அரசியல் உலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சமூகநீதிச் சிந்தனையாலும், திராவிட இயக்கக் கொள்கையாலும் தமிழக அரசியலை இந்திய அரசியலின் தனிச்சிறப்புமிக்க அங்கமாக மாற்றியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை, கடவுள் மறுப்பு, சமயச் சார்பின்மை மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு போன்றவற்றில் தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றிய பெருமை கலைஞரையே சாரும். திராவிட அரசியலின் முக்கியக் கொள்கைகளான இவை, கலைஞரால் அரசியலில் பின்பற்றப்பட்ட விதமும், இதை நிலைநாட்டுவதற்கு அவரது தி.மு.கழகம் முன்னெடுத்த போராட்டங்களும் தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
இன்னும் குறிப்பாகச் சொல்வோமேயானால், தமிழகம் என்று சொன்னாலே சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மக்கள் நலன் அரசு என்ற அளவிற்கு பெயர் பெறுவதற்கு முக்கியமான காரணமாக கலைஞர் இருந்திருக்கிறார். இவர் அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றளவிலும் இவரது பல திட்டங்கள் பல மாநிலங்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன.
கலைஞரின் கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சிக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு போன்ற காரணங்களால் இந்தி மற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் கலைஞரைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் சந்தியா. இதற்குக் கலைஞரின் தீவிர இந்துத்துவ எதிர்ப்பும், அவருக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாததும் முக்கிய காரணமென்று சந்தியா தனது கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Karunanidhi: a Life in Politics’ என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.
ஒடுக்கப்பட்டோரின் நாயகன்
சாதிப் பாகுபாட்டைக் களைவதற்கு கலைஞர் துவக்கிவைத்த ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ திட்டம் தேசிய அளவில் வெகுவாக பாராட்டுதலைப் பெற்றது. சாதியப் படிநிலைகளை தகர்ப்பதற்கு ஒரு முயற்சியாக, வேற்று சாதியில் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு நிதியுதவி வழங்கி ஆதரித்தார். இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது ஒரு புதுமையான முயற்சியாகும். காலங்காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட பெண் சமூகத்திற்கு இந்தியாவிலேயே முதல் முறையாக குடும்பச் சொத்தில் சம உரிமையை உறுதிசெய்யும் விதமாக இந்து சட்டத்தில் 1989-ஆம் ஆண்டே திருத்தத்தைக் கொண்டுவந்தார். இது பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் 2005-இல் இந்தியா முழுவதும் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை உயர்த்தும் விதமாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்விபெறும் நோக்கத்தோடும், கலைஞர் தனது ஆட்சியில் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை’ இயற்றி, அவர்களின் கல்வியறிவை உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளார்.
கலைஞர், தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின்மீது ஒரு தனி அக்கறை கொண்டவராகவே திகழ்ந்துள்ளார். இதன் ஒரு பகுதியாகவே நிலவுடமை முறையையும், அதனூடாக தமிழகத்தில் நிலவி வந்த பண்ணையார், ஆண்டை தன்மையையும் அகற்றுவதற்கு கலைஞர் ‘நிலச் சீர்திருத்தச் சட்டம், 1961’-இல் திருத்தத்தைக் கொண்டுவந்து, ஒவ்வொருவருக்கும் 15 ஏக்கர் மட்டுமே நில உச்சவரம்பு என்று தீர்மானித்தார். கலைஞரின் இறுதி ஆட்சிப் பகுதி (2006-2011) தமிழகத்தைப் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக மாற்றியது.
