பார்வையற்றவராக நடிப்பது என்பது எளிதான விஷயமில்லை. ஏனெனில், பார்வையற்றவராக நடிக்கும்பொழுது அருகில் இருக்கும் எந்த பொருளையும் பார்க்கக் கூடாது. பார்வை ஒரே பக்கம் நிலைத்திருக்கவேண்டும் போன்ற பல சிக்கல்கள் உள்ளன. எந்த ஒரு படமும் பார்வையற்று இருப்பதன் பல்வேறு படிநிலைகளைப் பற்றி விரிவாக பேசவில்லை என்றாலும்கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்வைக் குறைபாடுகளின் பல்வேறு தன்மைகள் பற்றி தமிழ் சினிமாவில் காண்பித்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.
சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் பார்வையற்றவராக நடித்ததற்குப் பிறகு, பல கதாநாயகிகள் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை உணரலாம். ‘குமுதம்’ திரைப்படத்தில் சவுகார் ஜானகி பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருப்பார், இயக்குனர் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் ரேவதி அவர்கள் பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த். அவரின் மனைவி கதாபாத்திரத்தில் ரேவதி வருவார். ரஜினி போன்ற மிகப்பெரிய கதாநாயகன் ஒருவரின் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் பார்வையற்றவராக வருவது அந்த கதாபாத்திரத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கும். அது இப்படத்தில் செவ்வனே நிகழ்ந்தது.
மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ என்கிற படத்தில் ஒரு பார்வையற்ற, கம்பீரமான, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். அவரது உடல்மொழி இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும். இயக்குனர் கே. பாலச்சந்தரின் கற்பனையில் உருவான இந்த படம், முதலில் மேடை நாடகமாக வெற்றிகரமாக பலமுறை நடத்தப்பட்டு, பின்னர் திரைப்படமானது. ஒரு ஆங்கிலப் படத்தில் வரும் பார்வையற்ற ஒருவரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போக, அதன் பாதிப்பில் இயக்குனர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இன்றளவும் மிகவும் முக்கியமான ஒரு படம் அது.
சிவாஜிக்குப் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை நாடிச் சென்ற திரு. கமல்ஹாசன், அவரின் நூறாவது படமான ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் பார்வையற்றவராக தோன்றியது குறிப்பிடத்தக்கது. பார்வையற்றவர் என்பதற்காக கருணை வேண்டி நிற்பவராக அல்லாமல், அவர்களும் இயல்பான மனிதர்களே என்னும் ஒரு விஷயத்தை ஆழமாக பதிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டிருந்தார் கமல். மேலும், ‘அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்கிற கவித்துவமான வரிகளை அந்தப் படத்தில் வைத்து, ஒரு இலக்கிய விவாதத்தையே உருவாக்கியிருப்பார். காரணம், நாயகனுக்கு கண்கள் கிடையாது. அவன் ஒவ்வொரு துளியிலும் அவள் முகத்தை காண்பது என்பது என்னவொரு உயர்தரச் சிந்தனை! அந்த வகையில் கமல் செய்தது மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.
‘இரவு சூரியன்’ என்கிற படத்தில் நடிகர் முரளி பார்வையற்ற நாயகனாக வருவார். இந்தப் படத்தின் சிறப்பம்சம், இது ஒரு ஆக்ஷன் படம் என்பதே. பார்வையற்றுப் போனாலும், கதாநாயகன் தன் எதிரிகளை பழிவாங்கும் கதை. பார்வைக் குறைபாடு என்பது ஒரு குறையாக இருந்தாலும், அவர்களின் மற்ற புலன்களின் கூர்மை அவர்களை பல அரிய செயல்களை செய்ய வைக்கும் என்பதை பல காட்சிகளின்மூலம் இதில் சொல்லியிருப்பார்கள். அதே போல், சமீபத்தில் வெளிவந்த ‘தாண்டவம்’ படத்தில் நடிகர் விக்ரம் பார்வையற்றவராக இருந்தாலும், தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கியும், துரோகியான தன் நண்பனை அழிக்கவும் செய்வார். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படங்கள் தோல்வியடைந்தது வருத்தமே. ஏனெனில் முரளி, விக்ரம் இருவருமே நல்ல நடிப்பை வழங்கி இருப்பார்கள்.
