பொதுவாகவே வரலாற்றைக் கற்பிப்பவர்கள் நமக்கு ஊக்கம் தரும்படி சொல்லும் ஒரு வாக்கியம், ‘இன்று நீ வரலாறு கற்றால், நாளை வரலாறு படைக்கலாம்’ என்பதைத்தான். ஆனால், நமது இந்தியக் கல்விக் கலாச்சாரம், ஒரு வரலாறு பற்றியோ அல்லது வரலாற்று நாயகர்கள் பற்றியோ நமது அறிதலை மட்டுமே சோதிக்க முற்பட்டு புரிதலைப் புறந்தள்ளுகிறது.
காமராசரைப் பற்றிப் போதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம், ‘காமராசர் எங்கு எப்போது பிறந்தார்?’, ‘அவரது தாய் தந்தை பெயரென்ன?’ போன்ற கேள்விகளால் குழந்தையின் விடைத்தாள் நாட்குறிப்பு ஏடாகவும், குழந்தையின் மனம் தகவல் சேமிக்கும் கணினி வன்தட்டாகவும் (Hard Disc) மாறிவிடுகிறது.
காமராசரின் மதிய உணவுத் திட்டம், ஊர்தோறும் பள்ளிகள் போன்ற அளப்பரிய சாதனைகளின் பின்னணியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எந்தப் பாடப்புத்தகத்திலும் பார்க்க இயலவில்லை. இப்படித்தான் நாம் கொடையாளர்களைப் போற்றுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் கொடைகளான கோட்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் காட்டுவதில்லை.
‘நாம் எப்போதும் இழிவாகவும் மலிவாகவும் நினைத்துக் கடக்கும் தொழிலாளியின் ஒரு குதிரைச்சேணம் தைக்கும் ஊசிக்குப் பின்னே ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தலைநிமிர்ந்திருக்கும் வரலாறு பிரெயிலினுடையது’ என குழந்தைகளுக்குப் போதித்து இருக்கிறோமா? மாறாக, லூயி பிரெயில் எங்கு எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் போன்றவற்றை அறிவிக்க நாம் எதற்கு? கணினிப் பயிற்சி அளித்தால் கூகுல் மாமாவிடமே குழந்தைகள் கேட்டுக்கொள்ளுமே.
2003ல் நான் மும்பையிலுள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தில் (NAB) சுருக்கெழுத்து பயின்றுகொண்டிருந்தேன். எனது மாலைநேரப் பொழுதுபோக்காக நானும் சில நண்பர்களும் அவ்வப்போது வொர்லி பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அங்குதான் என்.ஏ.பி.யின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது.
பார்வையற்றோர் எளிதாக நுழையும் வண்ணம் அதன் வாயிலின் இரு மருங்கிலும் ஒலிக்கும் பீப் சத்தத்தைக் கடந்து உள்ளே சென்றால், கம்பீரமான ஒரு சிலை நம்மை வரவேற்கிறது. எனக்கு அந்தச் சிலையைத் தடவிக்காட்டிய எனது மராத்திய நண்பன் தத்தா, “இதோ பார் நமது குலசாமி” என்றான். பத்தி பத்தியாய்ப் படித்தபோதெல்லாம் நான் உணராத லூயியின் மகத்துவத்தை நண்பனின் ஒரு வார்த்தை போகிறபோக்கில் உணர்த்தியது.
லூயி, பள்ளத்தில் மேடுகளை உருவாக்கி பார்வையற்றோரைக் கல்விமூலம் இச்சமுகத்தோடு சமப்படுத்திய ஓர் சமூகப்போராளி. விரல்களில் கண்களைப் பொருத்திய விந்தையான பார்வையற்ற கண் மருத்துவர். “யாதும் ஊரே” என நமது பாட்டன் கணியன் சொன்னான். ‘உலகின் எல்லா மொழிகளும் பார்வையற்றோர் நம் வசமே’ என அகில மொழிகள் அனைத்தையும் அறுபத்து மூன்றே வடிவங்களில் அணைத்துக்கொண்ட அன்பாளன், உலகின் தலைசிறந்த ஒருமைப்பாட்டாளன் லூயி.
