கடந்த வாரம் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்தபடி என் மகளுடன் அமர்ந்திருந்தேன். சட்டென ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. ‘கள்ளக் காதலால் பெண் தன் ஒன்றரை வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்டதாக கணவன் காவல் துறையில் புகார்’ என்ற செய்திதான் அது. பார்த்ததும் பகீர் என்றிருந்தது. ஆனாலும் எனக்குள் சில கேள்விகள் உதிக்கத் துவங்கியதன் விளைவே இந்தக் கட்டுரை.
‘காதல்’ - அது பிரபஞ்சத்தின் சுவாசம், உயிர்களின் தேடல் என்றெல்லாம் காதலை கலைத் திட்டம் போட்டு, கவிகள்தம் மொழிவழி பிரகடனம் செய்து வரும் வேளையில், காதல் எங்கு கள்ளக் காதலாய் மாறிப்போனது? காதல் என்றால் அன்பு என்று கற்றுத்தரும் ஆசான்களே! அன்பில் போலி உண்டோ? காதல் என்றால் அன்பென்று கூறிக்கொள்ளும் நாம், அதனோடு காமத்தை இணைத்ததை ஏனோ மறைத்துக் கூற முற்படுகிறோம்? காதல் உலகை கட்டியமைக்கும் கயிறு என்றால், அந்தக் கயிறு ஒரு குடும்பத்தை ஏன் கட்டவிழ விடுகிறது? குடும்பச் சூழலில் போலிகளாய் நாம் மாறிப்போன பின்னர், காதலை மட்டும் உண்மையை அரிதாரமாய் பூசிக்கொள்ளும்படி அழைப்பது நம் முட்டாள்தனம் அல்லவா?
ஆக, அன்பும் காமமும் இணைந்ததுதான் காதல் என்றால், அதை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதில் என்ன தடை இருக்க முடியும்? அன்பு அனைத்தையும் மாற்ற வல்லது எனில், கோபங்களையும் குறைகளையும் அது மறக்கவைக்கும் வஸ்துவாக மாறாதோ? பின், குடும்பங்களில் ஏது போர்? அன்பால் நாடுகளையே இணைக்கமுடியும் என்றால், காதல் கண் சிமிட்டும் வேளையில் எதையும் மாற்றி புது அன்பு அரணை ஏற்படுத்திடலாமே? காதல், அதாவது அன்பு எங்கு தோற்றுப் போகிறது? இதைப் பற்றி ஒரு பெண்ணாக நான் விமர்சிப்பது என் கடமை, உரிமை என நம்புகிறேன்.
காதலனுக்காகவோ காதலிக்காகவோ கால் கடுக்க நின்றவர்கள், நீதிமன்றங்களில் கலவரத்தோடு நிற்கிறார்களாம் - கூறுகிறது புள்ளி விவரம். அன்று கண்கள் வழங்கிய காதலுக்காகக் காத்துக் கிடந்தவர்கள், திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகளோடும் கடமைகளோடும் புதிய வடிவம் கொள்ளும் காதலுக்காகக் காத்திருக்க முடிவதில்லை. இதுவே ‘கள்ளக் காதல்’ என்ற சொல் அகராதியில் இடம்பிடிக்க முதல் காரணம் என்பேன் நான்.
அருகிருக்கும் களாக்காயைவிட, தொலைவில் இருக்கும் பலாக்காயின்மீது நமக்கு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அதுபோலதான், மனைவியோ கணவனோ காதலனாகவோ காதலியாகவோ இருந்தவரை காணப்பட்ட ஈர்ப்பு, நாம் அளித்த முக்கியத்துவம் எல்லாம், கணவன் மனைவி என்றானபிறகு மெல்லக் குறையத் தொடங்குகின்றன. பல உறவுகளோடு பகிர்ந்த தன் அன்பை, பாசத்தை ஒருவரோடு சுருக்கி, தன் உலகமே இவர் என்று கருதி, புது மணவாழ்வைத் துவக்கும் இருபாலரும், பிழைப்பிற்கான தேடலில் காதல் தொலைந்துபோவது பற்றி மறந்துபோகின்றனர். வாய் ஜாலங்கள் மட்டுமே மனித வாழ்வை நிறைவு செய்துவிடாது. சாப்பிடு என்று சொல்வதால் பசி அடங்கி விடுமா என்ன? அதுபோலத்தான், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்றதும் மனம் நிறைந்துவிடாது. உற்ற காலத்தில் வெளிப்படுத்தாத எந்த உணர்விற்கும் அர்த்தம் இல்லை.
