விளையாட்டு ஒரு மனிதனின் உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது. அதனால்தான், பள்ளிகளில் உடற்கல்வி என்ற பாடத்தை வைத்து, அதற்கென நேரம் ஒதுக்கி, மாணவர்களின் மனதையும், உடலையும் பேணிக் காக்க அரசு முயல்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் உடற்கல்வி வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, கேள்விக் குறியே நமக்கு பதிலாக கிடைக்கிறது. அதேசமயம், மாணவர்களிடையே உங்களுக்குப் பிடித்த பாடவேளை எது என்ற ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டால் உடற்கல்வி என்ற விடை நமக்குக் கிடைக்கும். பிடித்த விளையாட்டு என்று கேட்டால் கிரிக்கெட் என்றும், பிடித்த வீரர் யார் என்றால் கோலி, தோனி, சச்சின் போன்ற வீரர்கள் பட்டியலும் நமக்குக் கிடைக்கும். இதே கேள்வியை எம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் நீங்கள் கேட்டால் மேலே கொடுத்துள்ள அதே பதில்கள்தான் கிடைக்கும்; அதில் ஒன்றும் ஐயம் இல்லை. இந்த விஷயத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் கர்வத்துடன் இங்கு பதிய விரும்புகிறேன்.
பார்வை உள்ளவர்களைப் போல எங்களால் விளையாடவும் முடியும்; அதேபோன்று, பார்வை உள்ளவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை எங்களால் விமர்சிக்கவும் முடியும். இதற்கு முக்கியமாக எங்களுக்கு உதவியது, அதன்மீது எங்களுக்கு இருக்கும் தீராத காதலும் அகில இந்திய வானொலியும்தான். இந்த வானொலிதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையே ஒரு நல்ல தூதுவனாக இருந்து காதலை வளர்த்தது.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பார்வை உள்ளவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் இடையில் பெரிதாக வேறுபாடுகள் இல்லை. கிரிக்கெட்டின் விதிகளில் பார்வையற்றவர்களுக்கு ஏதுவாக சில சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும். உதாரணமாக, பார்வையற்றவர்களின் கிரிக்கெட் பந்து கனமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். உள்ளே பால்ரஸ் குண்டுகள் வைக்கப்பட்டு மோல்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த பால்ரஸ் குண்டுகள் சத்தத்தை எழுப்பி, பந்து வருவதை பார்வையற்ற வீரர்களுக்கு அறிவிக்கும். பந்து பவுன்ஸ் செய்வதற்குப் பதிலாக, பார்வையற்றவர்கள் பந்தை உருட்டிவிடுவோம்.
பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையின்மையின் பல்வேறு படிநிலைகளைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பர். B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்), B2 (40% வரை பார்வை உள்ளவர்கள்) மற்றும் B3 (60% வரை பார்வை உள்ளவர்கள்). ஒரு அணிக்குத் தேவையான 11 பேரில் B1 பிரிவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், B2 பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 3 பேரில் இருந்து அதிகபட்சம் 7 பேர் வரை மற்றும் B3 பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 பேர் என்ற விகிதத்தில் இடம்பிடிப்பர். இப்பிரிவுகளில், B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்) எடுக்கும் ஓட்டம் இரு மடங்காக கணக்கில் கொள்ளப்படும். அதாவது, ஒரு B1 எடுக்கும் 1 ஓட்டம் 2 ஓட்டமாகக் கருதப்படும்; மற்ற ஓட்டங்களும் அப்படியே.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விதிமுறைகளை ஒழுங்குபடுத்த ‘World Blind Cricket Council’ (WBCC) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இச்சங்கம் இதுவரை மூன்று T20 உலகக் கோப்பைப் போட்டிகளையும், 5 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. ‘Cricket Association for the Blind in India’ (CABI) என்ற அமைப்பு இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட்டை நிர்வகித்து வருகிறது.
சரி, விஷயத்திற்கு வருவோம். பார்வையற்றோருக்கான 5-ஆவது ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜனவரி 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய 6 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. இதில் நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் மண்ணில் விளையாட சம்மதித்தன. இந்திய வெளியுறவுத் துறையும், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் சம்மதித்தது.
போட்டிகள் அனைத்தும் குழு முறை அடிப்படையில் நடத்தப்பட்டன. மொத்தம் 15 லீக் ஆட்டங்களும், 2 அரையிறுதிப் போட்டிகளும், ஒரு இறுதிப் போட்டியும் என 18 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் கட்டாஃபி (பாகிஸ்தான்), அஜ்மன் ஓவல் (UAE), MCC (UAE) மற்றும் ஷார்ஜா (UAE) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
இத்தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 563 ஓட்டங்களைப் பெற்றது. பார்வையற்றோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுதான். இந்த ரன் குவிப்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெறப்பட்டது.