ஈடில்லா இழப்புகளைச் சந்தித்தேனும் உலகத்தை உய்விக்க வேண்டும் என எண்ணியவர்களின் முயற்சியும் புரட்சியுமே, இருள் சூழ்ந்து இவ்வுலகம் அழிந்துபோகும் மட்டும், அழிந்திடாத, எந்த ஒரு கால மாறுபாட்டுக்கும் பொருந்திப்போய், தொடர்ந்து சமுகத்தை வழிநடத்திக்கொண்டே இருக்கும். காந்தி, தன்னுயிரை ஈந்துதான் இந்தியாவைச் சமுக நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வந்தார். அவர் நமக்குத் தந்த அகிம்சை எனும் அழியாக் கொள்கையின் வெளிப்பாடுதான் பல்வேறு கோரிக்கைகளைச் சுமந்து நமது பார்வையற்ற மாணவர்கள் செய்யும் அவ்வப்போதைய வகுப்பறைப் புறக்கணிப்பும் உண்ண மறுத்தலும் என்ற உண்மையைக் காந்தியை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
அதுபோலத்தான் லூயி, ஈடுசெய்ய இயலாத தன் பார்வையை இழந்தும், இந்தப் பிரபஞ்சம் நிலைக்கும் மட்டும் பார்வையற்றோருக்கான நித்திய ஒளியைப் படைத்துவிட்டுப் போனார். அத்தகைய உயரிய தியாகத்தால் உருவான உன்னத பிரெயில் வடிவத்தைப் பார்வையற்றோராகிய நாம் போற்றிப் பேணுகிறோமா? காலப்பெருவெள்ள மாற்றத்தினால், பல்வேறு ஒலிவடிவங்களும் தொழில்நுட்பமும் நம் கற்கும் முறைகளில் மிகப்பெரும் ஆக்கிரமிப்புகளைச் செய்திருக்கின்றன என்றாலும், பிரெயில் அளவுக்கு அவை நம்மை மேம்படுத்தும் சாதனங்களாக இல்லை என்பதை ஒவ்வொரு பார்வையற்றவரும் தன் மனதளவில் உணர்ந்தே இருக்கிறோம்.
போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில், நாம் ஒரு துறையில் பாண்டித்தியம் பெற நமக்குப் பல்துறை அறிவு அவசியமாக உள்ளது. எனவே, காலமேலாண்மை என்ற கருத்து ஓங்கி ஒலிக்கும் இப்போது, பிரெயிலில் எழுதுவதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கணினியில் தட்டச்சு செய்யப் பழகிவிட்டோம். இதைச் சொல்லும் இப்பொழுதுகூட, இக்கட்டுரையை நான் கணினியில்தான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், வாசிக்கும் அனுபவம் அப்படிப்பட்டதல்ல; எலக்குவன்ஸ், ஈ-ஸ்பீக் என எத்தனை வாசிப்பான்கள் வரிசைகட்டினாலும், விரல்களின் ஸ்பரிசங்களே மூளையை விழிப்பாக வைத்திருந்தன; மேற்சொன்ன வாசிப்பான்களின் தாலாட்டால் தூங்கிப்போன நமது மூளைகளின் துன்பியல் கதைகள் நம்மிடம் ஏராளம் ஏராளம். அதனால்தான் பள்ளிப்பருவத்தில் ஒரு பார்வையற்ற மாணவனுக்குக் காணப்படும் கூர்ந்த மதி, கல்லூரிப் பருவத்தில் அவனிடம் காணக்கிடைப்பதில்லை.
