இந்தப் ‘புனித உடல்’ கொண்டோருக்கு ‘Accessible India Campaign’ (Sugamya Bharat Abhiyan) என்னும் திட்டம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு இணையம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே சென்றுசேர வகை செய்யப்படும் என்று உறுதியளித்தது மத்திய அரசு. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ‘ஊனமுற்றோர் உரிமைச் சட்டம்’ (Rights of Persons with Disability Act, 2016), ‘மனநலப் பாதுகாப்புச் சட்டம்’ (Mental Health Care Act, 2017) ஆகிய மிக முக்கியமான இரு சட்டங்கள் ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தவும் பட்டுள்ளன. குறிப்பாக, முன்பு மொத்த ஊனமுற்றோர் பிரிவுகள் ஏழு மட்டுமே இருந்ததை மாற்றி, ‘ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் 2016’ ஊனமுற்றோர் என்ற வரம்புக்குள் மொத்தம் 21 பிரிவினரைக் கொண்டுவந்துள்ளது.
ஊனமுற்றோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடமை என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் ஊனமுற்றோர் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகள், டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் அரசு இணையதளங்களை அணுகும் வசதியை ஊனமுற்றோருக்கு எளிதாக்குவது போன்ற உறுதிகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டன. இந்த நிலையில், சென்ற மூன்று ஆண்டுகளைப்போல் இல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையில் மேற்கண்ட அரசின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி முதல் நாள் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கை நான்காவது ஆண்டாக மீண்டும் பெருத்த ஏமாற்றத்தையும், கடும் விரக்தியையும் ஊனமுற்றோர் மற்றும் அவர்களுக்காகப் பணியாற்றி வருவோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள சரத்துகளை நிறைவேற்ற வெறும் 300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் மொத்தம் 500 புதிய மின்படிகள் (Escalators) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை 600-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் என்ற பிரிவில் ‘புனித உடல் கொண்டோரும்’ (ஊனமுற்றோர்) சேர்க்கப்பட்டுள்ளனர். இவை தவிர, கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும், ஒதுக்கீடுகளும் அப்படியே தொடர்கின்றன. ஊனமுற்றோருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்புத்தொகை பங்களிப்புகூட 300 ரூபாய் என்ற பழைய அளவிலேயே தொடர்கிறது.
இந்தியா, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அவை நிறைவேற்றியுள்ள ஊனமுற்றோர் உரிமைகள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடாக உள்ளது. அந்தப் பிரகடனத்தின்படியான ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தை அமல்படுத்தவே இந்தியா முழு பத்தாண்டுகள் காலம் கடத்தியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்தம் 26,000,000 ஊனமுற்றோர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதய ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மொத்த மக்கள் தொகையில் ஊனமுற்றோர் 2.2 விழுக்காடு உள்ளனர்.
தரமான கல்வி, திறன் மேம்பாடு, ஊனமுற்ற பெண்களின் சிறப்புத் தேவைகள், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊனமுற்றோருக்குச் சிறப்புத் திட்டங்கள், தரமான சிறப்பு மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவற்றை ஊனமுற்றோருக்கு வழங்க பெருமளவிலான நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால், மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஊனமுற்றோர் நலனுக்கு என 0.02 விழுக்காடு என்ற சொற்ப அளவு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதே நமது முகத்தில் அறையும் உண்மையாக உள்ளது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்திலேயே ஊனமுற்றோருக்கான அரசு நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 300 கோடியைத் தாண்டும்போது, மத்திய அரசு மொத்த நாட்டிற்கும் சுமார் 1000 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஊனமுற்றோர் மேம்பாடு குறித்து அரசு சொல்வதற்கும், செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஊனமுற்றோர் மற்றும் அவர்களுக்கான அமைப்புகள் இடையே கடும் அதிருப்தியை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக, மின்படிகள் அமைக்கப்படுவது பற்றி கூறும் உடல் ஊனமுற்றோர், தாங்கள் அரசிடம் நீண்ட நாட்களாகக் கோரி வருவது மின்படிகள் அல்ல; மின்தூக்கிகள்தான் (Lifts) என்றும், மின்தூக்கியில்தான் ஒரு உடல் ஊனமுற்றவர் சக்கர நாற்காலியில் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் மின்படிகளைப் பயன்படுத்துவதால், இந்தத் திட்டத்தை ஊனமுற்றோருக்கான செலவினத்தில் சேர்ப்பதே மோசடியானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஊனமுற்றோர் பயன்படுத்த வசதியான கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று 2016-17-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது பற்றியும் எந்த அறிவிப்பும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் போன்ற ஊனமுற்ற பிரிவினருக்கு எந்த சிறப்பான திட்டமோ, ஒதுக்கீடோ அறிவிக்கப்படவில்லை என்று அவ்வப்பிரிவினைச் சார்ந்த ஊனமுற்றோரும் அவர்களின் அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்து வரும் அரசுகளும், தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைகளும் ஊனமுற்றோருக்கு உண்மையில் நலம் பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, தாங்கள் ஊனமுற்றோர்மீது கரிசனம் கொண்டவர்கள் என்ற பிம்பத்தை ஊனமுற்றோர் அல்லாத மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலேயே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஊனமுற்றோர் நலன், மேம்பாடு குறித்த திட்டங்களும் ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளும்போது, பயனாளிகளின் கருத்தையோ பிரதிநிதித்துவத்தையோ அரசுகள் அங்கீகரிப்பதில்லை. எனவேதான், மின்படிகள் அமைப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், ஊனமுற்றோரின் கல்வி, பணிவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு தரப்படவில்லை. சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன்பெற்ற சக குடிமக்களாக ஊனமுற்றோரைக் கருதும்போதுதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் நாம் எதிர்பார்க்க முடியும். ஊனமுற்றோர் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியாக இல்லாமலிருப்பதும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டத்தில் நிலவும் ஊனமுற்றோர் குறித்த அறியாமையும், பிற காரணிகளும் சேர்ந்தே இவ்வாறான குறைந்த நிதி ஒதுக்கீட்டை ஊனமுற்றோர் நலனுக்கு அரசு ஒதுக்கவும், எதிர்கட்சிகளும் பொதுச் சமூகமும் அது பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் கடந்துபோகவும் வைக்கின்றன.
ஊனமுற்றோரின் உரிமைக்குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கும் காலமிது. இனிமேலும், அரசுகளும் நிதிநிலை அறிக்கைகளும் ஊனமுற்றோரைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையை ஊனமுற்றோர், அவர்களுக்கான அமைப்புகள், சட்டம் மற்றும் திட்டமிடல் சார்ந்த நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும். ஊனமுற்றோருக்கு எது உண்மையான வளர்ச்சி, எவை அவர்களின் இன்றியமையாத் தேவை என்பது குறித்த சரியான புரிதல் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரைவில் ஏற்பட்டாகவேண்டும்.
இது தொடர்பான மேலும் சில செய்திகளைப் படிக்க:
http://www.thehindu.com/news/national/tamil-nadu/budget-leaves-out-persons-with-disabilities-yet-again/article22626384.ece
http://indianculturalforum.in/2018/02/05/union-budget-2018-excludes-persons-with-disability-again/
http://indianexpress.com/article/business/budget/union-budget-2018-disability-rights-activists-say-jaitleys-budget-a-big-disappointment/
https://www.youtube.com/watch?v=NQwIiKj2hK8
__
கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]