நம் நினைவடுக்குகளில் இருக்கும் சுவாரஸ்யமான, சுவையான சில அனுபவங்கள் என பட்டியல் போட்டால் அதில் பெரும்பான்மை பயண அனுபவங்களாகவே இருக்கும். அதிலும் பார்வையற்றவர்களின் பயண அனுபவங்கள் கூடுதல் சுவாரஸ்யம்தான். வழிமாறிப் போவது; மனித உருவம் என நினைத்து, வழியில் நிற்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகளிடமோ சுவற்றிடமோ வழி கேட்பது; டீ ஆத்தும் சத்தம் கேட்டு டீ கடை என நினைத்து, வீட்டுல போயி, “அண்ணே ரெண்டு டீ போடுங்க”ன்னு சொல்றது மாதிரியான சம்பவங்கள் தனியாக பயணங்கள் மேற்கொள்ளும் பெரும்பான்மை பார்வை மாற்றுத்திறன் நண்பர்களுக்குக் கிடைக்கும் நகைச்சுவையான அனுபவங்கள். சில நேரங்களில், வழி கேட்கும்போது பிச்சைக்காரர்கள் என நினைத்து விரட்டப்பட்ட அனுபவமும், சில்லறைகளை அள்ளிக் கையில் கொடுத்தது மாதிரியான எதிர்மறை சம்பவங்களும் என் நண்பர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. இவற்றைப் போன்று, எனக்குக் கிடைத்த பயணத்தோடுகூடிய சுகானுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
நான், மதுரை சுந்தரராஜன்பட்டியில் இருக்கிற இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் நடத்தப்பட்டுவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் படிச்சிட்டிருந்தேன். அன்று 2010 ஜூன் 23 என நினைக்கிறேன்; கோவையில் முன்னாள் முதல்வர் கலைஞரால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அல்லவா? அது தொடங்குவதற்கு முந்தைய நாள். மாநாடு நடைபெறும் 3 நாட்களும் தொடர் விடுமுறைங்கிறதாலயும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் 11ஆம் வகுப்பு முடிஞ்சு முழுபரிட்சை லீவுக்கு வீட்டுக்கு விடாம ஹாஸ்ட்டல்லயே தங்கவச்சு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருந்ததாலையும் பள்ளி நிர்வாகம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த 3 நாட்கள் வீட்டுக்குப்போக அனுமதி கொடுத்ததால நான் தனியாவே வீட்டுக்கு கிளம்பினேன்.
தனியாகப் பயணம் செய்ய பெற்றோர் அனுமதி தந்து, அவ்வாறே என் பயணங்களை ஆரம்பித்த காலம் அது. கேம்பஸ்குள்ளேயே தங்கிப் படிக்கிற ஸ்கூல் பையன்கிறதால இலவச பஸ் பாஸ் கிடையாது என்பதாலும், பஸ்ல ஏறினா சிலநேரம் நடத்துனர் சரியா ஸ்டாப் வந்துச்சுன்னா சொல்லமாட்டார் என்பதாலும் நான் தேர்வுசெய்வது ஷேர் ஆட்டோக்களையே. ஷேர் ஆட்டோக்காரங்க இறங்குரப்போ அடுத்து எங்க போகனும்னு கேட்டு அங்க போர ஷேர் ஆட்டோவுல ஏத்திவிட்டுருவாங்கங்கிறது என்ன மாதிரி புதுசா தனியா பயணம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறவங்களுக்கு கூடுதல் வசதி. சிலநேரம் நம்ம போற எடத்துக்கு நிறைய டிக்கெட் இருந்தா ஏற்கெனவே அவர் போறதா கத்துன எடத்துக்கு பதிலா, நம்ம போகவேண்டிய எடத்துக்கே கொண்டுபோய் விட்டுருவாங்க.