இஸ்லாமியர்களும் அருந்ததியினரும் அரசு வேலையில் சமவாய்ப்பைப் பெறவேண்டும் என்று கருதிய கலைஞர், தனது ஆட்சியில் அவர்களுக்கென்று தனி ஒரு சட்டமியற்றி இட ஒதுக்கீட்டை வழங்கினார். இது குறிப்பாக அருந்ததியினர் பிரிவைச் சார்ந்தவர்கள் எளிதாக அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பெரும் உதவிபுரிகிறது. மேலும், அவர்களது சுயமரியாதையை இந்த சாதியச் சமூகத்தில் நிலைநாட்டி, அவர்கள் பொருளாதாரத் தன்னிறைவோடு வாழ்வதற்கு இந்த இட ஒதுக்கீடு பயன்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதுபோன்ற தனி இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் கலைஞர் சாதியப் படிநிலைகளை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார் என்பதைத் தெளிவாக வெளிக்கொணர்கிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
கல்வித்துறையில் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அடுத்து வந்த முதல்வர்கள் அனைவராலும் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், அவர் செயல்படுத்தி வந்த பெருமளவு பள்ளிகளைத் திறப்பது, பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது போன்றவற்றை கலைஞர் அரசு தொடர்ந்து இன்னும் விரிவாகச் செயல்படுத்தியது. இவை மட்டுமன்றி, அனைவருக்கும் பி.யு.சி. வரை இலவசக் கல்வி வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக சத்துணவுடன் முட்டைகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கி பின்னர் அதனை கல்லூரி மாணாக்கர்களுக்கும் விரிவுபடுத்தியது, பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு பதினைந்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, 2010-11 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எல்லாப் படிப்புகளுக்கும் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம், மாநில மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியரின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் திட்டம், மாநில மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசும் உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கியது, மாற்றுப் பாலினத்தவர் கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கு உரிய ஆணைகள் பிறப்பித்தது, அரசுக் கல்லூரி மாணாக்கர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது போன்றவற்றால் தமிழகத்தில் கல்வி பயில்வதற்கு எந்தச் சமூக ஒடுக்குமுறையும், பொருளாதார நிலையும் தடையாக இருக்காது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும், கலைஞர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு உயர்கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. கோவையில் தமிழகத்தின் முதல் வேளாண் பல்கலைக்கழகம் (1971), 1989-இல் மாதவரத்தில் தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், 1997-இல் இந்தியாவிலேயே முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், 2001-இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), மாநில உருது அகாதெமி அமைத்தது, சூழலியல் கல்விப் பாதுகாப்பிற்காகத் தொல்காப்பியர் பூங்கா (Adyar Ecological Research Park) நிறுவியது, தமிழகத்தில் மொத்தமுள்ள 26 மருத்துவக் கல்லூரிகளில் 19 இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது, இன்னும் ஒருபடி மேலே 2009-இல் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்ததைப் பயன்படுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமையச் செய்தது போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கலைஞர் ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்கும் பல்வேறு துறைகளில் உயராய்வுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளன.
இவற்றிற்கெல்லாம் மேலாக, கலைஞர் அரசு மேற்கொண்ட இரண்டு கல்விசார் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை முற்றிலுமாக ரத்துசெய்தது, மற்றொன்று சமச்சீர் கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்தியது. இவ்விரண்டு முன்னெடுப்புகளும் தமிழக கிராமப்புற ஏழை மாணாக்கர்கள் சம வாய்ப்பும், சமமான, தரமான கல்வியும் பெறுவதற்கு எந்த அளவுக்கு உறுதுணை புரிந்துள்ளன என்பதை இங்கு விவரிக்கத் தேவையில்லை.
இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும், இந்தி எதிர்ப்பின் வாயிலாக தமிழ்நாட்டிற்கென்றே தனியொரு இடத்தைப் பிடித்துக்கொடுத்தவர் கலைஞர். தி.மு.கழகம் தீவிரமாக முன்னெடுத்த இந்தி எதிர்ப்பின் மூலமாகவே இன்றைக்கு இந்தி தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. அதேபோல, இந்தி மொழி வழிக் கல்வியை முன்னிறுத்தும் ‘நவோதயா’ போன்ற மத்திய அரசுப் பள்ளிகளுக்குத் தமிழகம் தொடர்ந்து தனது தீவிர எதிர்ப்பைப் பதிவுசெய்து வருவது கலைஞர் தலைமை ஏற்று நடத்திய தி.மு.கழகத்தின் வெற்றியாகும்.