இன்றைய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எப்படி கிரிக்கெட்டில் கோலோச்சுகின்றனவோ அதேபோல்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும். இதுவரை நடந்து முடிந்த பெரும்பாலான தொடர்களில் இந்த இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதியிருக்கின்றன. இந்த உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்தது. அட்டவணையின்படி இறுதிப் போட்டி பாகிஸ்தானில்தான் நடைபெறவிருந்தது. இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடிய காரணத்தால், இப்போட்டி புகழ்பெற்ற ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி நாணயச் சுழற்சியில் வென்று, பாகிஸ்தானை மட்டை வீச அழைத்தார். அதன்படி பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 308 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணி சார்பாக ஃபாதர் முனிர் 61 பந்துகளைச் சந்தித்து 57 ஓட்டங்களையும், ரியாஸ் கான் 48, நிசார் அலி 47 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக தீபக் மாலிக் மற்றும் ராம்பீர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் ரமேஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்பு, 309 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, துவக்கத்தில் ஓவருக்கு 10 என்ற சராசரியில் ஓட்டங்களை எடுத்து வந்த நிலையில், 15-ஆவது ஓவரின்போது 111 ஓட்டம் பெற்று தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த ஓவரிலேயே 116/3 என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை சுனில் ரமேஷ் [93] மற்றும் அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி [62] இணை மீட்டது.
‘Death Overs’ என்று அழைக்கப்படும் இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். காரணம், இந்தக் கட்டத்தில்தான் இந்திய அணி தனது 4 வீரர்களை இழந்தது. ஆனாலும், சுதாரித்த இந்திய அணி, இறுதியில் 38.2 ஓவரில் 309 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இரு T20 உலகக் கோப்பைகள், 4 ஒருதின உலகக் கோப்பைகள், ஒரு முறை ஆசியக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இருந்தாலும், நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளை வரை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்னும் பார்வையற்றோர் கிரிக்கெட்டிற்கு முறையான அங்கீகாரம் அளிக்கவில்லை. பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவே இல்லை. பல நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் பார்வையற்றோர் கிரிக்கெட்டை அதன் ஒரு அங்கமாக அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையற்றோருக்கான இந்திய அணியில் விளையாடும் 17 வீரர்களில் 12 வீரர்களுக்கு நிலையான வேலைகூட இல்லை. இது குறித்து குஜராத்தின் வல்சத் நகரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கணேஷ் முந்த்கர் கூறுகையில், "நான் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். என் பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். நான் சிறிய மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர் கூறியபோதிலும் எனது விருப்பம், ஆசை கிரிக்கெட் என்பதால் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 2014-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது குஜராத் அரசு எனக்கு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால், எந்த ஒரு வேலையும் எனக்கு வழங்கப்படவில்லை" என்கிறார்.
ஆந்திர மாநிலம் குர்னூல் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் கூறுகையில், "பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இசைக் கச்சேரிக் குழுவில் நான் பாடி வருகிறேன். ஒரு நிகழ்ச்சியில் 500 அல்லது 1000 ரூபாய் வரை கிடைக்கும். மாதத்துக்கு 10 நிகழ்ச்சிகள் வரை நடத்துகிறோம். இது என் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை என்கிற போதிலும், நாட்டுக்காக விளையாடுவது மனநிறைவாக இருக்கிறது" என தெரிவித்தார்.
குஜராத்தின் வல்சத் பகுதியைச் சேர்ந்த அனில் ஆர்யா எனும் வீரர் பால் வியாபாரம் செய்து வருகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் யாருக்கும் நிலையான வேலையும், உறுதியான வருமானமும் இல்லை. ஆனால், இவர்களுக்கும் கோலியைப் போல், தோனியைப் போல் நாட்டுப்பற்றும், கிரிக்கெட்டின் மீது காதலும் உண்டு.
ஒவ்வொரு முறையும் வெற்றிபெற்ற பிறகு, இந்திய அணியை பாரதப் பிரதமர், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறிது நாட்களிலேயே அவர்கள் மறக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டதே இல்லை.