அன்றைக்கும் ஒரு ஷேர் ஆட்டோவுலயே ஏறுனேன். ஷேர் ஆட்டோன்னா உடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி ஆட்டோ வடிவம் மனசுக்குள்ள வந்திருக்கும். ஏன்னா சென்னையில உள்ள ஷேர் ஆட்டோ ஒருமாதிரியும் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில உள்ள ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் மதுரை ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் இருக்கும். இப்பல்லாம் ஊருக்கு ஊர் ஷேர் ஆட்டோ சத்தம்கூட வேற மாதிரிதான் இருக்கு.
நான் இங்க பேசிக்கிட்டிருக்க மதுரை ஷேர் ஆட்டோ எப்படி இருக்கும்னா, நம்மல்லாம் பாத்திருப்போம்ல டீசல் ஆட்டோ, ஒருமாதிரி ‘தட்டதட்டதட்டதட்டதட்ட’ன்னு கேக்கும்ல, அந்த ஆட்டோதான். அதுல டிரைவருக்குப் பின்னாடி உள்ள சீட்டக் கலட்டி, அதுக்கும் பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கும்ல அங்க மாட்டிருப்பாங்க. ஆள் ஏத்தும்போது அந்த சீட்ல கொஞ்சம் பேர், அவங்க காலுக்குக்கீழ ஏற்கெனவே சீட் இருந்த எடத்துல கொஞ்சம் பேர், அப்றம் டிரைவர் சீட்டுக்குப் பின்னாடி மூனு வெரல் அகலத்துக்கு வெல்ட் பண்ணி வச்சிருக்கிற கம்பியில சில பேர்னு உக்காரவைப்பாங்க.
சீட்லயும் அதுக்கு கீழேயும் உக்காருவது ஓரளவுக்கு ஈசிதான்னாலும் இந்த கம்பியில உட்காருவதுங்கிறது தனி கலை. அந்த ஆட்டோ போடுற ஆட்டத்துல எதிர்ல இருக்கிறவங்கமேல கால் படாம, இருக்குற இத்துனோண்டு எடம் எங்க இருக்குன்னு பாத்து சரியா கால ஊனி, அந்த கம்பியில நம்ம பின் பக்கத்த லாவகமா அண்டக் குடுத்து, தலை மேலே இடிக்காத அளவுக்கு கொஞ்சம் குனிஞ்சு இருக்கனும். இவ்ளோ கஷ்டம்! இருந்தாலும் எப்போ ஷேர் ஆட்டோ ஏறினாலும் சீட் காலியா இருந்தாகூட நான் அந்த கம்பிலதான் உக்காருவேன்.
சீட்ல உக்காந்திருக்கப்ப கீழே பெண்கள் இருந்தா, ஆட்டோ போற வேகத்துலயும் ஆட்டோ போடுற ஆட்டத்துலயும் கண்டிப்பா அவங்கமேல கையோ காலோ தவறுதலா பட்டுவிடும். அப்றம் எதும் பிரச்சனன்னா சமாளிக்க முடியாது. ஸ்டாப் வந்தா சீக்கிரமா இறங்கவும் முடியாது. அந்த சீட்டுக்குக் கீழே உள்ள பகுதியில உக்காந்தா, பேன்ட் பின்னாடி தூசி ஒட்டிரும். அதனால எப்பவுமே நமக்கு அந்தக் கம்பிதான் சரியான இடம்.
சரி, சம்பவத்துக்கு வருவோம். அன்னைக்கு எங்க ஸ்கூலுக்கு லீவு விட்டதால அந்த ஆட்டோ கிட்டதட்ட ஃபுல்லா ஆயிருச்சு. அந்தக் கம்பியும் அப்றம் கீழே ஒரு எடமும்தான் பாக்கி. நான் கம்பியில உக்காந்துட்டேன். என் பக்கத்துல கம்பியில ஒரு எடமும் கீழே ஒரு எடமும்தான் நிரப்பப்படாம இருந்துச்சு. ரொம்ப நேரமா, ‘சர்வேயர் காலனி, சர்வேயர் காலனி’ன்னு கத்திக்கிட்டிருந்த ஆட்டோக்காரர், ஒருவழியா கிளம்ப முடிவு பண்ணி மெதுவா ஆக்ஸிலேட்டர திருக, நான் ஸ்கூல்ல வயசுக்கோளாருல லவ் பண்ண ஆரம்பிச்ச, இப்பவும் தீவிரமா லவ் பண்ணிகிட்டு இருக்க என்னோட கிளாஸ் மேட்டும் அவங்க அக்காவும் வேகமா ஓடிவந்து அந்த ஆட்டோவுல ஏறினாங்க.