மக்கள் நலவாழ்வு
மருத்துவம், நலவாழ்வு, பொதுச்சுகாதாரம் ஆகிய அளவீடுகளிலும் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தச் சிறப்புமிகு நிலையினை எட்டுவதற்குக் கலைஞரின் ஆட்சியும், அவரது முன்னோடித் திட்டங்களும் பெருமளவில் பங்களித்துள்ளன. கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்களை கிராமங்கள்தோறும் இலவசமாக நடத்தியது, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கிராமங்கள்தோறும் நிறுவி கடைக்கோடி மக்களுக்கும் அடிப்படை அவசர மருத்துவ உதவிகளை இலவசமாகக் கொண்டுசேர்த்தது, புற்றுநோய், சர்க்கரைநோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கும் பொருட்டு ‘நலமான தமிழகம்’ திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தியது, உயிர்காக்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தியது போன்றவை இந்தியச் சுகாதாரத்துறை வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகவே கருதப்படுகின்றன.
கலைஞர் அறிமுகப்படுத்திய மருத்துவச் சேவைகளுள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது அவர் கொண்டுவந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத்திட்டத்தின்கீழ் 2011 வரை மட்டும் சுமார் 750 கோடி காப்பீட்டுத் தொகை வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மூன்று இலட்சம் மக்களின் மருத்துவத்திற்காக வழங்கப்பட்டது. தி.மு.க.வைத் தொடர்ந்துவந்த அரசும்கூட இந்தத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதனைத் தொடர்ந்து செயல்படுத்தியதோடு, காப்பீட்டுநிதி பெறுவதற்கான மருத்துவ சேவைகளின் எண்ணிக்கையையும் விரிவுபடுத்தியது. அரசின் சேவையாக இருக்கவேண்டிய மருத்துவத்தில் தனியாரின் இலாபத்திற்கு இந்தத்திட்டம் பெருமளவில் பயன்பட்டது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் தனியார் மருத்துவமனைகளின் அதிநவீன வசதிகளை ஏழைகளும் பெறுவதற்கு இந்தத்திட்டம் வழிசெய்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இத்தகையதொரு திட்டத்தைத்தான் மத்திய அரசு 'உலகின் மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்ற விளம்பரத்தோடு தற்போது செயல்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
பொது விநியோகம்
தமிழகத்தில் கலைஞர் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்திய பொதுவிநியோகத் திட்டம் எல்லா இந்திய மாநிலங்களுக்கும், ஏன் மத்திய அரசுக்கும்கூட முன்மாதிரியான வழிகாட்டும் திட்டமாக அமைந்திருப்பதாகப் பல பொருளாதார வல்லுனர்கள் பதிவுசெய்துள்ளனர். இதுபற்றி விரிவாக எடுத்துரைப்பது இங்கு அவசியமாகிறது. நீதிக் கட்சி தொடங்கி, காமராசர், அண்ணா ஆட்சிக் காலங்களில் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், 1996-2001 கலைஞர் ஆட்சிக் காலத்தில் இது பொது விநியோகத் திட்டமாக (Universal Public Distribution System (PDS)) பரிணாம வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு இந்தப் பொதுவிநியோகத் திட்டத்தில் என்னவென்றால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி பயன்பெற விரும்பிய அனைவருக்கும் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1996-இல் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற அளவில் தொடங்கி, சர்க்கரை, சமையலுக்குப் பயன்படும் மண்ணெண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டு, 2007-இல் கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சில்லறைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாடப் பயன்பாட்டிற்கும் உணவுக்கும் தேவையான பொருட்கள் பொதுவிநியோகத் திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளபோதும், பொதுவிநியோகத் திட்டத்தை தனது சொந்த செலவில் தொடர தற்போதைய தமிழக அரசும் முடிவுசெய்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் ராம், “எல்லாத் திட்டங்களையும் போலவே இதிலும் ஊழல் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய மாபெரும் மக்கட்தொகைக்கு இதன் பயன்கள் சென்று சேர்ந்துள்ளன” என்கிறார்.