பிரெயில் எழுதுவதைத் தவிர்ப்பதில் நாம் சொல்லும் காலமேலாண்மை என்ற காரணத்தில்கூட சிறிதளவே உண்மை இருக்கிறது. நமது சோம்பேறித்தன மனநிலைதான் நம்மை பிரெயிலில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்கிறது. கொஞ்சம் காலச்சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தி யோசித்தால் இது புரியும்.
நம்மில் பலருக்கு நமது இளமைப்பருவத்தில் காதல் கடிதங்கள் எழுதிய அனுபவம் இருந்திருக்கும். எத்தனை எத்தனை தாள்களைக் குத்தி மேடாக்கி, மேன்மை தாங்கிய இலக்கியமாக மேம்படுத்தியிருக்கிறோம். அன்று, லூயி இராணுவ இரகசியங்களுக்கான வடிவத்தை பிரெயில் வடிவமாக மாற்றினார். இன்று, காதல் என்னும் இராணுவ இரகசியத்துக்காக பிரெயில் வடிவத்தைப் பயன்படுத்தி, வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கும் புரட்சியாளர்கள் நாம். உண்மையில் சிந்தியுங்கள்! வெறும் தகவல் பரிமாறும் நோக்கில்தான் நாம் இக்கடிதங்களை எழுதித் தள்ளினோமா? இல்லை. ‘இது காதலைப் போன்றே, நானும் அவளும் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ளும் புரட்சிமொழி’ என்ற பெருமித மனநிலைதானே முக்கிய உந்துசக்தியாக இருந்தது.
மழைக்காலத்தில் வெளிவரும் புற்றீசல்கள்போல, மறுவாழ்வு என்ற போர்வையில் முளைத்திருக்கும் சில பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்கள், அதன் அமைப்பாளர் இயல்பிலும், எண்ணத்திலும் குறைபார்வை (low-vision) உடையவராக இருப்பதால், பிரெயிலின் இடத்தைத் தொழில்நுட்பம் நிரப்பிவிட்டதாகக் கூறி, பிரெயிலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுக் கூச்சலிடலாம்.
“அனைவருக்கும் கல்வித்திட்டம்” என்ற மாற்றுத்திறனாளிகளின் அதிலும் குறிப்பாகப் பார்வையற்றவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசால் ஊதப்பட்டிருக்கும் சாவுச்சங்கு அக்கருத்தை ஆராதிக்கலாம். அத்தகைய இக்கட்டான காலங்களில், பிரெயிலைக் காப்பாற்ற பார்வையற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்.
முதலில், ஜனவரி 4 இந்த நாளை அகில உலகப் பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக உலக நாடுகள் அறிவித்திட பார்வையற்றோராகிய நாம் வலியுறுத்திட வேண்டும். படைப்புச் சமூகத்தின் அங்கங்களான எழுத்தாளன், பதிப்பாளன், அச்சு ஊடகம் என அனைவரும் தனது படைப்புகளின் பிரதிகளை பிரெயிலிளும் அச்சிட ஆர்வம் கொள்ளவேண்டும். அத்தகைய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவதும், படைப்புச் சமுகத்தின் அத்தகைய முயற்சியை ஊக்குவிக்கும் பொருளாதாரப் பாளமாய்த் திகழ அரசை வலியுறுத்துவதும் படித்த நம் ஒவ்வொரு பார்வையற்றவரின் கடமை.
இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முயற்சியால் வெளியிடப்பட்டுள்ள 53 தொகுதிகளைக்கொண்ட க்ரியா என்ற தமிழ் அகராதி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு பார்வையற்ற நண்பர், ‘பதினைந்தாயிரம் கொடுத்து நாங்கள் இந்த அகராதியை வாங்கினால் எங்களுக்கு அதைப் பராமரிக்க நிறுவனம் இலவசமாக ஒரு அறையைக் கட்டித்தரவேண்டும்’ என நகைச்சுவையாகக் கேட்டுள்ளார். அவரின் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்குத் தீர்வாக நாம் முன்வைப்பது, மாவட்டவாரி பிரெயில் நூலகம்.
