வேலைதேடி டெல்லி, மும்பை என்று சில ஆண்டுகள் தங்கிவிட்டு, சுவரில் போட்ட பந்துபோல நான் வீட்டிற்கே திரும்பிச் சில மாதங்கள் முடங்கியிருந்தேன். அந்த நாட்களில் எனது பொழுதுகளை கொடைக்கானல் பண்பலை ஒலிபரப்புதான் அதிகம் ஆக்கிரமித்திருந்தது.
அது 2004-ஆம் ஆண்டின் ஜூலை 16-ஆம் நாள். வழக்கமான பிற்பகல் தூக்கம் சரியாக மாலை 5, 5.15 மணிவாக்கில் மெள்ளக் கலைந்துகொண்டிருக்கையில், கொடைக்கானல் பண்பலையில் மாலைத்தென்றல் நிகழ்ச்சியில் நடுத்தரப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. அத்தனையும் தந்தை மகளுக்காய் பாடும் பாடல்கள். நான் கண்விழித்தபோது, “கண்ணே நவமணியே” எனப் பாடலின்வழி இசைஞானி காற்றில் கசிந்துகொண்டிருந்தார்.
மாலைத்தென்றல் நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக, ஒரே கருப்பொருளைத் தாங்கிய பாடல்கள் ஏன் ஒலிபரப்பப்படுகின்றன என மனதிற்குள் எழுந்த கேள்விக்கு விடை சொன்னது இரவு ஏழுமணி சன் செய்திகள். முழுக்க மரண ஓலங்கள் ஆக்கிரமித்திருந்த அந்தச் செய்தியை இலகிய மனம்கொண்ட எவராலும் தாங்கிக்கொள்ளவே இயலாது. அந்தோ! 94 எதிர்கால இந்தியச் சிற்பிகள் கரிக்கட்டைகளாய் கிடந்தனர்.
அறிவுக் கண்ணைத் திறக்கவேண்டிய பாடசாலை ஒன்று, எமனாய் மாறிப்போனது. கும்பகோணத்தில், ஒரு பள்ளியின் உணவுக் கூடத்தில் மேலெழுந்த தீயின் கோரப்பசிக்குத் தேவைப்பட்டிருக்கின்றன ஏதுமறியா 94 பிஞ்சுகளின் உயிர்கள். கருகிய பொம்மைகளாய் மருத்துவமனையில் அடுக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடல்களைக் கண்டு தமிழகமே மார்பில் அடித்துக்கொண்டு அளறியது.
ஆட்சி அதிகாரத்தின் அலட்சியமும் லஞ்ச வெரியும், 94 பிஞ்சுகளைப் பிணமாக்கியதோடல்லாமல், அவர்களின் பெற்றோரை நிரந்தர நடைபிணங்களாக்கிவிட்டது. விருப்பமான பொம்மைகள், விளையாடிய முற்றங்கள் என எங்கும் தன் குழந்தையின் முகம் இன்றளவும் அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
‘வயிறு வலிக்குது, நான் ஸ்கூலுக்குப் போகலைனுதான் சொன்னான் சார், நான்தான் கண்டிச்சு ஸ்கூலில விட்டுட்டுப் போனேன்’ என்ற ஒரு தகப்பனின் கதறலுக்கு எவரால் ஆறுதல் சொல்ல இயலும்? அந்தக் குற்ற உணர்வு ஒன்று போதுமே. வாழ்நாள் முழுதும் அவரை உயிரோடு தின்பதற்கு.
உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தன் மகனையும், மகளையும் பள்ளியில் அனுமதிபெற்று வெளியே அழைத்துவந்துவிட்டார் தந்தை. தம்பியின் நோட்டுகளில் ஒன்றைக் காணாததால், மீண்டும் உள்ளே தேடப்போன மகளைத் தொலைத்து நிற்கிறது ஒரு குடும்பம். இப்படி ஏராளமான சோகங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அந்தப் பெற்றோர்களின் வலியை ஓரளவேனும் உள்வாங்கிக்கொள்ள, அவர்களின் கண்ணீரில் பங்கேற்க அன்று கோடைப்பண்பலை ஒலிபரப்பிய அந்தப் பாடல்தான் மிகச்சிறந்த ஊடகம்.
“என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” திரைப்படத்தில், தன் செல்ல மகளை இழந்து தவிக்கும் சத்யராஜிற்காக, கையறுநிலையும், கலக்கமும், கண்ணீருமாய் தன் குரலைக் கரைத்திருப்பார் இசைஞானி. ‘திரைப்பட பாடல்களில் என்ன இருக்கிறது?’ என்று கேட்கும் நுனிப்புல் ஆடுகளையும் அழச்செய்யும் இசை இது.
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், கும்பகோணத்துத் தகப்பன்களில் நானும் ஒருவனாய் மாறிப்போகிறேன். ‘கண்ணே! நவமணியே! - உன்னைக்காணாமல் கண்ணுறங்குமோ?’ வேலைக்குச் சென்று திரும்புகிற தகப்பன்களில் ஒருவர், களைத்துப்போய் அமர்ந்திருக்கிற ஒரு மாலை வேளையில், ஓடிவந்து பின்னங்கழுத்தைக் கட்டிக்கொள்ள மகளைக் காணாத அந்தக்கனம், மிகக் கொடுமையானது.
“ஆயிரம் பிச்சிப்பூ, அரும்பரும்பா பூத்தாலும்,
வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்.
தவமாத் தவமிருந்து, துணையாக வந்த கிளி,
தவியாத் தவிக்கவிட்டு, தனியாகச் சென்றதென்ன?
ஊராரின் கண்ணுப் பட, ஊர்கோலம் போனதம்மா.
ஆரோட கண்ணுப் பட்டு, ஆத்தோட போனதம்மா?
கையிலதான் வச்சிருந்தா, தவறி அது போகுமின்னு,
மடியில நான் வச்சிருந்தேன்.
மடியுமின்னு நெனைக்களையே!”
எழுதிக்கொண்டிருக்கும்போதே மடிக்கணினியில் விழுகிற கண்ணீர்த் துளிகளை முயன்று தடுக்கிறேன். இன்னும் இசைஞானியின் இசையோடு கேட்டால்? (பாடலைக் கேட்க)
எனக்கு அந்தத் தகப்பன்களோடு ஒரு தகப்பனாய், அந்தத் தாய்களின் தமயனாய், தன் உடன்பிறப்பை இழந்து தவிக்கும் தமக்கையாய், தங்கையாய், அண்ணன் தம்பி என அத்தனையுமாய் மாறித் தேம்பப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு?
--
தொடர்புக்கு: [email protected]