட்டும் செய்தியுடன் திரும்பி வந்தார். சென்னையில் இருக்க முயற்சித்துப் பார்க்கலாம் என்றும், நடைமுறை சிக்கல் இருந்தால் மாற்று இடங்களைப் பற்றி யோசிப்பது கட்டாயம் எனவும் கருத்தொற்றுமை ஏற்பட்டது. ஆனால், நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தவுடன், வீடு போன்ற அசையாச் சொத்துகளில் இறைவன் எனக்கு கைமேல் பலன் தந்ததால், என் மனைவி பலமுறை விரும்பி வற்புறுத்தியும் சென்னையை விட்டு மாற்றலாகி வட இந்தியா போகவில்லை என்பது இன்றளவும் என் பேரில் என் மனைவிக்கு இருக்கும் நிறைவின்மைகளில் முதன்மையானது.
சரி, கொஞ்சம் இவர்களை விடுத்து என் அம்மா பக்கம் திரும்புவோம். திருமணம் என்னும் சொல் என்னால் விரும்பப்பட்ட காலத்திலிருந்தே அது ஒரு பார்வையற்றவருடன்தான் என்பதில் எப்போதுமே எனக்கு மாறுபட்ட கருத்து இருந்ததில்லை. எதையும் பலமுறை யோசித்தே செயல்படும் இயல்புடைய எனக்கு, இதில் சரியான தெளிவு இருந்து வந்திருக்கிறது. என் நிலையில் இருக்கும் எந்தப் பெண்ணும் என்னை மணக்க விரும்பாதபோது, என்னை மணக்க விரும்பும் பெண் இல்லாமையை அல்லது இயலாமையைச் சரிசெய்துகொள்ளும் பொருட்டே அந்த முடிவிற்கு வருவதாகத் தோன்றியது. அதிலும், பாலியல் என்பது உடலையும் கடந்து, ஒரு பெண் பார்க்கும்போது பதிலுக்கு பார்க்கப்படும் ஆணின் பார்வையில்தான் நிறைவு என்பது குறிப்பிட்ட விழுக்காடு அடங்கியிருக்கிறது என்னும் உளவியல், என்னை என் கருத்தில் உறுதிபடச் செய்தது.
ஆனால், என் அம்மாவின் விருப்பம் வேறு. அவர்களின் தமயன்வழிப் பெண்கள் இருந்ததால், அவர்களில் ஒருவரை எனக்குப் பேசி முடிக்க மிகவும் விரும்பினார்கள்; எல்லா சராசரி பெற்றோர்கள் மாதிரிதான். எனக்கு கனரா வங்கியில் வேலை கிடைத்தது, அவர்களின் ஆவலைக் கூட்டி இருக்கலாம். வேலையில் சேரும் முன், வீட்டிற்குப் போயிருந்தேன். என் அம்மா இதைப் பற்றி பேசும்போதெல்லாம், நான் வேலையில் சேர்ந்த பிறகு திரும்பி வருவதாகவும், வந்த பின் பேசலாம் என்றும் விடைபெற்றுக் கொண்டேன். ஆனால், எனக்கு வேலைக்கான உத்தரவை வங்கியிலிருந்து பெற்ற உடனேயே, என் மனைவிக்கு நான் என் உறுதிமொழியைத் தந்துவிட்டேன். அதன் பிறகே, என் தட்டச்சு ஆசிரியருக்கு தகவலைச் சொன்னேன். அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? இது அவருக்கு, அதாவது என் மனைவிக்குத் தெரியுமா என்றுதான் கேட்டார். அவரது வகுப்பில்தான் இதற்கான அடிப்படை அமைந்திருந்தாலும், அதை அவர் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் எங்களது வரம்பை நாங்கள் கடந்ததில்லை. எங்களது உறவு மிகத் தாமதமாகவே பயிற்சி நிலையத்திற்கு தெரியவந்தது. இதனால்தான், இக்கட்டுரையைக் காதலர் தின சிறப்பிதழில் எழுதியிருக்கிறேன்.