மனிதனது வாழ்வு ஒருமுறைதான். இதில் பலதரப்பட்ட கடமைகளும் தேடல்களும் நம்மை விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக் கற்றுக்கொண்ட மனிதகுலத்தின் இருபெரும் பிரிவுகளும், தன் எதிரிணையை தனக்குத் துணையாக வரித்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்துதல் என்பது இயற்கையின் நியதி. அதனால்தான், ஆணின் பலமாக பெண்ணையும், பெண்ணின் பலமாக ஆணையும் இயற்கை நியமித்தது. இயற்கையின் இத்தகைய விதியை மறுதலித்து, காலத்தோடு போராடியபடி அன்பையும் காதலையும் பகிர மறந்து, பணத்தோடும் புகழோடும் குடும்பம் நடத்த ஓடிக்கொண்டிருக்கிற ஒரு தரப்பினர், தனது இணைக்குத் தந்துவிட்டதென்னவோ தனிமை, மன அழுத்தம், போராட்டம், வெறுமை இவைகள்தாம்.
இத்தகைய மனச்சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ தன்னை நோக்கி வரும் ஆறுதலை ஏற்கவே விரும்புகிறார்கள். ஆறுதலாய் கிடைக்கும் அன்பு, அழும் மனங்களை மெல்ல அசைக்கிறது. அன்பின் அளவு, ஆறுதலின் நெருக்கம் அதிகரிக்கும்போது, நட்போடு காமம் கலக்க, மீண்டும் காதல் பிறக்கிறது. ‘காதல் ஒருமுறைக்கு மேல் எவர்மீதும் மலராது’ என்று வசனம் பேச வாழ்க்கை சினிமா அல்லவே. அப்படியெனில், உலகில் எந்த உயிரும் நிம்மதி இன்றி, சாவின் விளிம்பில் நிற்பதே இயல்பாகிப் போயிருக்கும்.
நட்பாகவோ, காதலாகவோ பரிணமிக்கிற இதுபோன்ற நிகழ்வுகள், குடும்பம் என்ற பாரம்பரிய அமைப்பின் மீதான தாக்குதலாய் பார்க்கப்படுகிறது. இது அன்பின் அதீதம்; இயலாமையின் இலக்கணமாகக் கூட இருக்கலாம். எதுவாகினும், அதுபோன்ற உறவுகளை இச்சமுதாயம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ‘கள்ளக் காதல்’ என்ற பதத்தால், பாதை புதிது தெரிவோரை பதம் பார்க்கவே முயலும். இதற்கெல்லாம் தீர்வாக, எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்ந்தால் பிரச்சனையே இல்லை என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். எதிர்பார்ப்புகள் இல்லாமல், விட்டுக் கொடுத்து, நம் வாழ்வை பிறர் வாழ ஒப்புக்கொடுத்து, ஜடமாய் நாம் வாழ்ந்து என்ன பயன்?
அப்படியானால் தீர்வுதான் என்ன? வெறும் ஹார்மோன்களின் தூண்டல்களைக் காதல் என்று புரிந்துகொள்கிற மனதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம். இதே போலிப் புரிதலோடு குடும்பம் என்கிற அகண்ட நிலத்தில் கால்வைக்கும் எவரும் இத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். காதலில் இணைதலில் இருக்கிற சுதந்திரமும், ஏற்பும் விலகலிலும் இருத்தல் அவசியம். அதற்கு முதலில் காதல், கற்பு, தாலி, குடும்பம் போன்றவையெல்லாம் புனிதம் என்கிற நம் மனநிலை மாறவேண்டும்.
