இவற்றை எல்லாம் அச்சுப்பிசகாமல் சாதித்ததில் இவ்வமைப்பின் நிறுவனரும், பார்வையற்ற பட்டதாரிகளின் கல்வித் தந்தையுமான கண்ணன் ஐயா அவர்களின் அளப்பரிய தொண்டும், செயலும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அவரின் சீரிய வழிகாட்டுதலில் ஆகச்சிறந்த மாற்றங்கள் கண்டு, ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இச்சங்கம் தழைத்தோங்கி நிற்கிறது.
முக்கிய செயல்பாடுகள்
மேற்கண்ட அத்தனை சம உரிமைகளும் போகிற போக்கில் கிடைத்தவை அன்று. அவற்றின் பின்னால் வீரியமிகு போராட்டங்களும், வார்த்தைகளில் விவரிக்க இயலா அலைக்கழிப்புகளும், தொடர்ச்சியான மனித உழைப்பும் கணிசமான அளவில் செலவிடப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு எதுவும் கேட்கப்படவில்லை; அப்படி ஒருபோதும் கேட்டதும் கிடையாது. இருப்பினும் சட்டம் உறுதிப்படுத்தி இருக்கிற சமவாய்ப்பைப் பெறுவதற்கே இந்த அமைப்பைத் தலைமையாகக் கொண்டு அவ்வப்பொழுது பல எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அத்தோடு மட்டுமின்றி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு உரிய விதத்தில் தீர்வு காணுதல் இதன் தலையாய நோக்கம் ஆகும். அதன்பொருட்டு எண்ணற்ற அரசாணைகளையும், வழிகாட்டுதல்களையும் இந்த சங்கம் கேட்டுப் பெற்றிருக்கிறது. இத்தகைய மகத்தான சேவையை இச்சங்கம் ஏறத்தாழ முப்பத்தேழு ஆண்டுகளாக அயராது செய்து வருகிறது.
போராட்டம் என்னும் ஆயுதம்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தனித்துவமான அடையாளம் அதன் அறப்போராட்டமே ஆகும். சட்ட விதிப்படி கடிதங்கள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் அளித்து, அதற்கு முறையான தீர்வு கிடைக்காத பொழுது, இந்த சங்கம் போராட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். அத்தகைய போராட்டங்கள் இரண்டு உள்ளீடுகளைக் கொண்டதாக இருக்கும். ஒருபுறம், யாரேனும் ஒரு அலுவலகத்தாங்கர் தலைமையேற்க சாகும்வரை உண்ணாவிரதம்; மற்றொருபுறம், உண்ணாவிரதம் இருப்பவர்களின் கரத்தை பலப்படுத்தும் பொருட்டு கவன ஈர்ப்புத் தொடர் போராட்டங்கள் நடைபெறும். அவை ஒவ்வொன்றும் வீரியம் கொண்டதாகவும், எழுச்சி நிறைந்ததாகவும் அமைந்திருக்கும். தங்களின் நியாயமான போராட்டம் வெற்றியை எய்தும்வரை உரிமை யுத்தத்தில் இருந்து பின்வாங்க விரும்பமாட்டார்கள் இந்த அமைப்பின் பட்டதாரி உறுப்பினர்கள். ஒற்றுமையை தாரக மந்திரமாகக் கொண்டு, கட்டுக்கோப்பை நெஞ்சில் ஏந்தி, களம் கண்டபொழுதெல்லாம் பலர் தகுதிக்குரிய வேலைவாய்ப்பைப் பெற்று வந்தனர்.
போராட்டம் என்னும் ஒருவழிப் பாதை
உரிமை மீட்பு போராட்டங்கள் காலச்சூழலுக்கு ஏற்றாற்போன்று மாற்றி அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, அதன் வடிவங்களும் யுத்திகளும் புத்தாக்கத்திற்கு உட்படுதல் மிகவும் அவசியமாகும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் மாறுதல்கள் சில தவிர்க்க இயலா விடையங்களை கூர்ந்து அணுகி கிரகித்துக்கொள்ள வேண்டும். அவை அரசின் அணுகுமுறை, ஊடகங்களின் நிலைப்பாடு, அதிகாரிகளின் புரிதல், சமூகத்தில் நிலவும் ஸ்திரத்தன்மை, ஏனைய அமைப்புகளின் ஒத்திசைவு மற்றும் நீதிமன்றத்தின் மறைமுக மேற்பார்வை.