காதலித்தவர்கள் திருமணம் செய்ய உதவிய வேலண்டைன் அவர்களது நினைவாகத்தான் காதலர் தினத்தைக் கடைப்பிடிக்க உலகம் துவங்கியது. ஆனால், பாலியலை முன்னிலைப்படுத்தும் வகையில் இன்றையக் கொண்டாட்டங்கள் இளைஞர்களால் வகைப்படுத்திக் கொள்ளப்படுவது வருத்தத்திலும் வருத்தம்.
நான் அடிக்கடி வலியுறுத்துவது, காதலும் பக்தியும் உயர்வான உறவுகள் மட்டுமல்ல; மறைவானதும்கூட. அது அடையாளப்படுத்தப்படும்போது போலியாகிவிடுகிறது. எனவே, பிறர் அறிய பச்சை குத்துவது, ஒருவரை அன்பு பாராட்டுவதாக விளம்பரப்படுத்துவது, பரிசுகளை முன்னிலைப்படுத்துவது போன்றவை வலுவான காதல் அடிப்படைகளாகமாட்டா. உண்மையில் காதலித்தவர்களுக்குத் தெரியும், அவர்களுக்கான நாளாக ஒரு நாளைக் குறிப்பிடுவது எவ்வளவு பொறுப்பற்றது என்பது. உருகி உருகி உருக்குலைந்து. அன்பால் பெருகி அதை நினைந்து, வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு, யுகமென எதையும் கடந்து நிற்கும் இதயத்திற்கு குறிப்பிட்ட நாள் என்பதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது!
அவர்கள் செலவு செய்யும் தொகைக்கு ஈடாகச் செலவு செய்ய விரும்பிய என் செயலும் சரி, நான் சேலை ஒன்றைத் தர விரும்பியபோது, திருமண வாக்குறுதியைத் தந்தாலொழிய பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாய் அவர் நின்றபோதும் சரி, காதலில் கொள்கைப் பிடிப்புகள் இருந்ததாகவே தோன்றும். சரியான வேலை கிடைக்காவிட்டால் என்னை மணக்க முடியாது என்று வெளிப்படையாக அவர் கூறியபோது, துவக்கத்தில் சலிப்புத் தட்டினாலும் அதிலிருந்த எதார்த்தத்தை என்னால் புறந்தள்ள முடியவில்லை.
‘கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா அவன்வாயிற் சொல்’
என்னும் ஔவையின் வாழ்வியலை எவர்தான் மறுக்க இயலும்?
டெல்லியில் வேலை உத்தரவைப் பெற இருந்தபோது ஆக்ரா, மீரட், அலிகட் மற்றும் லக்னோ போன்ற நான்கு உ.பி.யின் நகரங்களில் ஒன்றில் தருவதாகக் கூறினர். லக்னோ தவிர ஏனைய நகரங்கள் டெல்லிக்கு பக்கத்தில் இருந்ததால், அவற்றில் ஒன்றிலேயே உத்தரவு தரப்பட்டால் நல்லது என நினைத்தேன். ஆனால், லக்னோவிற்குதான் அனுப்பப்பட்டேன்.
எனக்கு வருபவர் வேலையில் இருக்கவேண்டிய தேவை இல்லை என்பதை அவ்வப்போது நான் வலியுறுத்தி வந்ததால், வேலைக்கான ஓரிரு முயற்சிகளுடன் 1988 ஜனவரி மாதத்தில் அவரின் பயிற்சிக் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. அம்முயற்சிகளும், அவர்தம் தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யதான். பயிற்சியை முடித்துப் போனவர், கடைசி நேரத்தில் ஒரு அதிர்ச்சி தந்து போனார். எங்களுக்குள் இருந்த ஒரு பிணக்கைக் காரணம் காட்டி, முருகல் நிலையின் கடிதம் ஒன்றை என் அலுவலக விலாசத்திற்கு அனுப்பி இருந்தார். நிலை கொள்ளுமா எனக்கு?
