குழந்தைப் பருவத்தில் நாம் எல்லாராலும் கொண்டாடப்பட்டோம். நாளைக்கு ஒரு பருவ அக்காள்களின் மடியில் பள்ளி கொண்டிருந்தோம். அம்மா, அக்கா, அத்தை என இணையற்ற தேவதைகளின் அரவணைப்பின் கதகதப்பும், ஆயிரமாயிரம் முத்தங்களின் ஈரங்களுமே நம் மழலையை மலர்த்திய ஒளிச்சேர்க்கைக் காரணிகள்.
அப்படியே தலைகீழானது பதின் பருவம். கவனிப்பாரற்றவராய் நம்மை நாமே அனுமானித்துக்கொண்டு, எப்போதும் சூழ்படைத் தளபதியாய் சுற்றித் திரிவோம். தாமரை இலைத் தண்ணீராய் தகப்பனிடமும், தொட்டால் சுருங்கியாய் ஆசானிடமும் நழுவித் திரிந்த நமக்கு நண்பர்கள்தான் உலகம். அவர்கள் உண்டதை உண்டோம். இரவு தவிர எப்போதும் ஒன்றாய் உறங்கினோம். விடுதி என்றால், விடிய விடியப் பகல்தான். நம் வாசனை அவர்களின் உடுப்பில் வந்து சேர்ந்தது. நமது உடுப்புகளில் அவர்கள் வாசம் செய்தார்கள்.
எல்லாம் காதலும் காதல் தாண்டிய கல்யாணம் வரைக்குமே சாத்தியமாயிற்று. ஆனால், அந்தப் பருவம் மனதிற்குள் வரைந்துவிட்ட எண்ணற்ற ஓவியங்களின் முகவுரைகளாய், எரிந்துபோன காலத்தின் சுவையான எச்சங்களாய் இப்போதும் இருப்பவை அப்போது நாம் கேட்டுச் சிலிர்த்த, நம்மைக் கிறங்கடித்த, நமது இரவுகளைக் களவாடிய அந்த இசை. உங்களைப்போலவே நானும் அவைகளைத் தேடித்தேடித் தொகுத்து என் மடிக்கணினியை உயிர்ப்புடையதாய் மாற்றியிருக்கிறேன். இருப்பதைப் பகிர்வதுதானே அறம். இதோ ராகரதத்தில் நாம் ஒன்றாய்ப் பயணிப்போம். கொஞ்சம் சுவையான சம்பாஷனைகளுடன். வாருங்கள்.
“இளைஞர்களின் பசுமை நினைவுகள்”
எனது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் காலங்கள் வாழ்வின் உன்னதமான தருணங்கள். இப்போதும் ஏதோ ஒரு நிகழ்வில் அரிதினும் அரிதாக நண்பர்கள் ஒன்றுகூடினால், மதுரையில் நாங்கள் வாழ்ந்த, இல்லை இல்லை பறந்துகொண்டிருந்த நாட்களைப் பற்றிச் சிந்தித்து, சிலாகித்து, சிரித்துக்கொள்வோம். கையில் ஒருவிரல் கூட்டி, காதலும் கானமுமாய் கரைந்துகொண்டிருந்த அந்த நாட்களை தனித்திருக்கும்போது மீட்டுக்கொணர்கிறது நான் கேட்கும் திரை இசைப்பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும், ஏதாவது ஒரு சுவாரசிய நினைவு மனதை அலைக்கழிக்கும்.
அன்றைக்கு எங்களுக்கான திரையிசைப் பாடல்களின் பணுவல் நிலையமாய்த் திகழ்ந்தது மதுரை மாநகர காம்ப்லெக்ஸ் பஸ் ஸ்டாண்ட். அதன் ஒரு பகுதியில் தேவி, ராயல், கோல்டன் என வரிசைகட்டி வரவேற்றன ராகமாளிகைகள். விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் பிய்த்தெடுத்து, நாங்கள் அதிலும் நான் வாங்கிய கேசட்டுகள் அதிகம்.