இந்த ஒலகத்துலதான் இருக்கோமான்னு எனக்கே சின்ன சந்தேகம். நான் மனசுக்குள்ள எதிர்பார்த்தத் தென்றல், புயல் மாதிரி வந்து என் பக்கத்துல, அதுவும் சரியாவே உக்கார முடியாத அந்த கம்பியில வந்து உக்காந்தது. ஷேர் ஆட்டோவோட, மன்னிச்சுக்கோங்க, அந்த விமானத்தோட வேகத்தாலும் இந்தியச் சாலைகளின் புண்ணியத்தாலும் ஆட்டம் காரணமா அவளும் அவள் துப்பட்டாவும் அடிக்கடி என்மேல பட, ஓரிருமுறை அந்த குளிர்ந்த ஐஸ்கட்டி விரல்களும் அனிச்சையாகவே என் கைகளை பற்றிக்கொண்டது. அதுதான் எனது முதல் பறக்கும் அனுபவம்.
அப்பதான் அந்த நல்ல செய்தியும் காதுகளில் ஒலித்தது. அதுவரை சர்வேயர் காலனி என கத்திக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்காரர், சாரிப்பா, அந்த விமாண பைலட் அப்டியே ஃபிலேட்ட மாத்தி மாட்டுத்தாவணின்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாங்களும் வெளியூர் பேருந்துகளை பிடிக்க மாட்டுத்தாவணிதான் செல்லவேண்டும் என்பதால், அந்த விமானப்பயணம் ஒரு ஐந்து நிமிடம் நீடித்ததில் மிக்க மகிழ்ச்சி. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போய் இறங்கியப் பிறகும், எனது அதிர்ஷ்ட தேவதை என்னைக் கைவிடவில்லை.
பல வருடங்களாக தென்காசியில் வசித்த எனதுக் குடும்பம், அப்பாவுக்கு சரியான வேலை இல்லாததால், கிடைத்த ஒரு நல்ல வேலைக்காக தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்திருந்தது. தூத்துக்குடியை நோக்கிய என் முதல் பயணம் அது. என்னோடு வந்த புயலும் தூத்துக்குடியில்தான் கரையை கடக்கவேண்டியிருந்ததால், ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய என்னை அப்படியே தன் விரல்களில் சிறைபிடித்து, தூத்துக்குடி பேருந்தில் கொண்டுபோய் ஏற்றிவிட்டு என் அருகிலும் உட்கார்ந்துகொண்டது.
அன்று பேருந்தில் கூட்டம் இல்லாததால், மூன்று பேருக்கான இருக்கையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஷேர் ஆட்டோவைப் போல அதிக தொடுதலுக்கு வாய்ப்பில்லாமல் போனாலும், நிறைய பேசினோம். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பைபாஸ் ரைடர் பேருந்தில் பயணிக்க ஆகும் 3 மணிநேரமும் பிடித்தது, பிடிக்காதது, பள்ளிக்கூடத்தில் உளவும் எங்கள் காதலைப்பற்றிய வதந்திகள், குடும்பச் சூழல், எதிர்காலம், பாடம், வகுப்பு நிலவரம் ஆகியவற்றைப் பற்றி பேசினோம். இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவளும் நானும் இதைவீட நீண்ட பயணங்கள் நிறைய மேற்கொண்டிருந்தாலும், எங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய வகையில் அந்த முதல் பயணமே என் மனதில் முதலிடம் பிடித்துவிட்டது.