லக்னோவிலிருந்து டேராடூனுக்கு சுமார் 540 கி.மீ. இருக்கலாம். பயண முன் பதிவுக்காக முயற்சித்துப் பார்த்தேன். அன்றே போகவேண்டுமானால் வாய்ப்பில்லைதான். ஆனால், விடுவதாக இல்லை. டேராடூனுக்கு நேரடி வண்டி இருந்தாலும் அதில் தாமதமாகுமென நான் கருதியதால், அலுவலகம் முடிந்ததும் அடுத்த நாளுக்கு விடுமுறை பெற்றுக்கொண்டு, உடனடியாக தொடர்வண்டி நிலையம் சென்று, உடனடி தொடர்வண்டி எந்த வழியில் எனப் பார்த்தேன். 6 மணி வாக்கில் கிளம்பிய பஞ்சாப் மெயில் கிடைத்தது. அதில் ஏதோ ஒரு பெட்டியில் கீழே அமர்ந்து, சாரங்பூர் வழியாக லுக்சர் என்னும் சந்திப்பு வரை போனேன். அங்கிருந்து இன்னொரு வண்டி டேராடூனுக்கு இருப்பதாக அறிந்தேன்; லுக்சரில் இறங்கிக் கொண்டேன்.
இரவு மணி 3 இருக்கலாம். ஜனவரி மாதமாகையால் கடுங்குளிர். அதனால், ஆள் நடமாட்டம் மிகக் குறைவு. வரவேண்டிய வண்டியின் நேரம் 5 மணிதான். நிலையத்திலிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். நான் உடுத்தியிருந்த குளிருக்கான உடைகள், அன்றைய குளிருக்குப் போதுமானதாக இல்லை. அதிலும், அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கிளம்பியதால், முன்னேற்பாடு என்பதெல்லாம் எதுவுமில்லை. டேராடூன் நோக்கி போகப்போக குளிரும் கடுமையாகிவிடும். இருக்கையில் அமர்ந்த என் உடல், உதறல் கண்டுவிட்டது. குளிரைச் சமாளிக்க முடியவில்லை; தனிமை சலிப்பூட்டியது; உறக்கமும் இல்லை. கிளம்பும் பரபரப்பில் சாப்பிடவும் இல்லையாகையால், உடலும் சோர்வு கண்டுவிட்டது.
எனக்குள் இருந்த எதிர்மறை, என்னைக் கேள்வி கேட்டது. ‘அட முட்டாளே! எந்த இலக்குக்காக இவ்வளவு போராட்டங்கள்?’ என் எதிர்மறைக்குத் தெரியுமா, ‘கண்ணியர்க் கடைக் கண்ணை காட்டிவிட்டால், மண்ணில் மா மலையும் ஓர் கடுகாம், காளையர்க்கு’ என்பது?
ஒரு வழியாக, அவரைப் போய் பார்த்தேன். “நீங்கள் நேரில் வந்து என்னை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அக்கடிதம் என் குழம்பிய நிலையில் எழுதப்பட்ட ஒன்று. வேண்டுமானால், அங்கிருந்தே இன்னொரு கடிதத்தை நீங்கள் அனுப்பியிருக்கலாம். உங்களை யார் இப்படிக் குழம்பச் சொன்னது?” என்றாரே பார்க்கனும்!