ஆனால், சமீபத்தில் நடந்தேறிய இவ்வமைப்பின் போராட்டங்கள் சில, மேற்கண்ட எவற்றையும் உறுதி செய்துகொண்டு முன்னேடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒரு தெளிவற்ற நிலையில் சில போராட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தேறியதால், அவை கடந்த காலங்களைப் போன்றதொரு வெற்றியில் முடிவுறவில்லை. ஒருவேளை, அவற்றில் ஏதாவது ஒன்றினை நன்கு புரிந்து, பிறகு அதன் பலத்தையும் துணைகொண்டு போராடி இருந்திருப்பின், உறுதியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக, கோரிக்கை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு அது நிலுவையில் இருக்க, அதன் பின்னணியில் போராடி இருந்தால், இது உரிய தீர்வை நோக்கி சென்றிருக்க சாத்தியங்கள் இருந்திருக்கும். இவற்றை விடுத்து, ஒரே யுத்தியை திரும்பத் திரும்ப பிரயோகிப்பது நிச்சயம் உரிய பலனைத் தராது என்பதே கசப்பான உண்மை.
போராட்டங்கள் வலுவிழக்க காரணங்கள்
சமூகம் கண்டிருக்கும் அச்சுறுத்தும் விதத்திலான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணம்; எவ்வாறு என நீங்கள் கேட்பது புரிகிறது. பிரெயில் முறையிலும், ஒலிநாடாவில் பதிவிட்டும் படித்தவரை பார்வையற்றோருக்குப் பெரிதாகக் கவனச்சிதறல் என்கிற தொல்லை இருந்திருக்கவில்லை. ஆனால், இன்றைய சூழலில் அது பலமடங்கு பல்கி பெருகியிருக்கிறது. இதன் விளைவாக, நம் பார்வை மாற்றுத்திறனாளிகள் சமூகம் கடுமையான உழைப்பை இடுவதையும், கடின உழைப்பிற்குத் தீர்க்கமான தீர்வினை தேடுவதையும், அதை ஒரு கூட்டு முயற்சியால் பெற்று களிப்பதையும் மறந்து தவிக்கிறது.
முன்பு ஆசிரியர் பணியே பிரதானம் என்பதாக இருந்த நிலை மாறி, இப்பொழுது ஏராளமான வாய்ப்புகள் பல்வேறு அரசுத் துறைகளில் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. அதன் விளைவாக, இந்த சங்கத்தின் முக்கியத்துவம் சற்றே குறைந்திருக்கிறது. அவர்களையும் அரவணைத்துச் செல்லும் அம்சம் இதன் கட்டமைப்பில் குறைந்து காணப்படுவதே இதற்குக் காரணம் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. நிரந்தரப் பணிவாய்ப்பு ஒருபுறம் இருக்க, தற்காலிக வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தாமை, அது தொடர்பான தகவல்களைக் கண்டும் காணாது இருத்தல் போன்றவை இதன் உறுப்பினர் பலத்தை உடைத்து, உருக்குலைத்து இதன் போராட்டம் என்கிற பலத்தைச் சிதைத்து வீழ்த்தி இருக்கிறது.
தேர்தல் 2018
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த அமைப்பினுடைய தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற ஜுலை 22 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல நெருக்கடிகளை தவிர்க்கும் பொருட்டு, தேர்தல் முன்னதாக நடத்தப்படும் என தற்போதைய செயற்குழு தெரிவித்திருக்கிறது. ஒரு வெற்றி போராட்டத்தை, சிலரேனும் பணிவாய்ப்புப் பெற்றிருக்க வேண்டிய ஒன்றையாவது நடத்த இயலாததால், தேர்தலை முன்னதாக நடத்தவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த செயற்குழுவின் மிக முக்கியமான பலவீனமாகப் பார்க்கப்பட்டது, அது பணியில் உள்ள ஒருவரின்கீழ் செயல்பட்டதே ஆகும். வேலை கிடைக்காததன் வேதனையை உணர்ந்து செயல்படத்தக்க, பணியில் இல்லாத ஒருவரின் தலைமை மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அத்தகைய ஒருவரை அடையாளம் காட்டும் ஒரு தேர்தலாக இது அமையவேண்டும். அப்படி நிகழ்ந்தால், இப்பொழுது காணக்கிடைக்கும் வருந்தத்தக்க சரிவில் இருந்து இந்தச் சங்கத்தை மீட்டிட இயலும்.
இதற்குப் புது இரத்தம் பாய்ச்சி, உயிர்ப்புடனும் விழிப்புடனும் இயங்கச்செய்தல் தவிர்க்க இயலா ஒன்று என கருதுகிறேன். வலுவான காரணங்கள் சில இருப்பினும், அவற்றில் அவசியமானதாகத் தென்படுவது ஒன்றுதான்; அது, இப்படிப்பட்ட வலுவான ஜனநாயகத்தன்மை மிகுந்த சங்கத்தைக் கட்டியமைத்து, அதன் பயனாளர்களை ஒரு கோட்பாட்டுக் குடையின்கீழ் மீண்டும் கொண்டுவருதல் என்பது மாறிவிட்ட சூழலில் மிகவும் கடினம்.