இத்திட்டத்தின் வெற்றிகரமான தொடர் செயல்பாட்டிற்கு எவ்வளவு உழைப்பும் திட்டமிடலும் செலவிடப்படுகின்றன என்பது குறித்து 2010-இல் ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரையொன்று வெளியானது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கான களப்பணி இந்தத் திட்டத்தின் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும். கொண்டு செல்லப்படும் வழியில் எந்த விதத்திலும் மடைமாற்றப்பட்டுவிடாமல், ஒவ்வொரு மாதமும் மூன்று இலட்சத்துப் பதினேழாயிரம் டன் அரிசியும் பிற பொருட்களும் 31,439 ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை சுமார் ஒரு கோடியே 97 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். முந்தைய மாதத்தின் இருபதாம் தேதியிலிருந்தே தமிழக அரசின் 310 சேமிப்புக் கிடங்குகளிலிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் பொதுவழங்கல் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் உடன் செல்ல, GPS உள்ளிட்ட தொழில்நுட்பக் கண்காணிப்பு, காவல்த்துறையினரின் திடீர் சோதனை முதலானவற்றோடு வரைபடத்துடன் கூடிய குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டுசெல்லப்படுகின்றன. எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியும், அரசு ஊழியரும் முறைகேடுகள் ஏதேனும் நடப்பதாக ஐயமேற்பட்டால் உடனடியாக சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தின் கிடங்குகளில் எப்போதும் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வறிக்கை. இத்தகைய மாபெரும் திட்டமிடல், செயல்முறை காரணமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் பொதுவிநியோக முறையாக இது வளர்ந்துள்ளது.
ஒழிக்கப்பட்டது கை ரிக்ஷா
மனிதனை மனிதனே இழுத்துச்செல்லும் இழிநிலையை போக்கும் விதமாக 1970-களிலேயே கை ரிக்ஷாவை ஒழித்து இலவசமாக சைக்கிள் ரிக்ஷாவை வழங்கி சுயமரியாதையை நிலைநாட்டியது கலைஞரின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு தமிழகத்தில் சைக்கிள் ரிக்ஷா பெருமளவில் குறைந்துள்ளது. தேசிய தலைநகரமான டெல்லியில்கூட சைக்கிள் ரிக்ஷா பரவலாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கொடியேற்றும் சுதந்திரம்
இந்திய முதலமைச்சர்களில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர் அவர்கள். தான் முதலமைச்சராக இருந்தபொழுது, 1974-ஆம் ஆண்டு மத்திய அரசோடு போராடி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை பெற்று, முதல்முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 15, 1974 அன்று கலைஞர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். அதேபோல, தனது வாழ்நாள் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் கொள்கையான ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். குறிப்பாக, எப்பொழுதெல்லாம் மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டதோ, அப்பொழுதெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சிக் கொள்கையையும் வலியுறுத்தக் கலைஞர் தவறியதேயில்லை.