ஆனால் ஒன்று, பின்னர் பயணங்கள் சுகமோ சுகம். வேலையில் இல்லாதபோது பலமுறை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்திருக்கும் நான், அங்கிருந்து திரும்பும்போதுதான் முதல்முறையாக லக்னோ வரை இரண்டாம் குளிர்சாதனப் பெட்டியில் பயணிக்கும் பட்டறிவைப் பெற்றேன். முதல் மாத ஊதியம் வாங்கியிருந்ததால், முதல் வகுப்பில் முயற்சிக்கப் போனேன். முதல் வகுப்பில் காத்திருப்போர் பட்டியல் என்றும், இன்னும் ரூ. 8 கூடுதலாகக் கொடுத்தால் இரண்டாம் குளிர்சாதன வகுப்பில் பயணிக்கலாம் என்றும் பதிவாளர் கூறினார். இப்போது எட்டு ரூபாய் எல்லாம் ஒரு பொருட்டில்லை. மனமார்ந்த நன்றிகளுடன் பயணச் சீட்டை பெற்றுக்கொண்டேன். எனக்காக எழுதப்பட்டிருந்த கடிதமும், நான் நேரடியாக போகவே, கையிலேயே தரப்பட்டுவிட்டது. பிறகென்ன? என் பயணத்தின்போதே பலமுறை என் நெஞ்சில் இளைப்பாறிய அக்கடிதம், என் விரல்களாலும் வருடப்பட்டதால், இனிய பயணத்திற்கும் வழிவகுத்தது. அடுத்த பயணம், அவரது வீட்டிற்குத்தான் என்பதை நான் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை.
மார்ச் மாதத்தில், பெற்றோரைப் பார்க்க வீட்டிற்கு வரும்படி அவரிடமிருந்து அழைப்பு வந்தது. மீண்டும் டேராடூன் போய், என் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, டெல்லி வழியாக, முதல்முறையாக ஹரியானாவில் போய் அவர்கள் சொல்லிய நிறுத்தத்தில் இறங்கி, அவர்களது சிற்றூருக்கு வாகனம் எதுவும் கிடைக்காததால், எவ்வளவு தொலைவு என்பது தெரியாமலேயே நடக்கத் துவங்கிவிட்டோம். கிட்டத்தட்ட 7 கி.மீ. நடக்க வேண்டியிருந்தது என்பது பின்னர்தான் தெரிந்தது.
அப்போதுதான் எண்ணிப் பார்த்தேன் இயற்கையின் விளையாட்டை. எங்கு பிறந்தேன்? எங்கெல்லாம் வளர்ந்தேன்? இப்போது வாழ்க்கைத் துணைக்காக எங்கு நடந்துகொண்டிருக்கிறேன்? இயற்கை, எவரை எவருடன் சேர்க்கும் என்பது எவருக்கு அத்துப்படி? திருமணம் என்னும் திருப்பம் என்னை இங்கு கொண்டுவந்து நடக்க வைக்குமென வேடிக்கைக்காகக்கூட எண்ணியதுண்டா? என் ஊர் எங்கே, இவர் ஊர் எங்கே? இருவரையும் இணைக்கவிருக்கும் இறைவன்தான் எங்கே? ‘பூஜியத்தை உள்ளே வைத்து, ராஜியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்துகொண்டால், அவன்தான் இறைவன்’ என்னும் கண்ணதாசனின் வரிகள் எனக்குள் நினைவாய் முணுமுணுத்தன.
என் மனைவியின் தந்தைக்கு என்னைப் பார்த்ததில் வருத்தமோ வருத்தம். எனக்குப் பெண் தர அவருக்கு முற்றிலும் விருப்பம் இல்லை. அதை என்னிடம் வெளிப்படுத்தவில்லையே தவிர, தன் பெண்ணிடம் முடிந்தவரை அதற்கான காரணங்களை விளக்கிப் பார்த்தார். காரணமா? நிறம், தோற்றம், அழகு, கவர்ச்சி போன்ற எந்த உடலியல் ஈர்ப்பும் அவர் வரையில் என்னிடம் இல்லாததும், நான் தொலைவிற்குச் சொந்தக்காரன் என்பதும்தான். ஆனால், ‘வயது வந்து வலையை விரிக்கும், மாட்டிக்கொண்டு நீ ரசி’ என்னும் கவி வரி அவர் பெண்ணுக்குப் பொருந்தி வர, இதையெல்லாம் அவர் ஏற்பதாக இல்லை என்பதோடு, என்னை மணக்கவே உறுதி காட்டியதால், வேறு வழி இல்லாமல் விருப்பமின்றியே ஏற்பாடுகள் துவங்கின.