இதன்வழி, கள்ளக் காதல்களால் குற்றங்களே நிகழவில்லை என்பது என் கூற்று அன்று. உரியவர் தம் காதலை தந்துவிட்டாள் ‘கள்ளக் காதல்’ என்ற சொல் நிரந்தரமாய் ஒழியும்; தர இயலாதவர் தாம் சாகும்வரை இதுபோல் குற்றம் பேசியே மடிவர். ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறார்கள். ஆனால், அவை சொர்க்கமாக அமைகிறதா என்பது வினாக் குறி. காதல் போலியாகும்போது, மீண்டும் பிறக்கும் காதல் எப்படி ‘கள்ளக் காதல்’ ஆகும்? உங்கள் மனதையும் சற்று பேசவிடுங்கள். அது சொல்லட்டும், உங்கள் காதலின் அசல் மற்றும் போலிப் பட்டியல்களை.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
தொடர்புக்கு: [email protected]
‘காதல்’ - அது பிரபஞ்சத்தின் சுவாசம், உயிர்களின் தேடல் என்றெல்லாம் காதலை கலைத் திட்டம் போட்டு, கவிகள்தம் மொழிவழி பிரகடனம் செய்து வரும் வேளையில், காதல் எங்கு கள்ளக் காதலாய் மாறிப்போனது? காதல் என்றால் அன்பு என்று கற்றுத்தரும் ஆசான்களே! அன்பில் போலி உண்டோ? காதல் என்றால் அன்பென்று கூறிக்கொள்ளும் நாம், அதனோடு காமத்தை இணைத்ததை ஏனோ மறைத்துக் கூற முற்படுகிறோம்? காதல் உலகை கட்டியமைக்கும் கயிறு என்றால், அந்தக் கயிறு ஒரு குடும்பத்தை ஏன் கட்டவிழ விடுகிறது? குடும்பச் சூழலில் போலிகளாய் நாம் மாறிப்போன பின்னர், காதலை மட்டும் உண்மையை அரிதாரமாய் பூசிக்கொள்ளும்படி அழைப்பது நம் முட்டாள்தனம் அல்லவா?
ஆக, அன்பும் காமமும் இணைந்ததுதான் காதல் என்றால், அதை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதில் என்ன தடை இருக்க முடியும்? அன்பு அனைத்தையும் மாற்ற வல்லது எனில், கோபங்களையும் குறைகளையும் அது மறக்கவைக்கும் வஸ்துவாக மாறாதோ? பின், குடும்பங்களில் ஏது போர்? அன்பால் நாடுகளையே இணைக்கமுடியும் என்றால், காதல் கண் சிமிட்டும் வேளையில் எதையும் மாற்றி புது அன்பு அரணை ஏற்படுத்திடலாமே? காதல், அதாவது அன்பு எங்கு தோற்றுப் போகிறது? இதைப் பற்றி ஒரு பெண்ணாக நான் விமர்சிப்பது என் கடமை, உரிமை என நம்புகிறேன்.
காதலனுக்காகவோ காதலிக்காகவோ கால் கடுக்க நின்றவர்கள், நீதிமன்றங்களில் கலவரத்தோடு நிற்கிறார்களாம் - கூறுகிறது புள்ளி விவரம். அன்று கண்கள் வழங்கிய காதலுக்காகக் காத்துக் கிடந்தவர்கள், திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகளோடும் கடமைகளோடும் புதிய வடிவம் கொள்ளும் காதலுக்காகக் காத்திருக்க முடிவதில்லை. இதுவே ‘கள்ளக் காதல்’ என்ற சொல் அகராதியில் இடம்பிடிக்க முதல் காரணம் என்பேன் நான்.
அருகிருக்கும் களாக்காயைவிட, தொலைவில் இருக்கும் பலாக்காயின்மீது நமக்கு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அதுபோலதான், மனைவியோ கணவனோ காதலனாகவோ காதலியாகவோ இருந்தவரை காணப்பட்ட ஈர்ப்பு, நாம் அளித்த முக்கியத்துவம் எல்லாம், கணவன் மனைவி என்றானபிறகு மெல்லக் குறையத் தொடங்குகின்றன. பல உறவுகளோடு பகிர்ந்த தன் அன்பை, பாசத்தை ஒருவரோடு சுருக்கி, தன் உலகமே இவர் என்று கருதி, புது மணவாழ்வைத் துவக்கும் இருபாலரும், பிழைப்பிற்கான தேடலில் காதல் தொலைந்துபோவது பற்றி மறந்துபோகின்றனர். வாய் ஜாலங்கள் மட்டுமே மனித வாழ்வை நிறைவு செய்துவிடாது. சாப்பிடு என்று சொல்வதால் பசி அடங்கி விடுமா என்ன? அதுபோலத்தான், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்றதும் மனம் நிறைந்துவிடாது. உற்ற காலத்தில் வெளிப்படுத்தாத எந்த உணர்விற்கும் அர்த்தம் இல்லை.