அண்மையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் BCCI தலைவர் வினோத் ராய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள உதவலாம் என்றும், அவர்களது ஓய்வுக் காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 9 அன்று, பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் CABI-க்கும் BCCI-க்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை வெற்றிபெற்று BCCI-யின் அங்கீகாரம் கிடைக்குமானால், இந்தியாவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை. அதோடு, எங்கள் வீரர்கள் மத்தியில் வேலையின்மையும் குறையும்; நாங்கள் பொருளாதார ரீதியிலும் முன்னேறுவோம். பார்க்கலாம், இந்த 2018-இல் இந்தியாவிற்கு பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களது வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகிறது என்று.
--
தொடர்புக்கு: [email protected]
பார்வை உள்ளவர்களைப் போல எங்களால் விளையாடவும் முடியும்; அதேபோன்று, பார்வை உள்ளவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை எங்களால் விமர்சிக்கவும் முடியும். இதற்கு முக்கியமாக எங்களுக்கு உதவியது, அதன்மீது எங்களுக்கு இருக்கும் தீராத காதலும் அகில இந்திய வானொலியும்தான். இந்த வானொலிதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையே ஒரு நல்ல தூதுவனாக இருந்து காதலை வளர்த்தது.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பார்வை உள்ளவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் இடையில் பெரிதாக வேறுபாடுகள் இல்லை. கிரிக்கெட்டின் விதிகளில் பார்வையற்றவர்களுக்கு ஏதுவாக சில சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும். உதாரணமாக, பார்வையற்றவர்களின் கிரிக்கெட் பந்து கனமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். உள்ளே பால்ரஸ் குண்டுகள் வைக்கப்பட்டு மோல்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த பால்ரஸ் குண்டுகள் சத்தத்தை எழுப்பி, பந்து வருவதை பார்வையற்ற வீரர்களுக்கு அறிவிக்கும். பந்து பவுன்ஸ் செய்வதற்குப் பதிலாக, பார்வையற்றவர்கள் பந்தை உருட்டிவிடுவோம்.
பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையின்மையின் பல்வேறு படிநிலைகளைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பர். B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்), B2 (40% வரை பார்வை உள்ளவர்கள்) மற்றும் B3 (60% வரை பார்வை உள்ளவர்கள்). ஒரு அணிக்குத் தேவையான 11 பேரில் B1 பிரிவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், B2 பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 3 பேரில் இருந்து அதிகபட்சம் 7 பேர் வரை மற்றும் B3 பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 பேர் என்ற விகிதத்தில் இடம்பிடிப்பர். இப்பிரிவுகளில், B1 (முழுமையாக பார்வையற்றவர்கள்) எடுக்கும் ஓட்டம் இரு மடங்காக கணக்கில் கொள்ளப்படும். அதாவது, ஒரு B1 எடுக்கும் 1 ஓட்டம் 2 ஓட்டமாகக் கருதப்படும்; மற்ற ஓட்டங்களும் அப்படியே.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விதிமுறைகளை ஒழுங்குபடுத்த ‘World Blind Cricket Council’ (WBCC) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இச்சங்கம் இதுவரை மூன்று T20 உலகக் கோப்பைப் போட்டிகளையும், 5 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. ‘Cricket Association for the Blind in India’ (CABI) என்ற அமைப்பு இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட்டை நிர்வகித்து வருகிறது.
சரி, விஷயத்திற்கு வருவோம். பார்வையற்றோருக்கான 5-ஆவது ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜனவரி 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய 6 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. இதில் நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் மண்ணில் விளையாட சம்மதித்தன. இந்திய வெளியுறவுத் துறையும், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் சம்மதித்தது.
போட்டிகள் அனைத்தும் குழு முறை அடிப்படையில் நடத்தப்பட்டன. மொத்தம் 15 லீக் ஆட்டங்களும், 2 அரையிறுதிப் போட்டிகளும், ஒரு இறுதிப் போட்டியும் என 18 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் கட்டாஃபி (பாகிஸ்தான்), அஜ்மன் ஓவல் (UAE), MCC (UAE) மற்றும் ஷார்ஜா (UAE) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
இத்தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 563 ஓட்டங்களைப் பெற்றது. பார்வையற்றோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுதான். இந்த ரன் குவிப்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெறப்பட்டது.