ஏப்ரல் 7, 1988. இக்கட்டுரையை எழுதுவதற்கான அடிப்படையை உருவாக்கிய தீர்மானத் தேதியாக முடிவு செய்யப்பட்டு, என் மனைவியால் கடிதம் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அடடா! என் அம்மா, அப்பா இல்லை; அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லை; என் ஊர் மக்கள் இல்லை; வேலையில் சேர்ந்து 4 மாதங்களே முடிந்திருந்ததால், அலுவலகத்திலிருந்தும் யாரையும் அழைக்கப்போவதுமில்லை. ஏப்ரல் 6-ஆம் நாள் அலுவலகத்தில் வேலை செய்தேன்.
ஒரே ஒருநாள் விடுப்பு பெற்றுக்கொண்டு, சிற்றுண்டி விடுதி நடத்திவந்த நண்பர் ஒருவருடன் இரவு டெல்லிக்குப் புறப்பட்டேன். கையில் இருந்ததெல்லாம் ஒரு ஆயிரம் ரூபாய்தான். சேலை மற்றும் சில பொருட்களை நண்பரின் அம்மாவின் அறிவுரைப்படி வாங்கிக்கொண்டேன். தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்தாலும், பெட்டியைக் கண்டுபிடிக்க முடியாமல், இரவு முழுதும் பொதுப் பெட்டியில் அமர்ந்து டெல்லிக்குப் பயணம் செய்தோம். டேராடூனிலிருந்து வந்த சில நண்பர்கள் டெல்லியில் இணைந்துகொள்ள, ஹரியானா போய் சேர்ந்தோம்.
முதலில் என்னுடன் வந்திருந்த இப்ராஹிம் மூசா, பாண்டியன், கருப்பையா, ஸ்ரீதர், மனோகரன், அப்போதைக்கு சுருக்கெழுத்து ஆசிரியராக அங்கு இருந்த திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் பெயர் நினைவிற்கு வராத இன்னும் ஒருவரென மொத்தம் 7 பேர்தான் என் திருமண நாளன்று என் உறவுகளாய் வந்த வரவுகள். மாலை 3 மணிக்கு திருமணம் முடிந்தது! திருமணமென்றால் எப்படி என்றா கேட்கிறீர்கள்? 5 ரூபாய் புத்தம் புதிய தாள்கள் மாலையாக தொடுக்கப்பட்டு, என் மனைவியால் என் கழுத்தில் அணிவிக்கப்பட்டது, அவ்வளவுதான். சரி, நமக்கு அதெல்லாமா முக்கியம்? உடனே உணவு, பின்பு புறப்பாடு.
காலையில், நிறுத்தத்திலிருந்து என் மனைவியின் சிற்றூருக்கு போகும்போது எங்களை கொண்டுபோன ஊர்திக்காரரிடமே மாலை 4 மணிக்கு வரும்படி சொல்லியிருந்தோம். சரியாக 4 மணிக்கு அவரும் வந்துவிட, என் மனைவியை அழைத்துக்கொண்டு, தரப்பட்ட வீட்டுப் பயன்பாட்டு பொருட்களுடன் டெல்லி வந்து, நண்பர்களை டேராடூனுக்கு வழி அனுப்பிவிட்டு, லக்னோ கிளம்பினோம். ஏன் முன்பதிவு செய்யத் தோன்றவில்லை என்று தெரியவில்லை. மீண்டும் இரவு முழுதும் பயணம். 8-ஆம் தேதி காலையில் லக்னோ வந்து, உடன் வந்த நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டேன். யாருக்கும் எனக்குத் திருமணம் நடந்ததே தெரியாது. அப்போது என்னுடன் மேலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு தமிழருக்கு மட்டும் தெரியும். அவர்தான், அன்று மாலை மூன்றரை மணிக்கு, கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தார். நண்பரின் வீட்டிலிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு, நான் குடியிருந்த வீட்டிற்குப் போனேன். அன்று இரவு தூங்கி இருக்க முடியுமா? எனவே, தொடர்ந்து மூன்று இரவுகள் தூங்கா இரவுகளாகக் கழிந்த முதல் அனுபவமும் அப்போதுதான்.
