சில பாடல்களைக் கேட்டால், உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு முக்கியமான நாள் நினைவுக்கு வரலாம். திரு. திண்டுக்கல் I. லியோனி ஐயா தன் கற்பனை கலந்து நகைச்சுவையாக ஒரு நிகழ்வைச் சொல்வார்.
பழைய பாடல்களை ஒலிக்கவிட்டபடியே தன் காரை ஒருவர் ஓட்டிச் செல்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்ற பாடல் ஒலிக்க, தன் வாகனத்தைக் குதிரையாகக் கருதிக்கொண்டு இன்னும் வேகம் பிடிக்கிறான். இப்படி வேகத்திற்கு அடுத்தடுத்து சில உதாரணங்களைச் சொல்லிவிட்டு, இறுதியில், வண்டி ஒரு மரத்தில் மோதி கவிழும்போது, காரில் மிகச்சரியாக அந்தப் பாடல் ஒலிப்பதாகத் தனக்கே உரிய பாணியில் வரிக்கு வரியாய் விவரிப்பார் லியோனி. அந்தப் பாடல்,
‘ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
பிறந்ததோர் குற்றம் என்ன?’
இப்படி நம் வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு பொருந்திப்போகிற சில பாடல்களையும், சில நிகழ்வுகளின்போது எங்கோ ஒரு மூலையிலிருந்து அசரீரியாய், சூழலுக்குப் பொருத்தமாக ஒலிக்கிற பாடல்களையும் நம்மால் வாழ்நாள் முழுக்க மறக்கவே இயலாது.
அப்படி எனக்குள்ளும், அந்த ஒரு நாளை எப்போதும் ஒரு சுவையான நினைவாக மாற்றிவைத்திருக்கிற பாடல் ஒன்று இருக்கிறது. அது என்ன நாள்? அது என்ன பாடல்? உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு விடையாக விரிகிறது 2005 மார்ச் 27-ஆம் தேதியான சென்னையின் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
நண்பன் காதலில் விழுந்தால் நமக்கும் ஒரு காதல் இலவசம் என்பதைப்போல, நண்பன் காதலியின் தோழிக்கு நான் தோழன். ஒரு கட்டத்திற்கு மேல், தோழமை காதலாக இருவர் உள்ளத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்ததில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால், வெளிப்படுத்துவதில்தான் அதே பழைய சிக்கல். யார் முதலில் சொல்வது?
மிகச்சரியாக அந்த மாதத்தில், திரு. சுந்தர் சி. அவர்களின் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘தக திமி தா’ என்ற படத்தின் ‘காதலை யாரடி முதலில் சொல்வது நீயா, இல்லை நானா?’ என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால், இங்கு நான் குறிப்பிடப்போவது அந்தப் பாடலை அல்ல.
ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே, பேசியும் பழகியும் வந்த எங்களின் சந்திப்பிடங்கள் பிரத்தியேகமானதில்லை. பெரும்பாலும் பயிற்சி மைய வளாகம் அல்லது அருகருகே அமர்ந்து பயணிக்கிற 66-ஆம் எண் கொண்ட பேருந்து. எனவே, மார்ச் மாத கடைசி ஞாயிறு அன்று மெரினா செல்வதெனத் திட்டம். நடந்துகொண்டிருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை மனம் விட்டுப் பேசி, ஒரு முடிவுக்குக் கொண்டுவர அப்படி ஒரு இடம் எங்களுக்குத் தேவைப்பட்டது. நோக்கம் பொதுவானது என்றாலும், இதையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை.
பிற்பகல் வெயிலில் கைபிடித்துக் கடற்கரை மணலில் நடந்துகொண்டிருந்தோம். மணல் பரப்பிற்குள் அமிழ்ந்து வெளிவரும் எங்கள் கால்களைப்போல, இருவரின் மனமும் வினாடிக்கு வினாடி தைரியத்தை வரவழைப்பதும், பின் துரத்துவதுமாக இயங்கிக்கொண்டிருந்தது. முற்றிலும் நோக்கத்திற்குத் தொடர்பில்லாத ஏதேதோ பொருள்களின்மீது பேச்சு சென்றுகொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்பதில் இருவருக்குமே தயக்கம். எல்லாவற்றையும் ஒரே வினாடியில் உடைத்துப்போட்டது எங்கோ ஒரு கடையின் கூடாரத்தைத் தாண்டி ஒலித்த அந்தப் பாடலின் வரிகள்.
‘பூவென்ன சொல்லும் என்று காற்றறியும்
காற்றென்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்.
வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா?
அல்லிப்பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாதா?’
ஹரிஹரனோடு நானும் சேர்ந்துகொள்ள, கைப்பற்றி நடந்துகொண்டிருந்த அவளின் பிடி கொஞ்சம் இறுகத் தொடங்கியதில் எல்லாம் தொடங்கியது; இன்றும் தொடர்கிறது.
ஆம்! ‘செம்பருத்திப் பூவே! செம்பருத்திப் பூவே! உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா?’ என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படமான ‘காதல் சொல்ல வந்தேன்’ இதுவரை வெளியானதாக நினைவில்லை. ஆனால், அதே தலைப்பில், எங்களின் திரைக்கதையில், காதல், திருமணம், குழந்தை என இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன.