இன்னொரு பயண அனுபவம் இதற்கு நேர்மாறானது. தனியாகப் பயணம் செய்வதை அதிகமாக நான் விரும்பினாலும், ஒரு பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்வது பிடிக்காது. நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் தனியாகப் போராடிக்கொள்ளலாம். ஆனால், நம்முடன் வரும் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை எனில், அந்த இடத்தில் ஒரு பார்வையற்றவரால் எதுவும் செய்துவிடமுடியாது. அது தவிர, நாங்கள் செய்வது அங்கீகரிக்கப்படாத பயணம் என்பதால் நிறையவே பயம் இருக்கும். இந்தக் காரணங்களுக்காக நான் மறுத்தாலும், அவளின் அன்புத்தொல்லை என்னை விடாது. பெரும்பாலும், வேறு வழியில்லாமலேயே ஒப்புக்கொண்டு அவள் கட்டாயப்படுத்தும் பயணங்களுக்கு வர சம்மதித்தாலும், பயணத்தில் அவளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அது நாங்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நான் படித்தப் பள்ளியில் ஒரு விழா இருப்பதால் அதில் கலந்துகொள்ள வேண்டுமெனச் சொல்லி மதுரைக்குப் போக வீட்டில் அனுமதி வாங்கிவிட்டேன். உண்மையாகவே பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், நான் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென அவளிடம் சொன்னதால், அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘இனி நீ போகவேண்டாம் என முடிவுசெய்தாலும் நான் உன்னை விடமாட்டேன். கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து போயே தீரவேண்டும்’ என சொல்லிவிட்டால். ‘நான் பஸ் ஏத்தி விடுறேன்’ என்று சொன்ன அப்பாவை கஷ்டப்பட்டு சமாளித்து, தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு தனியாகவே வந்து, அவள் வரும் வரை காத்திருந்து ஒரு மதுரைப் பேருந்தில் ஏறினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கி, எங்கள் பள்ளி அமைந்திருக்கும் சுந்தரராஜன்பட்டி செல்ல, சர்வேயர் காலனிக்குச் செல்லும் ‘C4’ பேருந்தை பிடிக்கவேண்டும். ஆனால், நாங்கள் தவறுதலாக ‘C3’ பேருந்தில் ஏறிவிட்டோம். எனவே நடத்துனர், ‘அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுகிறேன். நீங்கள் சர்வேயர் காலனி பேருந்தை ஈசியாக பிடித்துவிடலாம்’ எனச் சொல்லி அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டார்.
அங்கு இறங்கிச் சாலையைக் கடக்கும்போது, சத்தமில்லாமல் வந்த ஒரு காரைக் கவனிக்கவில்லை. அவர் வேகமாக வந்து, என் ஸ்டிக்கில் (வெண்கோல்) மோதிவிட்டார். தவறு எங்கள் மீது என்றாலும், கார்க்காரரை மற்றவர்கள் திட்டினார்கள். உடைந்த ஸ்டிக்கை வீட்டுக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், அங்கேயே போட்டுவிட்டு கிளம்பிவிட்டோம். ஒருவழியாக எங்கள் பள்ளிக்குச் சென்று விழாவை முடித்துவிட்டு மாட்டுத்தாவணி திரும்பினோம். அங்கு அடுத்த ஏழரை காத்திருந்தது.
எப்பொழுதும் தூத்துக்குடி செல்ல பைபாஸ் ரைடர் பேருந்தை பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், அன்று அவள் பைபாஸ் ரைடரில் சென்றால் சீக்கிரமே ஊர் வந்துவிடும் என்பதால் லோக்கல் பேருந்தில்தான் செல்லவேண்டும் என அடம்பிடித்துவிட்டால். கிடைத்த பைபாஸ் ரைடரையெல்லாம் விட்டுவிட்டு ஒரு லோக்கல் பேருந்தில் ஏறினோம். எனக்கு மனசுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு; ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக ஒரு உள்ளுணர்வு.