மனிதனது வாழ்வு ஒருமுறைதான். இதில் பலதரப்பட்ட கடமைகளும் தேடல்களும் நம்மை விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக் கற்றுக்கொண்ட மனிதகுலத்தின் இருபெரும் பிரிவுகளும், தன் எதிரிணையை தனக்குத் துணையாக வரித்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்துதல் என்பது இயற்கையின் நியதி. அதனால்தான், ஆணின் பலமாக பெண்ணையும், பெண்ணின் பலமாக ஆணையும் இயற்கை நியமித்தது. இயற்கையின் இத்தகைய விதியை மறுதலித்து, காலத்தோடு போராடியபடி அன்பையும் காதலையும் பகிர மறந்து, பணத்தோடும் புகழோடும் குடும்பம் நடத்த ஓடிக்கொண்டிருக்கிற ஒரு தரப்பினர், தனது இணைக்குத் தந்துவிட்டதென்னவோ தனிமை, மன அழுத்தம், போராட்டம், வெறுமை இவைகள்தாம்.
இத்தகைய மனச்சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ தன்னை நோக்கி வரும் ஆறுதலை ஏற்கவே விரும்புகிறார்கள். ஆறுதலாய் கிடைக்கும் அன்பு, அழும் மனங்களை மெல்ல அசைக்கிறது. அன்பின் அளவு, ஆறுதலின் நெருக்கம் அதிகரிக்கும்போது, நட்போடு காமம் கலக்க, மீண்டும் காதல் பிறக்கிறது. ‘காதல் ஒருமுறைக்கு மேல் எவர்மீதும் மலராது’ என்று வசனம் பேச வாழ்க்கை சினிமா அல்லவே. அப்படியெனில், உலகில் எந்த உயிரும் நிம்மதி இன்றி, சாவின் விளிம்பில் நிற்பதே இயல்பாகிப் போயிருக்கும்.
நட்பாகவோ, காதலாகவோ பரிணமிக்கிற இதுபோன்ற நிகழ்வுகள், குடும்பம் என்ற பாரம்பரிய அமைப்பின் மீதான தாக்குதலாய் பார்க்கப்படுகிறது. இது அன்பின் அதீதம்; இயலாமையின் இலக்கணமாகக் கூட இருக்கலாம். எதுவாகினும், அதுபோன்ற உறவுகளை இச்சமுதாயம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ‘கள்ளக் காதல்’ என்ற பதத்தால், பாதை புதிது தெரிவோரை பதம் பார்க்கவே முயலும். இதற்கெல்லாம் தீர்வாக, எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்ந்தால் பிரச்சனையே இல்லை என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். எதிர்பார்ப்புகள் இல்லாமல், விட்டுக் கொடுத்து, நம் வாழ்வை பிறர் வாழ ஒப்புக்கொடுத்து, ஜடமாய் நாம் வாழ்ந்து என்ன பயன்?
அப்படியானால் தீர்வுதான் என்ன? வெறும் ஹார்மோன்களின் தூண்டல்களைக் காதல் என்று புரிந்துகொள்கிற மனதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம். இதே போலிப் புரிதலோடு குடும்பம் என்கிற அகண்ட நிலத்தில் கால்வைக்கும் எவரும் இத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். காதலில் இணைதலில் இருக்கிற சுதந்திரமும், ஏற்பும் விலகலிலும் இருத்தல் அவசியம். அதற்கு முதலில் காதல், கற்பு, தாலி, குடும்பம் போன்றவையெல்லாம் புனிதம் என்கிற நம் மனநிலை மாறவேண்டும்.
இதன்வழி, கள்ளக் காதல்களால் குற்றங்களே நிகழவில்லை என்பது என் கூற்று அன்று. உரியவர் தம் காதலை தந்துவிட்டாள் ‘கள்ளக் காதல்’ என்ற சொல் நிரந்தரமாய் ஒழியும்; தர இயலாதவர் தாம் சாகும்வரை இதுபோல் குற்றம் பேசியே மடிவர். ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறார்கள். ஆனால், அவை சொர்க்கமாக அமைகிறதா என்பது வினாக் குறி. காதல் போலியாகும்போது, மீண்டும் பிறக்கும் காதல் எப்படி ‘கள்ளக் காதல்’ ஆகும்? உங்கள் மனதையும் சற்று பேசவிடுங்கள். அது சொல்லட்டும், உங்கள் காதலின் அசல் மற்றும் போலிப் பட்டியல்களை.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
தொடர்புக்கு: [email protected]