இன்றைய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எப்படி கிரிக்கெட்டில் கோலோச்சுகின்றனவோ அதேபோல்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும். இதுவரை நடந்து முடிந்த பெரும்பாலான தொடர்களில் இந்த இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதியிருக்கின்றன. இந்த உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்தது. அட்டவணையின்படி இறுதிப் போட்டி பாகிஸ்தானில்தான் நடைபெறவிருந்தது. இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடிய காரணத்தால், இப்போட்டி புகழ்பெற்ற ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி நாணயச் சுழற்சியில் வென்று, பாகிஸ்தானை மட்டை வீச அழைத்தார். அதன்படி பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 308 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணி சார்பாக ஃபாதர் முனிர் 61 பந்துகளைச் சந்தித்து 57 ஓட்டங்களையும், ரியாஸ் கான் 48, நிசார் அலி 47 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக தீபக் மாலிக் மற்றும் ராம்பீர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் ரமேஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்பு, 309 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, துவக்கத்தில் ஓவருக்கு 10 என்ற சராசரியில் ஓட்டங்களை எடுத்து வந்த நிலையில், 15-ஆவது ஓவரின்போது 111 ஓட்டம் பெற்று தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த ஓவரிலேயே 116/3 என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை சுனில் ரமேஷ் [93] மற்றும் அணித் தலைவர் அஜய்குமார் ரெட்டி [62] இணை மீட்டது.
‘Death Overs’ என்று அழைக்கப்படும் இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். காரணம், இந்தக் கட்டத்தில்தான் இந்திய அணி தனது 4 வீரர்களை இழந்தது. ஆனாலும், சுதாரித்த இந்திய அணி, இறுதியில் 38.2 ஓவரில் 309 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இரு T20 உலகக் கோப்பைகள், 4 ஒருதின உலகக் கோப்பைகள், ஒரு முறை ஆசியக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இருந்தாலும், நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளை வரை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்னும் பார்வையற்றோர் கிரிக்கெட்டிற்கு முறையான அங்கீகாரம் அளிக்கவில்லை. பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவே இல்லை. பல நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் பார்வையற்றோர் கிரிக்கெட்டை அதன் ஒரு அங்கமாக அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையற்றோருக்கான இந்திய அணியில் விளையாடும் 17 வீரர்களில் 12 வீரர்களுக்கு நிலையான வேலைகூட இல்லை. இது குறித்து குஜராத்தின் வல்சத் நகரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கணேஷ் முந்த்கர் கூறுகையில், "நான் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். என் பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். நான் சிறிய மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர் கூறியபோதிலும் எனது விருப்பம், ஆசை கிரிக்கெட் என்பதால் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 2014-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது குஜராத் அரசு எனக்கு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால், எந்த ஒரு வேலையும் எனக்கு வழங்கப்படவில்லை" என்கிறார்.
ஆந்திர மாநிலம் குர்னூல் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் கூறுகையில், "பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இசைக் கச்சேரிக் குழுவில் நான் பாடி வருகிறேன். ஒரு நிகழ்ச்சியில் 500 அல்லது 1000 ரூபாய் வரை கிடைக்கும். மாதத்துக்கு 10 நிகழ்ச்சிகள் வரை நடத்துகிறோம். இது என் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை என்கிற போதிலும், நாட்டுக்காக விளையாடுவது மனநிறைவாக இருக்கிறது" என தெரிவித்தார்.
குஜராத்தின் வல்சத் பகுதியைச் சேர்ந்த அனில் ஆர்யா எனும் வீரர் பால் வியாபாரம் செய்து வருகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் யாருக்கும் நிலையான வேலையும், உறுதியான வருமானமும் இல்லை. ஆனால், இவர்களுக்கும் கோலியைப் போல், தோனியைப் போல் நாட்டுப்பற்றும், கிரிக்கெட்டின் மீது காதலும் உண்டு.
ஒவ்வொரு முறையும் வெற்றிபெற்ற பிறகு, இந்திய அணியை பாரதப் பிரதமர், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறிது நாட்களிலேயே அவர்கள் மறக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டதே இல்லை.
அண்மையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் BCCI தலைவர் வினோத் ராய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள உதவலாம் என்றும், அவர்களது ஓய்வுக் காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 9 அன்று, பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான இந்தியச் சங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் CABI-க்கும் BCCI-க்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை வெற்றிபெற்று BCCI-யின் அங்கீகாரம் கிடைக்குமானால், இந்தியாவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை. அதோடு, எங்கள் வீரர்கள் மத்தியில் வேலையின்மையும் குறையும்; நாங்கள் பொருளாதார ரீதியிலும் முன்னேறுவோம். பார்க்கலாம், இந்த 2018-இல் இந்தியாவிற்கு பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களது வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகிறது என்று.
--
தொடர்புக்கு: [email protected]