அது மிகச்சரியாகவே இருந்தது. பேருந்து அருப்புக்கோட்டையைத் தாண்டியபோது, டயர் வெடித்துவிட்டது. பிறகென்ன, ஒருவழியாக பேருந்தை உருட்டிக்கொண்டுச் சென்று, ஒரு உணவகத்தில் நிறுத்தி, வேறு பேருந்தில் மாற்றிவிட்டார்கள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, எப்பொழுது அவள் பயணம் செய்ய அழைத்தாலும், நான் மறுக்க ஸ்ட்ராங்கான ஒரு காரணம் என் கையில் இருந்தது.
இப்போது எங்கள் காதலுக்கு வீட்டில் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. பேருந்துப் பயணத்தில் அவளோடு செல்ல தடை ஏதுமில்லை; வாழ்க்கைப் பயணத்தில் அவளோடு சேரும் நாளுக்கு இன்னும் விடையில்லை.
நான், மதுரை சுந்தரராஜன்பட்டியில் இருக்கிற இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் நடத்தப்பட்டுவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் படிச்சிட்டிருந்தேன். அன்று 2010 ஜூன் 23 என நினைக்கிறேன்; கோவையில் முன்னாள் முதல்வர் கலைஞரால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அல்லவா? அது தொடங்குவதற்கு முந்தைய நாள். மாநாடு நடைபெறும் 3 நாட்களும் தொடர் விடுமுறைங்கிறதாலயும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் 11ஆம் வகுப்பு முடிஞ்சு முழுபரிட்சை லீவுக்கு வீட்டுக்கு விடாம ஹாஸ்ட்டல்லயே தங்கவச்சு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருந்ததாலையும் பள்ளி நிர்வாகம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த 3 நாட்கள் வீட்டுக்குப்போக அனுமதி கொடுத்ததால நான் தனியாவே வீட்டுக்கு கிளம்பினேன்.
தனியாகப் பயணம் செய்ய பெற்றோர் அனுமதி தந்து, அவ்வாறே என் பயணங்களை ஆரம்பித்த காலம் அது. கேம்பஸ்குள்ளேயே தங்கிப் படிக்கிற ஸ்கூல் பையன்கிறதால இலவச பஸ் பாஸ் கிடையாது என்பதாலும், பஸ்ல ஏறினா சிலநேரம் நடத்துனர் சரியா ஸ்டாப் வந்துச்சுன்னா சொல்லமாட்டார் என்பதாலும் நான் தேர்வுசெய்வது ஷேர் ஆட்டோக்களையே. ஷேர் ஆட்டோக்காரங்க இறங்குரப்போ அடுத்து எங்க போகனும்னு கேட்டு அங்க போர ஷேர் ஆட்டோவுல ஏத்திவிட்டுருவாங்கங்கிறது என்ன மாதிரி புதுசா தனியா பயணம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறவங்களுக்கு கூடுதல் வசதி. சிலநேரம் நம்ம போற எடத்துக்கு நிறைய டிக்கெட் இருந்தா ஏற்கெனவே அவர் போறதா கத்துன எடத்துக்கு பதிலா, நம்ம போகவேண்டிய எடத்துக்கே கொண்டுபோய் விட்டுருவாங்க.
அன்றைக்கும் ஒரு ஷேர் ஆட்டோவுலயே ஏறுனேன். ஷேர் ஆட்டோன்னா உடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி ஆட்டோ வடிவம் மனசுக்குள்ள வந்திருக்கும். ஏன்னா சென்னையில உள்ள ஷேர் ஆட்டோ ஒருமாதிரியும் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில உள்ள ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் மதுரை ஷேர் ஆட்டோ வேற மாதிரியும் இருக்கும். இப்பல்லாம் ஊருக்கு ஊர் ஷேர் ஆட்டோ சத்தம்கூட வேற மாதிரிதான் இருக்கு.