இறைவன் திருவருளால், எல்லாம் எனக்கு தாமதமின்றிக் கிட்டியதாக உணர்கிறேன். எனக்குத் திருமணமானபோது, வயது 24 கூட முடியவில்லை. என் குழந்தை என் கைகளில் தவழ்ந்தபோது, எனக்கு வயது 25 கூட இல்லை! 30 வயது முடிந்தபோது, என் சொந்த வீட்டிற்கு குடிவந்துவிட்டேன். எப்போதாவது நினைக்கும்போது நிறைவு தரும் நிகழ்வுகளாக இவைகளெல்லாம் என்னை மகிழ்வித்தாலும், திருமணத்தை மட்டும் என் அம்மாவிற்கும் என் வீட்டாருக்கும் தெரியாமல் செய்யவேண்டிய கட்டாயம், நான் பார்வையுள்ள பெண்ணைதான் மணக்க வேண்டும் என்னும் அவர்களது கட்டாயம்தான்.
என் மனைவி கருத்தரித்த ஐந்தாம் மாதத்தில்தான் என் அம்மாவிற்குக் கடிதம் எழுதி, என் மனைவியின் புகைப்படத்தை இணைத்து அனுப்பினேன். எதிர்பார்த்தபடியே ஏமாற்றம், இயலாமை, சலிப்பு அனைத்தையும் தாங்கி வந்தது பதில். என் இரண்டாவது அண்ணனுக்கு முன்பே நான் திருமணம் செய்துகொண்டேன் என்பதால், அவரது திருமணத்திற்கு நான் போகவில்லை. இரு வீட்டாரும் எங்கள் திருமணத்தை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை என்பதால், எங்கள் குழந்தை பிறப்பின்போது எங்கள் சுமைகளை நாங்களே சுமக்க நேர்ந்தது. என் சொந்த முடிவுகளில், ஆய்ந்து முடிவெடுத்த பின் எப்போதும் பின்வாங்கியதில்லை. எனவே, காலத்திற்காக காத்திருந்தேன்.
முதலில் என் மனைவியின் வீட்டாரிடமிருந்து அழைப்பைப் பெற்றோம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து என் வீட்டிலிருந்தும் அழைப்பின் கடிதம் கிடைக்கப் பெற்றோம். மெல்ல மெல்ல முருகல் தளர்ந்து, மெருகேறத் துவங்கிய உறவுகளின் உருக்கத்தில் கரையத் துவங்கின மனங்கள். அம்மாவையும் மனைவியையும் ஒருசேர வைத்து சமாளிக்கும்போது ஏற்படும் சிக்கல்களை மொழி தெரியாததால், என்னை சார வேண்டியதாயிற்று. எனவே, அது என் மொழிபெயர்ப்புக்குட்பட்டது. அதனால், என் வசதிக்கேற்ப மாற்றிச் சொல்லி பல நேரங்களில் பிணக்குகளை தவிர்க்கும் வசதியை, என் மனைவி தமிழ் கற்கும்வரை பெற்றிருந்தேன்.