வேண்டும் இத்தகைய மாறுதல்கள்
எதிர்வரும் தேர்தல் அடிப்படையில் ஒற்றுமையை மையப்படுத்தி அமைந்திடல் கட்டாயம் என கருதுகிறேன். துண்டாடப்பட்டுக் கிடக்கும் விடுதி பேதங்கள் முதலில் துடைத்து எறியப்பட வேண்டும். வீட்டில் இருந்தபடி பட்டம் பெறும் பார்வையற்ற சகாக்களை இணைத்துப் பயணித்திட சங்க விதிகள் விரிவாக்கப்படல் அவசியம். படித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் பணியில் இல்லாப் பட்டதாரிகளுக்கு முழுச்சுதந்திரம் அளித்திடல் சாலச்சிறந்தது. அவர்கள் கைகள் கட்டப்படாத விதத்தில் பொறுப்புகள் அளித்து அவர்களைத் தன்னிச்சையாக இயங்கிட வழிவகை உடனடியாகச் செய்வது தவிர்க்க இயலா ஒன்றாகும்.
மறுக்கப்பட்ட பணிவாய்ப்புகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்பொழுது நாளிதழ்களில் பிரசுரிக்க ஒரு குழுவோ அல்லது தனியான பொறுப்பாளரோ சங்கத் தலைமையின்கீழ் பணியாற்றிட வேண்டும். அவசியமான வழக்குகளை உடனுக்குடன் நீதிமன்றத்தில் தொடுத்து, அதை கண்காணித்து, அதன்மூலம் மறுதளிக்கப்படும் பணிவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்தல் காலத்தின் கட்டாயம். இந்த அதிமுக்கிய காரியத்திற்காக ஒரு சட்ட நிபுணத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். சங்க விதிகளையும், பெறப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கும் அரசாணைகளையும் ஒலிப்பதிவு செய்து வாரத்திற்கு ஒருமுறையேனும் சங்க வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்திட வேண்டும். எட்டு செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனி பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, அவற்றை அவர்கள் நிறைவேற்றுவதை கட்டாயமாக்கிடல் வேண்டும்.
பணி வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்காகவே துவங்கப்பட்ட பேரியக்கம் இந்த அமைப்பு என்பதனால், அவசியமற்ற விழாக்கள் நடத்துவதைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது மிகுதியாக செலவிடப்படும் மனித உழைப்பிற்கும், நேர விரயத்திற்கும் சிறந்த தீர்வாக அமையும். நன்கொடைகள் அதிகம் பெறவேண்டிய அழுத்தத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளில் அதிகம் கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாக இது நிச்சயம் அமையும்.
வாசிப்பாளர்களையும், அத்தோடு வாசிப்பையும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள சங்க வளாகத்தில் அதற்கான சூழலை ஏற்படுத்தி, அதனை இடைவிடாது தொடர்ந்திட வேண்டும். தலைசிறந்த படிப்பாளர்களை ஈன்றளித்த இச்சங்கம், இனி தனித்துவமிக்க படைப்பாளர்களை உருவாக்கிட அரும்பாடுபட்டே தீரவேண்டும். சிறப்புப் பள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு, அது வலுவான ஒன்றாக இயங்கிட வேண்டும். இதில் அத்தகைய பள்ளிகளில் படித்துப் பணியில் உள்ளோரை இணைத்துப் பல தளங்களில் அவர்களை செயல்பட அனுமதித்தல் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
தற்பொழுது அமலில் இருக்கிற ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016’ தொடர்பான புரிதலைப் பரவலாக்கி, அதன் விதிகளையும் உள்ளீட்டு அம்சங்களையும் உறுப்பினர்கள் அறியச் செய்திடல் மிகவும் அவசியமாகும். இத்தகைய சட்ட மாறுதலால் ஏற்பட்டிருக்கிற முரண்பாடுகளையும், தவறான புரிதல்களையும் அரசாங்கத்தின் துறை மட்டத்தில் கண்டறிந்து போக்கிட விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மேற்கண்ட யாவற்றையும் படிப்படியேனும் அடையும் விதத்தில் சங்கத்தின் எதிர்வரும் தேர்தலும் அதன் வெளிப்பாடும் இருக்குமெனில், நம் பார்வை மாற்றுத்திறனாளிகள் சமுதாயம் ஒரு மிகச்சிறந்த மற்றும் உறுதியான எதிர்காலத்தில் தீர்க்கமாக அடியெடுத்து வைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை!
--
கட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]