நான் இங்க பேசிக்கிட்டிருக்க மதுரை ஷேர் ஆட்டோ எப்படி இருக்கும்னா, நம்மல்லாம் பாத்திருப்போம்ல டீசல் ஆட்டோ, ஒருமாதிரி ‘தட்டதட்டதட்டதட்டதட்ட’ன்னு கேக்கும்ல, அந்த ஆட்டோதான். அதுல டிரைவருக்குப் பின்னாடி உள்ள சீட்டக் கலட்டி, அதுக்கும் பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கும்ல அங்க மாட்டிருப்பாங்க. ஆள் ஏத்தும்போது அந்த சீட்ல கொஞ்சம் பேர், அவங்க காலுக்குக்கீழ ஏற்கெனவே சீட் இருந்த எடத்துல கொஞ்சம் பேர், அப்றம் டிரைவர் சீட்டுக்குப் பின்னாடி மூனு வெரல் அகலத்துக்கு வெல்ட் பண்ணி வச்சிருக்கிற கம்பியில சில பேர்னு உக்காரவைப்பாங்க.
சீட்லயும் அதுக்கு கீழேயும் உக்காருவது ஓரளவுக்கு ஈசிதான்னாலும் இந்த கம்பியில உட்காருவதுங்கிறது தனி கலை. அந்த ஆட்டோ போடுற ஆட்டத்துல எதிர்ல இருக்கிறவங்கமேல கால் படாம, இருக்குற இத்துனோண்டு எடம் எங்க இருக்குன்னு பாத்து சரியா கால ஊனி, அந்த கம்பியில நம்ம பின் பக்கத்த லாவகமா அண்டக் குடுத்து, தலை மேலே இடிக்காத அளவுக்கு கொஞ்சம் குனிஞ்சு இருக்கனும். இவ்ளோ கஷ்டம்! இருந்தாலும் எப்போ ஷேர் ஆட்டோ ஏறினாலும் சீட் காலியா இருந்தாகூட நான் அந்த கம்பிலதான் உக்காருவேன்.
சீட்ல உக்காந்திருக்கப்ப கீழே பெண்கள் இருந்தா, ஆட்டோ போற வேகத்துலயும் ஆட்டோ போடுற ஆட்டத்துலயும் கண்டிப்பா அவங்கமேல கையோ காலோ தவறுதலா பட்டுவிடும். அப்றம் எதும் பிரச்சனன்னா சமாளிக்க முடியாது. ஸ்டாப் வந்தா சீக்கிரமா இறங்கவும் முடியாது. அந்த சீட்டுக்குக் கீழே உள்ள பகுதியில உக்காந்தா, பேன்ட் பின்னாடி தூசி ஒட்டிரும். அதனால எப்பவுமே நமக்கு அந்தக் கம்பிதான் சரியான இடம்.
சரி, சம்பவத்துக்கு வருவோம். அன்னைக்கு எங்க ஸ்கூலுக்கு லீவு விட்டதால அந்த ஆட்டோ கிட்டதட்ட ஃபுல்லா ஆயிருச்சு. அந்தக் கம்பியும் அப்றம் கீழே ஒரு எடமும்தான் பாக்கி. நான் கம்பியில உக்காந்துட்டேன். என் பக்கத்துல கம்பியில ஒரு எடமும் கீழே ஒரு எடமும்தான் நிரப்பப்படாம இருந்துச்சு. ரொம்ப நேரமா, ‘சர்வேயர் காலனி, சர்வேயர் காலனி’ன்னு கத்திக்கிட்டிருந்த ஆட்டோக்காரர், ஒருவழியா கிளம்ப முடிவு பண்ணி மெதுவா ஆக்ஸிலேட்டர திருக, நான் ஸ்கூல்ல வயசுக்கோளாருல லவ் பண்ண ஆரம்பிச்ச, இப்பவும் தீவிரமா லவ் பண்ணிகிட்டு இருக்க என்னோட கிளாஸ் மேட்டும் அவங்க அக்காவும் வேகமா ஓடிவந்து அந்த ஆட்டோவுல ஏறினாங்க.