இன்று நம்மில் பல பார்வையற்றவர்கள் அரசு வேலை என்ற நல்ல நிலையில் அமர்ந்திருக்கக் காரணம் பிரெயில் என்பதுதானே உண்மை. அரசு வேலையிலுள்ள பார்வையற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக இணைந்து, மாவட்டந்தோறும் பிரெயில் நூலகங்களைக் கட்டமைக்களாமே! அரசு வேலைக் கிடைத்ததும் திருமணம், சொந்தவீடு என்றெல்லாம் விரியும் நம் இலக்குகளில், அந்த வீட்டிற்காகும் செங்கற்களில் ஒன்றையாவது இத்தகைய நூலகம் அமைக்கப் பங்களிக்கலாமே. நாம் தாமாக முன்வந்து இணையும்போது அரசைத் தீவிரமாக வலியுறுத்தும் தார்மீக உரிமையைப் பெறலாம்.
அரசும் கருப்புக் கண்ணாடிகளையும், வெண்கோள்களையும் வழங்குவதோடு தம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காணப்படும் பல்வேறு நூல்களை பிரெயில் வடிவில் மாற்றி, நாம் வாசிக்க உதவும் பிரெயில் டிஸ்ப்லேக்களை இலவசமாகவோ மானிய விலையிலோ வழங்க முன்வரவேண்டும். இத்தகைய கோரிக்கைகளோடு அரசை அணுகும் கடமை நம் பார்வையற்ற சமூகத்துக்கு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
சட்டைப்பைச் சில்லறைகளை வகைபிரித்துத் தந்த எனது தந்தை, “இது லூயி பிரெயில் உருவம் பொறித்த காசு” என ஒரு நாணயத்தை எடுத்துத் தந்தபோது, ‘இது வெறும் உருவம் அல்ல. என் வளர்ச்சியைச் சொல்லும் ஒரு குறியீடு’ என மனதால் பிரெயிலின் பெருமையை சிலாகிப்பதில் மட்டும் பிரெயில் என்கிற உன்னத மொழி மேன்மை பெற்றுவிடாது என்பது புரிகிறது.
அனைவருக்கும் லூயி பிரெயில் தின, இல்லை இல்லை “பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாள்” வாழ்த்துக்கள்.
காமராசரைப் பற்றிப் போதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம், ‘காமராசர் எங்கு எப்போது பிறந்தார்?’, ‘அவரது தாய் தந்தை பெயரென்ன?’ போன்ற கேள்விகளால் குழந்தையின் விடைத்தாள் நாட்குறிப்பு ஏடாகவும், குழந்தையின் மனம் தகவல் சேமிக்கும் கணினி வன்தட்டாகவும் (Hard Disc) மாறிவிடுகிறது.
காமராசரின் மதிய உணவுத் திட்டம், ஊர்தோறும் பள்ளிகள் போன்ற அளப்பரிய சாதனைகளின் பின்னணியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எந்தப் பாடப்புத்தகத்திலும் பார்க்க இயலவில்லை. இப்படித்தான் நாம் கொடையாளர்களைப் போற்றுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் கொடைகளான கோட்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் காட்டுவதில்லை.
‘நாம் எப்போதும் இழிவாகவும் மலிவாகவும் நினைத்துக் கடக்கும் தொழிலாளியின் ஒரு குதிரைச்சேணம் தைக்கும் ஊசிக்குப் பின்னே ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தலைநிமிர்ந்திருக்கும் வரலாறு பிரெயிலினுடையது’ என குழந்தைகளுக்குப் போதித்து இருக்கிறோமா? மாறாக, லூயி பிரெயில் எங்கு எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் போன்றவற்றை அறிவிக்க நாம் எதற்கு? கணினிப் பயிற்சி அளித்தால் கூகுல் மாமாவிடமே குழந்தைகள் கேட்டுக்கொள்ளுமே.
