சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மட்டுமல்ல; ஊனத்தின் பெயராலும், அதிலும் பார்வையற்றவர்கள் என்பதாலேயே வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்பதே பட்டதாரிகளாய், பணிவாய்ப்பை எதிர்நோக்கியவர்களாய் பெருநகரங்களில் உலவும் பெரும்பாலான பார்வையற்றவர்களின் கசப்பான அனுபவம்.
வாடகை வீட்டை விடுங்கள். கோவை போன்ற பெருநகரங்களில் மகளிர் விடுதிகளிலேயே ஆளுமை நிறைந்த பார்வையற்ற பெண்களைச் சேர்த்துக்கொள்வதில் தயக்கம் நிலவுவதைப் பார்க்கலாம். இங்கு ஆளுமை நிறைந்த என குறிப்பிடக் காரணம், இந்தச் சவாலை எதிர்கொள்பவர்கள் பொதுச்சமூகத்தோடான தங்களுக்கான பிணைப்பைத் தகவமைத்துக்கொள்ளப் போராடும் பெரும்பாலான பட்டதாரிகள் மற்றும் பணியில் உள்ள பார்வையற்றவர்களே.
ஆய்வு நிறைஞர், அரசு ஊழியர் என்கிற பெருமிதங்களைச் சுமந்தபடி, இருக்க ஓர் இடம் தேடிப் பல படிகள் ஏறி இறங்குகையில் எதிர்கொள்ளும் கேள்விகளோ எள்ளல் ரகம். தன் சுத்தம், தூய்மை குறித்தெல்லாம் இங்கு பொதுச்சமூகத்திடம் மண்டிப்போயிருக்கிற பல முன்கருதல்கள் காரணமாக, ‘நீங்களே குளிச்சுப்பீங்களா?’ போன்ற கேள்விகளையெல்லாம் பார்வையற்றவர்கள் சிரித்துக்கொண்டு கடக்கவேண்டியிருப்பதுதான் அன்றாட நிதர்சனம்.
இப்படி நிராகரிப்பு என்கிற நெருப்பில் தகித்தபடி, அன்றாடம் உள்ளுக்குள் சமைந்துகொண்டிருக்கிறது ஒரு பார்வையற்றவருக்கான வீடு என்கிற கனவு. பணி கிடைத்த கையோடு மணம் முடிப்பதைவிட ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்ற லட்சியத்தைத்தான் முன்கூட்டியே பெரும்பாலான பார்வையற்றவர்கள் தங்களுக்குள் வரித்துக்கொள்கிறார்கள்.
வங்கிகள் வாரி வழங்கும் வீட்டுக்கடன் திட்டங்களால், பார்வையற்ற அரசு ஊழியர்கள் இந்தக் கனவை எளிதில் சாத்தியப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், ரயில் வணிகம் செய்வோர், நாற்காலி பின்னுவோர் என தினக்கூலி பெறும் பார்வையற்றவர்கள் தங்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ள அரசையே பெரும்பாலும் நம்பியிருக்கிறார்கள்.
தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீடு வழங்குதல் அல்லது வீட்டுமனை வழங்குதல் எனப் பிரத்தியேகத் திட்டங்களெல்லாம் இல்லை என்றாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள், குழுக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை வைக்கும் பட்சத்தில், இலவச வீட்டுமனை அல்லது குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில், மதுரையில் 2011-ஆம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்களால் 67 பார்வையற்றவர்களுக்கு, இன்றைய ‘எய்ம்ஸ்’ புகழ் தோப்பூர் பஞ்சாயத்து கோ. புதுப்பட்டி என்கிற இடத்தில் தலா 2 செண்ட் இலவச மனை ஒதுக்கப்பட்டது. தற்போது பட்டாவும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் இடத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் குடிசை அமைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆனால், கடந்த மூன்றுமாத காலமாக தங்கள் குடிசைகள் அவ்வப்போது தீக்கிரையாக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள் அவர்கள். என்ன நடக்கிறது என பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கத்தின் செயலர் திரு. குமார் அவர்களிடம் விசாரித்தோம்.
“சகாயம் சார் ஒதுக்கித் தந்த இடத்தில் தற்போது அளந்து 67 பார்வையற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் இடத்திற்கு அருகில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் வெகுகாலமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் இடத்திற்குப் பட்டா வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது. இந்த ஆத்திரத்தில், இரவு நேரங்களில் அவர்களுக்கான சங்கத் தலைவராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் வடிவேல் என்பவர்தான் எங்கள் குடிசைகளுக்குத் தீ வைப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று சொன்ன குமார் மேலும் தொடர்ந்தார்.