எது எப்படியோ, எங்கள் குடும்பம் பல நிலைகளில் பார்வையற்ற இணைகளைத் தேடும் பார்வையற்றவர்களின் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் குடும்பமாக பலருக்கு திகழ்ந்திருக்கிறது. யாருக்காவது குழப்பம் இருந்தால், அவர்களது பெற்றோரை எங்கள் வீட்டிற்கு அழைத்து, எங்களோடு ஒருநாள் இருக்கச் சொல்லி, எங்களது நடைமுறைகளைக் கவனிக்க வைத்திருக்கிறோம். அப்படி பார்த்து போய், ஒரு ஐந்தாறு திருமணங்கள் பார்வையற்றவர்களுக்கிடையே நடைபெற்றிருப்பது எங்களின் குடும்ப வாழ்க்கையின் வெற்றியாகவே கருதுகிறோம்.
கலப்புத் திருமணம் புரிபவர்கள், ஒருவருக்கொருவர் அடுத்தவருடைய நடைமுறை, கலாச்சாரம் போன்றவற்றை மதிப்பதென்பது கட்டாயத்திலும் கட்டாயம். என் மனைவியின் வீட்டிற்குப் போகும்போது, முதலில் பெண் வாங்கி வரும் எதையும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதை, ஒரு கௌரவக் குறைச்சலாக எண்ணி நானும் பலமுறை உள்ளுக்குள் முருகி இருக்கிறேன். ஆனால், அது எனக்கு மட்டுமில்லை; எந்த மருமகனுக்கும் பொருந்தும் என்னும்போது நாளடைவில் பழகிக்கொண்டேன். அடுத்தது, வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவியையும் கணவனையும் வெவ்வேறு அறைகளுக்கு பிரித்துவிடுவார்கள். நமது சமூகத்தில், உணவு பரிமாறுவது போன்றவற்றை பெண் வீட்டிற்குப் போகும்போது, மனைவிக்குதான் கணவனின் விருப்பு வெறுப்புகள் தெரியும் என்பதால், மனைவியை அனுப்புவார்கள். ஆனால், அங்கு அதெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள வேறு யாராவதுதான் உணவு கொண்டுவந்து தருவார்கள். பெரும்பாலும் என் மனைவியின் வீட்டிற்குப் போகும்போது, மீண்டும் அவர்களை பார்க்க முடிவது திரும்பி வரும்போது ஏறும் பேருந்தில்தான் இருக்கும். கால மாற்றத்தால் இவையெல்லாம் கொஞ்சம் இப்போது மாறி இருந்தாலும், துவக்க நிலையில் இவை எல்லாம் வியப்பையும் சலிப்பையும் தந்தது உண்மைதான்.
நானும் என் மனைவியும் உணவு, கலாச்சாரம், நடைமுறை, சமயம், பழக்கவழக்கம், உடைகள், வாழ்க்கை முறை என அனைத்திலும் திருமணத்திற்கு முன் மாறுபட்டிருந்தவர்கள்; அதற்கு பின் ஒருவரோடொருவர் அனுசரித்துக் கொண்டவர்கள். மாற முடியாத இடங்களில், அடுத்தவர் உணர்வுகளை குறைத்து மதித்ததில்லை. இப்போதும் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள், தென் வட இந்திய உணவுகளைக் கேட்டு உண்ணுவதுமுண்டு. விட்டுக் கொடுத்தல் மற்றும் அனுசரித்தலைப் பொறுத்தவரை, நான் என் மனைவிக்கே மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மொழி கூடத் தெரியாமல், என்னோடு இணைந்து, இன்றளவும் எனது தேவைகளை உள்வாங்கி, எனக்காகவும், பிள்ளைக்காகவும், தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