நெருக்கடிநிலை காலகட்டத்தில் மாநிலங்களின் அனைத்து அதிகாரமும் பறிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றபொழுது, கலைஞர் அதனை மிக வன்மையாக கண்டித்து, ‘மாநிலங்கள் ஒன்றும் உள்நாட்டு காலனிகள் அல்ல’ என உரக்கக் கூறி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்து, ஏறக்குறைய ஆறு மாதம் தமிழகத்தில் ஆட்சியை நடத்தினார். பின்னர், மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசு கலைஞரின் ஆட்சியைக் களைத்தது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
தேசிய அளவிலுள்ள அரசியல்வாதிகளில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய புரிதல்களில் கலைஞர் என்றைக்குமே முதலிடத்தில்தான் இருந்திருக்கிறார். இன்றைக்கு உள்ள மத்திய அரசு ஊனமுற்றோரை ‘கடவுளின் உடலைப் பெற்றவர்கள்’ (திவ்யங்) என்று இழிவுபடுத்தி அதனை அனைத்து அரசு ஆவணங்களிலும் கொண்டுவந்திருக்கும் இந்த வேளையில், தமிழகத்தில் மட்டும் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சுயமரியாதை வார்த்தை அரசு ஆவணங்களிலும் மக்கள் மத்தியிலும் வெகுவாக நடைமுறையில் இருப்பதற்கு காரணம் கலைஞர் அவர்கள். ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற வார்த்தை திறனை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
பொருளாதாரச் சுதந்திரத்தின் மூலமாகவே மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையோடு ஊனத்தை இழிவாகக் கருதும் இந்தச் சமூகத்தில் வாழமுடியும் என்று கருதிய கலைஞர் அவர்கள், 1981-இல் நிறைவேற்றிய ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை 1989-இல் ஆட்சிக்கு வந்த உடனேயே முதல்முறையாக அமல்படுத்தினார். அதேபோலவே, அவர்களின் இட ஒதுக்கிட்டை சமூகநீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் அமைத்துள்ளார் என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இதுபோன்ற சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசில்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எந்த ஒரு மாநில முதலமைச்சரும் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு கலைஞர் மாற்றுத்திறனாளிகளுக்கென்றே தனியொரு துறையை அமைத்து, அதைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார் என்பது வியக்கத்தக்கது. தனது கடைசி ஆட்சி காலத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி, அவர்களை மற்றவர்களுக்கு இணையாக அமர்த்தி அழகு பார்த்தவர் கலைஞர். அதேபோல, தனது கனவுக் கோட்டையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென்றே கீழ் தளத்தில் ஒரு சிறப்பான அதிநவீன வசதியைக்கொண்ட அறையை அமைத்து, அவர்களின் புத்தக வாசிப்பில் பெரும் பங்காற்றி இருக்கிறார்.
மத்திய அரசில் கலைஞரின் ஆளுமை
திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டு கூட்டாட்சித் தத்துவத்தைக் கையிலெடுத்த தி.மு.க., 1960-களில் மாநில சுயாட்சியை முழங்கத் துவங்கியது. இதன் விளைவாகவே தி.மு.க. தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்து தேசிய அரசியலில் பங்கேற்கத் தொடங்கியது. இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசில் பங்கேற்ற உடனேயே, கலைஞர் தனது மக்கள் நலக் கொள்கையான வங்கிகளைத் தேசியமயமாக்குதலை வலியுறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாகவே இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கினார் என்று கூறப்படுகிறது.
தனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் மத்திய அரசியலில் தவிர்க்கமுடியாத இடத்தை மாநிலக் கட்சியான தி.மு.க.விற்குக் கலைஞர் பெற்றுக்கொடுத்திருக்கிறார். டெல்லி அரசியலில் திராவிடக் கொள்கையை பரப்புவதற்கு முரசொலி மாறனை நியமித்து, பாராளுமன்றத்திலும் வெளியிலும் தேசிய நிகழ்வுகளில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இந்திரா காந்தி முதல் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் வரை ஏழு பிரதமர்களை நியமிப்பதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். அதேபோல, இரண்டு ஜனாதிபதிகளை நியமிப்பதில் கலைஞர் பெரும் பங்காற்றி இருக்கிறார்.