2003ல் நான் மும்பையிலுள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தில் (NAB) சுருக்கெழுத்து பயின்றுகொண்டிருந்தேன். எனது மாலைநேரப் பொழுதுபோக்காக நானும் சில நண்பர்களும் அவ்வப்போது வொர்லி பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அங்குதான் என்.ஏ.பி.யின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது.
பார்வையற்றோர் எளிதாக நுழையும் வண்ணம் அதன் வாயிலின் இரு மருங்கிலும் ஒலிக்கும் பீப் சத்தத்தைக் கடந்து உள்ளே சென்றால், கம்பீரமான ஒரு சிலை நம்மை வரவேற்கிறது. எனக்கு அந்தச் சிலையைத் தடவிக்காட்டிய எனது மராத்திய நண்பன் தத்தா, “இதோ பார் நமது குலசாமி” என்றான். பத்தி பத்தியாய்ப் படித்தபோதெல்லாம் நான் உணராத லூயியின் மகத்துவத்தை நண்பனின் ஒரு வார்த்தை போகிறபோக்கில் உணர்த்தியது.
லூயி, பள்ளத்தில் மேடுகளை உருவாக்கி பார்வையற்றோரைக் கல்விமூலம் இச்சமுகத்தோடு சமப்படுத்திய ஓர் சமூகப்போராளி. விரல்களில் கண்களைப் பொருத்திய விந்தையான பார்வையற்ற கண் மருத்துவர். “யாதும் ஊரே” என நமது பாட்டன் கணியன் சொன்னான். ‘உலகின் எல்லா மொழிகளும் பார்வையற்றோர் நம் வசமே’ என அகில மொழிகள் அனைத்தையும் அறுபத்து மூன்றே வடிவங்களில் அணைத்துக்கொண்ட அன்பாளன், உலகின் தலைசிறந்த ஒருமைப்பாட்டாளன் லூயி.
ஈடில்லா இழப்புகளைச் சந்தித்தேனும் உலகத்தை உய்விக்க வேண்டும் என எண்ணியவர்களின் முயற்சியும் புரட்சியுமே, இருள் சூழ்ந்து இவ்வுலகம் அழிந்துபோகும் மட்டும், அழிந்திடாத, எந்த ஒரு கால மாறுபாட்டுக்கும் பொருந்திப்போய், தொடர்ந்து சமுகத்தை வழிநடத்திக்கொண்டே இருக்கும். காந்தி, தன்னுயிரை ஈந்துதான் இந்தியாவைச் சமுக நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வந்தார். அவர் நமக்குத் தந்த அகிம்சை எனும் அழியாக் கொள்கையின் வெளிப்பாடுதான் பல்வேறு கோரிக்கைகளைச் சுமந்து நமது பார்வையற்ற மாணவர்கள் செய்யும் அவ்வப்போதைய வகுப்பறைப் புறக்கணிப்பும் உண்ண மறுத்தலும் என்ற உண்மையைக் காந்தியை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
அதுபோலத்தான் லூயி, ஈடுசெய்ய இயலாத தன் பார்வையை இழந்தும், இந்தப் பிரபஞ்சம் நிலைக்கும் மட்டும் பார்வையற்றோருக்கான நித்திய ஒளியைப் படைத்துவிட்டுப் போனார். அத்தகைய உயரிய தியாகத்தால் உருவான உன்னத பிரெயில் வடிவத்தைப் பார்வையற்றோராகிய நாம் போற்றிப் பேணுகிறோமா? காலப்பெருவெள்ள மாற்றத்தினால், பல்வேறு ஒலிவடிவங்களும் தொழில்நுட்பமும் நம் கற்கும் முறைகளில் மிகப்பெரும் ஆக்கிரமிப்புகளைச் செய்திருக்கின்றன என்றாலும், பிரெயில் அளவுக்கு அவை நம்மை மேம்படுத்தும் சாதனங்களாக இல்லை என்பதை ஒவ்வொரு பார்வையற்றவரும் தன் மனதளவில் உணர்ந்தே இருக்கிறோம்.
போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில், நாம் ஒரு துறையில் பாண்டித்தியம் பெற நமக்குப் பல்துறை அறிவு அவசியமாக உள்ளது. எனவே, காலமேலாண்மை என்ற கருத்து ஓங்கி ஒலிக்கும் இப்போது, பிரெயிலில் எழுதுவதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கணினியில் தட்டச்சு செய்யப் பழகிவிட்டோம். இதைச் சொல்லும் இப்பொழுதுகூட, இக்கட்டுரையை நான் கணினியில்தான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், வாசிக்கும் அனுபவம் அப்படிப்பட்டதல்ல; எலக்குவன்ஸ், ஈ-ஸ்பீக் என எத்தனை வாசிப்பான்கள் வரிசைகட்டினாலும், விரல்களின் ஸ்பரிசங்களே மூளையை விழிப்பாக வைத்திருந்தன; மேற்சொன்ன வாசிப்பான்களின் தாலாட்டால் தூங்கிப்போன நமது மூளைகளின் துன்பியல் கதைகள் நம்மிடம் ஏராளம் ஏராளம். அதனால்தான் பள்ளிப்பருவத்தில் ஒரு பார்வையற்ற மாணவனுக்குக் காணப்படும் கூர்ந்த மதி, கல்லூரிப் பருவத்தில் அவனிடம் காணக்கிடைப்பதில்லை.
பிரெயில் எழுதுவதைத் தவிர்ப்பதில் நாம் சொல்லும் காலமேலாண்மை என்ற காரணத்தில்கூட சிறிதளவே உண்மை இருக்கிறது. நமது சோம்பேறித்தன மனநிலைதான் நம்மை பிரெயிலில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்கிறது. கொஞ்சம் காலச்சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தி யோசித்தால் இது புரியும்.
நம்மில் பலருக்கு நமது இளமைப்பருவத்தில் காதல் கடிதங்கள் எழுதிய அனுபவம் இருந்திருக்கும். எத்தனை எத்தனை தாள்களைக் குத்தி மேடாக்கி, மேன்மை தாங்கிய இலக்கியமாக மேம்படுத்தியிருக்கிறோம். அன்று, லூயி இராணுவ இரகசியங்களுக்கான வடிவத்தை பிரெயில் வடிவமாக மாற்றினார். இன்று, காதல் என்னும் இராணுவ இரகசியத்துக்காக பிரெயில் வடிவத்தைப் பயன்படுத்தி, வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கும் புரட்சியாளர்கள் நாம். உண்மையில் சிந்தியுங்கள்! வெறும் தகவல் பரிமாறும் நோக்கில்தான் நாம் இக்கடிதங்களை எழுதித் தள்ளினோமா? இல்லை. ‘இது காதலைப் போன்றே, நானும் அவளும் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ளும் புரட்சிமொழி’ என்ற பெருமித மனநிலைதானே முக்கிய உந்துசக்தியாக இருந்தது.
மழைக்காலத்தில் வெளிவரும் புற்றீசல்கள்போல, மறுவாழ்வு என்ற போர்வையில் முளைத்திருக்கும் சில பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்கள், அதன் அமைப்பாளர் இயல்பிலும், எண்ணத்திலும் குறைபார்வை (low-vision) உடையவராக இருப்பதால், பிரெயிலின் இடத்தைத் தொழில்நுட்பம் நிரப்பிவிட்டதாகக் கூறி, பிரெயிலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுக் கூச்சலிடலாம்.
“அனைவருக்கும் கல்வித்திட்டம்” என்ற மாற்றுத்திறனாளிகளின் அதிலும் குறிப்பாகப் பார்வையற்றவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசால் ஊதப்பட்டிருக்கும் சாவுச்சங்கு அக்கருத்தை ஆராதிக்கலாம். அத்தகைய இக்கட்டான காலங்களில், பிரெயிலைக் காப்பாற்ற பார்வையற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்.