ஆனால், விக்ரம் அவர்கள் பார்வையற்றவராக நடித்து பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ஒன்று உண்டு; அது ‘காசி’. இயக்குனர் வினயன் மலையாளத்தில் கலாபவன் மணி அவர்களை வைத்து எடுத்த ‘வசந்தியும், லக்ஷ்மியும் பின்னே ஞானும்’ என்கிற படத்தின் மறு உருவாக்கமே இந்தப் படம். மலையாளத்தில் கலாபவன் மணி மிகத் திறமையாக இந்த பாத்திரத்தை கையாண்டிருப்பார். உண்மையிலேயே பார்வையற்ற ஒருவரைப்போல, கருவிழிகளை மேல்நோக்கி செலுத்திவிட்டு, வெறும் வெள்ளைப் படலத்தை மட்டும் வெளியில் காண்பித்திருப்பார். தமிழில் விக்ரமும் அதையே செய்தார். இப்படி தொடர்ந்து பலநாட்கள் படப்பிடிப்பில் செய்ததால், கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் தங்களின் இயல்பான பார்வைத்திறனை இழந்து, இருவரும் தவித்ததாக ஒரு காணொளியில் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நடிப்புக்காக இவ்வளவு சிரத்தை எடுத்த விக்ரம், கலாபவன் மணி இருவரும் மிகப்பெரிய பாராட்டுக்கு உரியவர்கள்.
சமீபத்தில் வெளிவந்த ‘குக்கூ’ திரைப்படம் இந்தப் பட்டியலில் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அதற்கு காரணம், இந்தப் படம் பதிவு செய்த அளவு வேறெந்த தமிழ் படமும் பார்வையற்றவர்கள் பற்றி பதிவு செய்யவில்லை என்பதே. இதற்கு முன், தமிழ் சினிமாவில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பவர்களாகவும், காமெடி நடிகர்கள் பார்வையற்றவராக நடித்து பணம் பறிப்பவர்கள் போலவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டனர். ஆனால், இந்தப் படம் உண்மையில் பெருநகரத்தில் வசிக்கும் பார்வையற்ற மனிதர்கள் சக மனிதர்களைப்போல எப்படிப்பட்ட இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்தது. அவர்களின் அன்றாடத் தொழில், அவர்களின் ரயில் பயணம், அவர்களின் நகைச்சுவை, அவர்களின் நட்பு, உறவு, காதல் உணர்வு என எல்லாமே மிகச்சிறப்பாக இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. அவர்களின் பாடும் திறமை முதல் அவர்களின் கற்பித்தல் திறமை வரை படத்தில் போகிற போக்கில் இடம்பெறச் செய்தது இன்னும் சிறப்பு. அந்த வகையில் ‘குக்கூ’ படம், ‘மனிதர்களே! கண்கள் மட்டும் நாம் இயல்பான மனிதர்கள் என்பதை தீர்மானித்துவிடாது. மனிதத்தன்மையும், சக மனிதன் மீது வைக்கும் நேசமும் மட்டுமே யார் பூரணமான மனிதன் என்பதை தீர்மானிக்கும்’ என்று அழுத்தமாக சொல்லியிருப்பார் இயக்குனர் ராஜு முருகன். அதேபோல், அட்டகத்தி தினேஷ் மற்றும் நாயகி மாளவிகா இருவருமே நன்றாக நடித்திருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் நாம் பார்வையற்ற கதாபாத்திரங்களைக் கண்டிருந்தாலும்கூட மேற்கண்ட படங்களே என்னைப் பொறுத்தவரை தமிழில் மிக முக்கியமான படங்கள் என்று தோன்றுகிறது. இவற்றுள் உங்களுக்குப் பிடித்த படம் எது?
--
கட்டுரையாளர் பிரபல முகநூல் பதிவர். சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
தொடர்புக்கு: [email protected]