இந்த ஒலகத்துலதான் இருக்கோமான்னு எனக்கே சின்ன சந்தேகம். நான் மனசுக்குள்ள எதிர்பார்த்தத் தென்றல், புயல் மாதிரி வந்து என் பக்கத்துல, அதுவும் சரியாவே உக்கார முடியாத அந்த கம்பியில வந்து உக்காந்தது. ஷேர் ஆட்டோவோட, மன்னிச்சுக்கோங்க, அந்த விமானத்தோட வேகத்தாலும் இந்தியச் சாலைகளின் புண்ணியத்தாலும் ஆட்டம் காரணமா அவளும் அவள் துப்பட்டாவும் அடிக்கடி என்மேல பட, ஓரிருமுறை அந்த குளிர்ந்த ஐஸ்கட்டி விரல்களும் அனிச்சையாகவே என் கைகளை பற்றிக்கொண்டது. அதுதான் எனது முதல் பறக்கும் அனுபவம்.
அப்பதான் அந்த நல்ல செய்தியும் காதுகளில் ஒலித்தது. அதுவரை சர்வேயர் காலனி என கத்திக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்காரர், சாரிப்பா, அந்த விமாண பைலட் அப்டியே ஃபிலேட்ட மாத்தி மாட்டுத்தாவணின்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாங்களும் வெளியூர் பேருந்துகளை பிடிக்க மாட்டுத்தாவணிதான் செல்லவேண்டும் என்பதால், அந்த விமானப்பயணம் ஒரு ஐந்து நிமிடம் நீடித்ததில் மிக்க மகிழ்ச்சி. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போய் இறங்கியப் பிறகும், எனது அதிர்ஷ்ட தேவதை என்னைக் கைவிடவில்லை.
பல வருடங்களாக தென்காசியில் வசித்த எனதுக் குடும்பம், அப்பாவுக்கு சரியான வேலை இல்லாததால், கிடைத்த ஒரு நல்ல வேலைக்காக தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்திருந்தது. தூத்துக்குடியை நோக்கிய என் முதல் பயணம் அது. என்னோடு வந்த புயலும் தூத்துக்குடியில்தான் கரையை கடக்கவேண்டியிருந்ததால், ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய என்னை அப்படியே தன் விரல்களில் சிறைபிடித்து, தூத்துக்குடி பேருந்தில் கொண்டுபோய் ஏற்றிவிட்டு என் அருகிலும் உட்கார்ந்துகொண்டது.
அன்று பேருந்தில் கூட்டம் இல்லாததால், மூன்று பேருக்கான இருக்கையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஷேர் ஆட்டோவைப் போல அதிக தொடுதலுக்கு வாய்ப்பில்லாமல் போனாலும், நிறைய பேசினோம். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பைபாஸ் ரைடர் பேருந்தில் பயணிக்க ஆகும் 3 மணிநேரமும் பிடித்தது, பிடிக்காதது, பள்ளிக்கூடத்தில் உளவும் எங்கள் காதலைப்பற்றிய வதந்திகள், குடும்பச் சூழல், எதிர்காலம், பாடம், வகுப்பு நிலவரம் ஆகியவற்றைப் பற்றி பேசினோம். இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவளும் நானும் இதைவீட நீண்ட பயணங்கள் நிறைய மேற்கொண்டிருந்தாலும், எங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய வகையில் அந்த முதல் பயணமே என் மனதில் முதலிடம் பிடித்துவிட்டது.