முதல் பாகத்தை அசைபோடுகிற ஆசையில், இதோ பாடலை ஒலிக்கவிட்டு உங்களோடு நானும் கேட்கப்போகிறேன். (பாடலைக் கேட்க)
...ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]
பழைய பாடல்களை ஒலிக்கவிட்டபடியே தன் காரை ஒருவர் ஓட்டிச் செல்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்ற பாடல் ஒலிக்க, தன் வாகனத்தைக் குதிரையாகக் கருதிக்கொண்டு இன்னும் வேகம் பிடிக்கிறான். இப்படி வேகத்திற்கு அடுத்தடுத்து சில உதாரணங்களைச் சொல்லிவிட்டு, இறுதியில், வண்டி ஒரு மரத்தில் மோதி கவிழும்போது, காரில் மிகச்சரியாக அந்தப் பாடல் ஒலிப்பதாகத் தனக்கே உரிய பாணியில் வரிக்கு வரியாய் விவரிப்பார் லியோனி. அந்தப் பாடல்,
‘ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
பிறந்ததோர் குற்றம் என்ன?’
இப்படி நம் வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு பொருந்திப்போகிற சில பாடல்களையும், சில நிகழ்வுகளின்போது எங்கோ ஒரு மூலையிலிருந்து அசரீரியாய், சூழலுக்குப் பொருத்தமாக ஒலிக்கிற பாடல்களையும் நம்மால் வாழ்நாள் முழுக்க மறக்கவே இயலாது.
அப்படி எனக்குள்ளும், அந்த ஒரு நாளை எப்போதும் ஒரு சுவையான நினைவாக மாற்றிவைத்திருக்கிற பாடல் ஒன்று இருக்கிறது. அது என்ன நாள்? அது என்ன பாடல்? உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு விடையாக விரிகிறது 2005 மார்ச் 27-ஆம் தேதியான சென்னையின் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
நண்பன் காதலில் விழுந்தால் நமக்கும் ஒரு காதல் இலவசம் என்பதைப்போல, நண்பன் காதலியின் தோழிக்கு நான் தோழன். ஒரு கட்டத்திற்கு மேல், தோழமை காதலாக இருவர் உள்ளத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்ததில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால், வெளிப்படுத்துவதில்தான் அதே பழைய சிக்கல். யார் முதலில் சொல்வது?
மிகச்சரியாக அந்த மாதத்தில், திரு. சுந்தர் சி. அவர்களின் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘தக திமி தா’ என்ற படத்தின் ‘காதலை யாரடி முதலில் சொல்வது நீயா, இல்லை நானா?’ என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால், இங்கு நான் குறிப்பிடப்போவது அந்தப் பாடலை அல்ல.
ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே, பேசியும் பழகியும் வந்த எங்களின் சந்திப்பிடங்கள் பிரத்தியேகமானதில்லை. பெரும்பாலும் பயிற்சி மைய வளாகம் அல்லது அருகருகே அமர்ந்து பயணிக்கிற 66-ஆம் எண் கொண்ட பேருந்து. எனவே, மார்ச் மாத கடைசி ஞாயிறு அன்று மெரினா செல்வதெனத் திட்டம். நடந்துகொண்டிருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை மனம் விட்டுப் பேசி, ஒரு முடிவுக்குக் கொண்டுவர அப்படி ஒரு இடம் எங்களுக்குத் தேவைப்பட்டது. நோக்கம் பொதுவானது என்றாலும், இதையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை.
பிற்பகல் வெயிலில் கைபிடித்துக் கடற்கரை மணலில் நடந்துகொண்டிருந்தோம். மணல் பரப்பிற்குள் அமிழ்ந்து வெளிவரும் எங்கள் கால்களைப்போல, இருவரின் மனமும் வினாடிக்கு வினாடி தைரியத்தை வரவழைப்பதும், பின் துரத்துவதுமாக இயங்கிக்கொண்டிருந்தது. முற்றிலும் நோக்கத்திற்குத் தொடர்பில்லாத ஏதேதோ பொருள்களின்மீது பேச்சு சென்றுகொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்பதில் இருவருக்குமே தயக்கம். எல்லாவற்றையும் ஒரே வினாடியில் உடைத்துப்போட்டது எங்கோ ஒரு கடையின் கூடாரத்தைத் தாண்டி ஒலித்த அந்தப் பாடலின் வரிகள்.
‘பூவென்ன சொல்லும் என்று காற்றறியும்
காற்றென்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்.
வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா?
அல்லிப்பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாதா?’
ஹரிஹரனோடு நானும் சேர்ந்துகொள்ள, கைப்பற்றி நடந்துகொண்டிருந்த அவளின் பிடி கொஞ்சம் இறுகத் தொடங்கியதில் எல்லாம் தொடங்கியது; இன்றும் தொடர்கிறது.
ஆம்! ‘செம்பருத்திப் பூவே! செம்பருத்திப் பூவே! உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா?’ என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படமான ‘காதல் சொல்ல வந்தேன்’ இதுவரை வெளியானதாக நினைவில்லை. ஆனால், அதே தலைப்பில், எங்களின் திரைக்கதையில், காதல், திருமணம், குழந்தை என இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன.
முதல் பாகத்தை அசைபோடுகிற ஆசையில், இதோ பாடலை ஒலிக்கவிட்டு உங்களோடு நானும் கேட்கப்போகிறேன். (பாடலைக் கேட்க)
...ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]