“சில மாதங்களுக்கு முன்பு வடிவேலிடம் குடிசை அமைத்துத் தரும்படி நாங்கள் சுமார் 20 பேர் தலா 10500 கொடுத்தோம். ஆனால், குடிசை அமைப்பதில் அவர் நிறைய முறைகேடுகள் செய்வதை அறிந்துகொண்ட பின், அவரைத் தவிர்த்துவிட்டோம். இது ஒருபுறம் இருக்க, அவர் நிலத்திற்குப் பட்டா பெறுவதில் ஏதோ சிக்கல் இருப்பதால், மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க எனது உதவியை நாடினார். அவர் நம்பகத்தன்மை இல்லாதவர் என்பதால், நான் அவருக்கு உதவ மறுத்துவிட்டேன். இந்தக் கோபத்தையெல்லாம் வைத்துக்கொண்டு, அவ்வப்போது எங்கள் குடிசைகளுக்குத் தீ வைத்துக்கொண்டிருக்கிறார்.
“கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அச்சம்பத்து மணி என்ற பார்வையற்றவரின் குடிசைக்குத் தீ வைக்கப்பட்டது. ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தோம். தொடக்கத்திலிருந்தே ஆஸ்டின்பட்டி உதவிக் காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி அவர்கள் எங்கள் புகாரை வேண்டா வெறுப்பாகவே விசாரித்து வந்தார்.
புகாரில் நாங்கள் 13 பேர் சேர்ந்து ரேகை வைத்து ஒப்பம் இட்டுக் கொடுத்தோம். அதனை முதலில் ஏற்றுக்கொண்ட உதவிக் காவல் ஆய்வாளர் அவர்கள், இரண்டு மூன்று நாட்களிலேயே புகாரைக் கணினியில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டும் புகார் அளிக்கும்படி சொன்னார்.
அதன்படி, மறைந்துவிட்ட அச்சம்பத்து மணி அவர்களின் மனைவி தெய்வானை, அவரும் பார்வையற்றவர்தான், தன் மகனோடு புகார் கொடுக்கச் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரிடமும் தான் சொல்வதை எழுதித் தரும்படி வாங்கிக் கொண்ட உதவிக் காவல் ஆய்வாளர் அதற்கு ரசீதோ, சி.எஸ்.ஆர். நகலோ தரவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு இரவில் மேலும் மூன்று குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. வழக்கம்போல இந்தப் புகாரையும் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் அலட்சியம் செய்ததால், நாங்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டோம். ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருமங்கலம் காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி அவர்களின் விசாரணைக்குப் பிறகு, வடிவேல் என்பவர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குடிசையில் எவரும் வசிக்கவில்லை என்பதால், நிகழ்ந்திருக்க வேண்டிய பெரும் சோகம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாங்கள் எப்போது எது நடக்குமோ என்ற அச்ச உணர்வில்தான் இருக்கிறோம். பொதுவாகவே, பெரும்பாலான காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் புகார்கள் ஒருவித அலட்சிய மனப்பான்மையோடே அணுகப்படுகிறது.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் பொழுதுபோகாமலா தூரம் நேரம் என்றெல்லாம் பார்க்காமல் காவல் நிலையத்தை நாடுகிறான்? தனக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வரும் மாற்றுத்திறனாளியின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக இருக்கிறது பெரும்பாலான காவலர்களின் அணுகுமுறை.
மாற்றுத்திறனாளிகளின் புகாரைக் கனிவுடன் பரிசீலித்து, விரைவாக நீதி வழங்கிட காவல் துறை ஆவன செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளிடம் காவல் துறையினர் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து காவல் துறை இயக்குனர் அவர்கள் மாநிலத்தின் மொத்த துறைக்கும் ஒரு விரிவான சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும் என எங்கள் பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இனி எங்களுக்கோ, எங்களின் உரிமையான நிலத்திற்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முழுக்க முழுக்க ஆஸ்டின்பட்டி காவல் நிலையமே பொறுப்பேற்க வேண்டும்” என்று முடித்தார் ஆவேசமாக. ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தை ‘விரல்மொழியர்’ சார்பாகத் தொடர்புகொள்ள முயற்சித்தோம்; தொடர்பு கிடைக்கவில்லை.
“எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்” - அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இருட்டுக்குப் பழகியவர்களின் இருண்மைக் குரல் ஓலமாகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல் துறைக்கு இருக்கிறது.
இனி ஒருபோதும் சாம்பலாகக்கூடாது, அவர்களின் காணிநிலக் கனவும் காவல் துறை மீதான நம்பிக்கையும்.
--
தொடர்புக்கு: [email protected]