முதலில், ஜனவரி 4 இந்த நாளை அகில உலகப் பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக உலக நாடுகள் அறிவித்திட பார்வையற்றோராகிய நாம் வலியுறுத்திட வேண்டும். படைப்புச் சமூகத்தின் அங்கங்களான எழுத்தாளன், பதிப்பாளன், அச்சு ஊடகம் என அனைவரும் தனது படைப்புகளின் பிரதிகளை பிரெயிலிளும் அச்சிட ஆர்வம் கொள்ளவேண்டும். அத்தகைய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவதும், படைப்புச் சமுகத்தின் அத்தகைய முயற்சியை ஊக்குவிக்கும் பொருளாதாரப் பாளமாய்த் திகழ அரசை வலியுறுத்துவதும் படித்த நம் ஒவ்வொரு பார்வையற்றவரின் கடமை.
இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முயற்சியால் வெளியிடப்பட்டுள்ள 53 தொகுதிகளைக்கொண்ட க்ரியா என்ற தமிழ் அகராதி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு பார்வையற்ற நண்பர், ‘பதினைந்தாயிரம் கொடுத்து நாங்கள் இந்த அகராதியை வாங்கினால் எங்களுக்கு அதைப் பராமரிக்க நிறுவனம் இலவசமாக ஒரு அறையைக் கட்டித்தரவேண்டும்’ என நகைச்சுவையாகக் கேட்டுள்ளார். அவரின் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்குத் தீர்வாக நாம் முன்வைப்பது, மாவட்டவாரி பிரெயில் நூலகம்.
இன்று நம்மில் பல பார்வையற்றவர்கள் அரசு வேலை என்ற நல்ல நிலையில் அமர்ந்திருக்கக் காரணம் பிரெயில் என்பதுதானே உண்மை. அரசு வேலையிலுள்ள பார்வையற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக இணைந்து, மாவட்டந்தோறும் பிரெயில் நூலகங்களைக் கட்டமைக்களாமே! அரசு வேலைக் கிடைத்ததும் திருமணம், சொந்தவீடு என்றெல்லாம் விரியும் நம் இலக்குகளில், அந்த வீட்டிற்காகும் செங்கற்களில் ஒன்றையாவது இத்தகைய நூலகம் அமைக்கப் பங்களிக்கலாமே. நாம் தாமாக முன்வந்து இணையும்போது அரசைத் தீவிரமாக வலியுறுத்தும் தார்மீக உரிமையைப் பெறலாம்.
அரசும் கருப்புக் கண்ணாடிகளையும், வெண்கோள்களையும் வழங்குவதோடு தம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காணப்படும் பல்வேறு நூல்களை பிரெயில் வடிவில் மாற்றி, நாம் வாசிக்க உதவும் பிரெயில் டிஸ்ப்லேக்களை இலவசமாகவோ மானிய விலையிலோ வழங்க முன்வரவேண்டும். இத்தகைய கோரிக்கைகளோடு அரசை அணுகும் கடமை நம் பார்வையற்ற சமூகத்துக்கு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
சட்டைப்பைச் சில்லறைகளை வகைபிரித்துத் தந்த எனது தந்தை, “இது லூயி பிரெயில் உருவம் பொறித்த காசு” என ஒரு நாணயத்தை எடுத்துத் தந்தபோது, ‘இது வெறும் உருவம் அல்ல. என் வளர்ச்சியைச் சொல்லும் ஒரு குறியீடு’ என மனதால் பிரெயிலின் பெருமையை சிலாகிப்பதில் மட்டும் பிரெயில் என்கிற உன்னத மொழி மேன்மை பெற்றுவிடாது என்பது புரிகிறது.
அனைவருக்கும் லூயி பிரெயில் தின, இல்லை இல்லை “பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாள்” வாழ்த்துக்கள்.