பெரும்பாலும் நாங்களே பாடல்களைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்திப் பதிவு செய்யத் தருவதுண்டு. சிலநேரங்களில் அந்தக் கடைகளில் இருக்கிற நல்ல தொகுப்புகளையும் வாங்கிச் செல்வோம். அப்படி நாங்கள் வாங்கியதில் மிகவும் மனதைத் தொட்ட தொகுப்பு தேவி கேசட் செண்டர் தொகுத்திருந்த “இளைஞர்களின் பசுமை நினைவுகள்”. அவர்களாக வெளியிடும் தொகுப்பில் இருக்கும் பதிநான்கு பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர பிற பாடல்கள் சோபிக்காது. ஆனால், அந்தத் தொகுப்பில் அத்தனை பாடல்களும் அருமையானவை. அனைத்துமே காதல் தோல்வியில் கசிந்துருகும் கானங்கள். அதிலும் அந்தத் தொகுப்பின் மூன்றாவது பாடல். எங்கள் விருப்பத்தோடே எங்களின் முகமூடிகளைப் பிய்த்தெறிந்த பாடல். நாங்கள் அதிகம் முனுமுனுத்த பாடல்.
அந்த நாட்களின் நண்பர்களில் இப்போதும் என்னோடு அதே அணுக்கத்துடனும், நேசத்துடனும் இருக்கும் நண்பன் ஒருவனின் ஆற்றாப் பெருந்துயருக்கு அந்தப் பாடல்தான் அருமருந்தாய் அமைந்தது. காதலியின் ஏதோ ஒரு சொல் சுட்டுவிட களங்கிவிட்டான் நண்பன். உண்ணவில்லை, உறக்கமில்லை. ஒரே ஒப்பாரி. அவ்வப்போதுதான் நான் துணைக்கிருந்தேன். அந்த நாட்களில் அனுதினமும் அவனின் துணையாய் இருந்தவர் மலேசியா வாசுதேவன்.
“ஒரு மூடன் கதை சொன்னால், என் கதை அதுதான்” என அவர் குரல் எடுத்தாலே நண்பன் ஓ வென அழுதுவிடுவான். “பிரித்தி! உன்னை நினைக்க விரும்புகிறேன், நீ விடவில்லை. உன்னை மறக்க விரும்புகிறேன், அதுவும் முடியவில்லை.” என்ற வரிக்கு இன்னும் தேம்புவான்.
காதலில் துயரம் என்பது நண்பனின் தனி உடைமையா என்ன? கொஞ்ச நாட்களில் எனக்கும், இன்னும் சிலநாளில் இன்னொரு நண்பனுக்குமென அடிகள் விழுந்தபோதும், வலிக்காமல் காப்பாற்றி மயிலிறகால் மனசை வருடியவை இந்த வரிகள்தான். இங்கு காதலித்தாலும், காதலை மறுத்தாலும் பெண்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்கிற கள எதார்த்தம் விளங்காத பருவம் அது. ஆகவே, தேறுதலின் தேறலாய், நாங்கள் அன்று தெரிந்துகொண்ட வரிகள் இவை.
“பெண்ணைப் படைக்காதே பிரம்மனே!
பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே.
ஆலகாலமா? விழியா? சொல்லடா?
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே.
எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்;
பெண்கள் உலகமே நரகமே.”
அப்போதைக்குப் பாடல் முழுக்க விரவிக்கிடந்த பெண்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமே எங்கள் விரக்திக்கு ஒத்தடமாய் அமைந்தது. இன்றைக்கு நடக்கும் ஆசிட் வீச்சுகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். மனம் குற்ற உணர்வு கொள்கிறது. ஆனாலும், எப்போது கேட்டாலும் கண்ணீரையும், ஒருவித சிலிர்ப்பையும் என் நண்பன் முட்டிக்கொண்டு அழுத அந்த விடுதிச் சுவர்களையும் நினைவின்முன் நிறுத்துகிறது பாடல். ஏனெனில், பதின்பருவம் ஹார்மோனைச் சுரந்தது. பாடலோ காதலையும் ஹார்மோனையும் அதிகம் சுரப்பித்தது.
அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் “நெஞ்சில் ஆடும் பூவொன்று”. பாடலுக்கான இசை, இசைஞானி இளையராஜா. பாடியிருப்பவர், மலேசியா வாசுதேவன் அவர்கள் (அந்தப் பாடலைக் கேட்க) பாடலின் தொடக்கத்தில் வரும் சிரிப்பின் குரல் யாருடையது எனத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சிரிப்புதான் பாடல்மீதான ஒருவித மருட்சியையும், மயக்கத்தையும் தொடக்கத்திலேயே தந்துவிடுகிறது.
…ரதம் பயணிக்கும்