சரி, நீங்கள் காதல் திருமணங்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால், காதலில் பல வகை உண்டு. அவற்றில் இரண்டை முக்கியமாக நான் கருதுகிறேன். ஒன்று, உணர்வுவயப்பட்டது; இன்னொன்று, உணர்ச்சிவயப்பட்டது. இதில், முதலாமதில் பெரும்பாலும் வெற்றி என்பது சாத்தியம்தான். ஆனால், இரண்டாமதில் வெற்றி என்பது எப்போதும் கேள்விக்குறியே. காதலிக்கும்போது, விட்டுக் கொடுத்தல் இரு நிலைகளிலும் அபாரமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு, உரிமை நிலைநாட்டல் அபாரமாக இருக்கும். பல குடும்பங்களில், தோல்வியின் துவக்கப்படி இதில்தான் துவங்கும். சரியான துவக்கமிருந்தால், முடிவும் சரியாகவே இருக்கும். திருமணம் என்பது ஆடுகளம் அல்ல; முடிந்தவரை விளையாடி, முடியாதபோது வெளியேற. அதிலும், அரசாங்க ஊழியர்களுக்கு அதில் பொறுப்புகள் இன்னும் அதிகம்தான். எனவே, காதலிப்பது ஒரு அருமையான அனுபவம். அது நமது குடும்பமாகும்போது, வாழ்க்கையின் வெற்றி. அவ்வெற்றி அடுத்த தலைமுறைக்கு பாடமாகும்போது, அதுவே சமூகத்தின் வரலாறு.
நீங்கள் வரலாறாக விரும்பினால், காதலிக்கும்போது உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் தெரிவியுங்கள். எவையெல்லாம் உங்களால் முடியுமோ அதை மகிழ்ச்சியோடு அறிவியுங்கள்; எவை எல்லாம் முடியாதோ, அவற்றை வருத்தத்தோடு பதிவு செய்துவிடுங்கள். முடியும் அல்லது முடியாது என்னும் இடைவெளியை உணர்ந்து, முடிவெடுக்கும் முழு உரிமையை உங்கள் இணைக்கு உருவாக்கித் தந்தால், பிணக்குகள் பெருமளவு பிற்காலங்களில் குறையும். உணர்ச்சியை முன்னிலைப்படுத்தாமல், இளைஞர்கள் நிதானித்து காதலில் முடிவெடுத்தால், அல்லது நல்ல நபரை தெரிந்துகொண்டால், பெரும்பாலும் பெற்றொர்கள் பிள்ளைகளின் விருப்பங்களை மறுக்கமாட்டார்கள்.
காதலிப்பவர்களிடம் பேசிப் பாருங்கள், குறைகளைச் சுட்டும்போது, அதெல்லாம் நாங்கள் திருமணத்திற்கு பின் சரிசெய்து கொள்வோம் என்பார்கள். குறைகளைப் பழகிக்கொள்வோம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, எப்படி உங்களால் சரிசெய்ய முடியும்? அவராக மாறாத வரை, எவரையும் எவராலும் மாற்ற முடியாது.
‘வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்தவர்கள் பாடமடி’ என்ற கவிஞனின் வரி, நம் வரையிலும் வெற்றிபெற, வாழ்வாங்கு வாழ்த்தி விடைபெற்றுக் கொள்கிறேன்.
(நன்றி: இணையத் தென்றல் மின்மடல் குழு)
குறிப்பு: ஒன்றின் வெற்றி இன்னொன்றின் தொடர்ச்சியில் இருக்குமானால், காதலின் வெற்றி குடும்பத்தில் இருந்தாக வேண்டும்! 30 ஆண்டு குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் மகிழ்ச்சியில், நமது பார்வையற்ற நண்பர்களின் குடும்ப அமைப்புகள், சிக்கல்கள், சுவாரசியங்கள் ஆகியவை நிறைந்த தொடர் ஒன்றை அடுத்த மாதத்திலிருந்து எழுதவிருக்கிறேன். படியுங்கள்; கருத்துகளைப் பகிருங்கள்.
--
கட்டுரையாளர் சென்னை கனரா வங்கியில் பணியாற்றிவருகிறார்.
தொடர்புக்கு: [email protected]