இன்னொரு பயண அனுபவம் இதற்கு நேர்மாறானது. தனியாகப் பயணம் செய்வதை அதிகமாக நான் விரும்பினாலும், ஒரு பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்வது பிடிக்காது. நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் தனியாகப் போராடிக்கொள்ளலாம். ஆனால், நம்முடன் வரும் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை எனில், அந்த இடத்தில் ஒரு பார்வையற்றவரால் எதுவும் செய்துவிடமுடியாது. அது தவிர, நாங்கள் செய்வது அங்கீகரிக்கப்படாத பயணம் என்பதால் நிறையவே பயம் இருக்கும். இந்தக் காரணங்களுக்காக நான் மறுத்தாலும், அவளின் அன்புத்தொல்லை என்னை விடாது. பெரும்பாலும், வேறு வழியில்லாமலேயே ஒப்புக்கொண்டு அவள் கட்டாயப்படுத்தும் பயணங்களுக்கு வர சம்மதித்தாலும், பயணத்தில் அவளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அது நாங்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நான் படித்தப் பள்ளியில் ஒரு விழா இருப்பதால் அதில் கலந்துகொள்ள வேண்டுமெனச் சொல்லி மதுரைக்குப் போக வீட்டில் அனுமதி வாங்கிவிட்டேன். உண்மையாகவே பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், நான் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென அவளிடம் சொன்னதால், அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘இனி நீ போகவேண்டாம் என முடிவுசெய்தாலும் நான் உன்னை விடமாட்டேன். கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து போயே தீரவேண்டும்’ என சொல்லிவிட்டால். ‘நான் பஸ் ஏத்தி விடுறேன்’ என்று சொன்ன அப்பாவை கஷ்டப்பட்டு சமாளித்து, தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு தனியாகவே வந்து, அவள் வரும் வரை காத்திருந்து ஒரு மதுரைப் பேருந்தில் ஏறினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கி, எங்கள் பள்ளி அமைந்திருக்கும் சுந்தரராஜன்பட்டி செல்ல, சர்வேயர் காலனிக்குச் செல்லும் ‘C4’ பேருந்தை பிடிக்கவேண்டும். ஆனால், நாங்கள் தவறுதலாக ‘C3’ பேருந்தில் ஏறிவிட்டோம். எனவே நடத்துனர், ‘அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுகிறேன். நீங்கள் சர்வேயர் காலனி பேருந்தை ஈசியாக பிடித்துவிடலாம்’ எனச் சொல்லி அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டார்.
அங்கு இறங்கிச் சாலையைக் கடக்கும்போது, சத்தமில்லாமல் வந்த ஒரு காரைக் கவனிக்கவில்லை. அவர் வேகமாக வந்து, என் ஸ்டிக்கில் (வெண்கோல்) மோதிவிட்டார். தவறு எங்கள் மீது என்றாலும், கார்க்காரரை மற்றவர்கள் திட்டினார்கள். உடைந்த ஸ்டிக்கை வீட்டுக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், அங்கேயே போட்டுவிட்டு கிளம்பிவிட்டோம். ஒருவழியாக எங்கள் பள்ளிக்குச் சென்று விழாவை முடித்துவிட்டு மாட்டுத்தாவணி திரும்பினோம். அங்கு அடுத்த ஏழரை காத்திருந்தது.
எப்பொழுதும் தூத்துக்குடி செல்ல பைபாஸ் ரைடர் பேருந்தை பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், அன்று அவள் பைபாஸ் ரைடரில் சென்றால் சீக்கிரமே ஊர் வந்துவிடும் என்பதால் லோக்கல் பேருந்தில்தான் செல்லவேண்டும் என அடம்பிடித்துவிட்டால். கிடைத்த பைபாஸ் ரைடரையெல்லாம் விட்டுவிட்டு ஒரு லோக்கல் பேருந்தில் ஏறினோம். எனக்கு மனசுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு; ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக ஒரு உள்ளுணர்வு.
அது மிகச்சரியாகவே இருந்தது. பேருந்து அருப்புக்கோட்டையைத் தாண்டியபோது, டயர் வெடித்துவிட்டது. பிறகென்ன, ஒருவழியாக பேருந்தை உருட்டிக்கொண்டுச் சென்று, ஒரு உணவகத்தில் நிறுத்தி, வேறு பேருந்தில் மாற்றிவிட்டார்கள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, எப்பொழுது அவள் பயணம் செய்ய அழைத்தாலும், நான் மறுக்க ஸ்ட்ராங்கான ஒரு காரணம் என் கையில் இருந்தது.
இப்போது எங்கள் காதலுக்கு வீட்டில் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. பேருந்துப் பயணத்தில் அவளோடு செல்ல தடை ஏதுமில்லை; வாழ்க்கைப் பயணத்தில் அவளோடு சேரும் நாளுக்கு இன்னும் விடையில்லை.