1992-இல் பாபர் மசூதி இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்டபோதும், 2002-இல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகளால் ஏவப்பட்ட வன்முறையை எதிர்த்தும் மிக தீவிரமாக கலைஞர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். 1989-இல் மத்தியில் இருந்த V.P. சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தபொழுது, வட இந்தியாவில் தீவிர எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில்தான் கலைஞர் அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். இது அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கலைஞரின் அறிவுரையின் பேரில் தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினை விரைந்து நிறைவேற்றக் கோரியும் மற்றும் அதனிலுள்ள குறைகளை கலையக்கோரியும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தார். இச்சட்டத்திற்காக குரல் கொடுத்த மிகச் சிலருள் கனிமொழியும் ஒருவர். அதேபோலவே, திருநங்கைகளின் நலவாழ்வுக்காக மத்திய அரசில் தனியாக ஒரு சட்டம் இயற்றுவதற்கு தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் தனிப்பட்ட முறையில் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தனி ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழக அரசியலிலும் வரலாற்றிலும் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர், தேசிய அரசியலிலும் தனக்கென தனி ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். இதற்கு மெத்தப்படித்த பொருளாதார வல்லுனர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே ஒருமுறை, ‘நான் பிரதமராக இருந்தபொழுது கலைஞரிடம் ஆலோசனை பெற்றுத்தான் முக்கிய முடிவுகளை எடுத்தேன்’ என்று கூறிய வாசகம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை, சாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, சமதர்மம், பெண்ணுரிமை போன்றவற்றில் தமிழகத்தைத் தேசிய அளவில் உயர்த்திக் காட்டியவர் கலைஞர். அதேபோல, தேசிய அரசியலில் திராவிடக் கொள்கைகளைப் பாய்ச்சிக் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சிக் கொள்கையையும் நிலைநாட்டுவதற்கு கடைசிவரை போராடினார். இவரது பரந்துபட்ட சிந்தனைகளும், ஒடுக்கப்பட்டவர்களின் மீது இவர் கொண்டிருந்த தனி அக்கறையும் தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் இவருக்கு ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
--
(கட்டுரையாளர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
இன்னும் குறிப்பாகச் சொல்வோமேயானால், தமிழகம் என்று சொன்னாலே சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மக்கள் நலன் அரசு என்ற அளவிற்கு பெயர் பெறுவதற்கு முக்கியமான காரணமாக கலைஞர் இருந்திருக்கிறார். இவர் அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றளவிலும் இவரது பல திட்டங்கள் பல மாநிலங்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன.
கலைஞரின் கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சிக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு போன்ற காரணங்களால் இந்தி மற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் கலைஞரைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் சந்தியா. இதற்குக் கலைஞரின் தீவிர இந்துத்துவ எதிர்ப்பும், அவருக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாததும் முக்கிய காரணமென்று சந்தியா தனது கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Karunanidhi: a Life in Politics’ என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.
ஒடுக்கப்பட்டோரின் நாயகன்
சாதிப் பாகுபாட்டைக் களைவதற்கு கலைஞர் துவக்கிவைத்த ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ திட்டம் தேசிய அளவில் வெகுவாக பாராட்டுதலைப் பெற்றது. சாதியப் படிநிலைகளை தகர்ப்பதற்கு ஒரு முயற்சியாக, வேற்று சாதியில் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு நிதியுதவி வழங்கி ஆதரித்தார். இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது ஒரு புதுமையான முயற்சியாகும். காலங்காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட பெண் சமூகத்திற்கு இந்தியாவிலேயே முதல் முறையாக குடும்பச் சொத்தில் சம உரிமையை உறுதிசெய்யும் விதமாக இந்து சட்டத்தில் 1989-ஆம் ஆண்டே திருத்தத்தைக் கொண்டுவந்தார். இது பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் 2005-இல் இந்தியா முழுவதும் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை உயர்த்தும் விதமாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்விபெறும் நோக்கத்தோடும், கலைஞர் தனது ஆட்சியில் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை’ இயற்றி, அவர்களின் கல்வியறிவை உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளார்.
கலைஞர், தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின்மீது ஒரு தனி அக்கறை கொண்டவராகவே திகழ்ந்துள்ளார். இதன் ஒரு பகுதியாகவே நிலவுடமை முறையையும், அதனூடாக தமிழகத்தில் நிலவி வந்த பண்ணையார், ஆண்டை தன்மையையும் அகற்றுவதற்கு கலைஞர் ‘நிலச் சீர்திருத்தச் சட்டம், 1961’-இல் திருத்தத்தைக் கொண்டுவந்து, ஒவ்வொருவருக்கும் 15 ஏக்கர் மட்டுமே நில உச்சவரம்பு என்று தீர்மானித்தார். கலைஞரின் இறுதி ஆட்சிப் பகுதி (2006-2011) தமிழகத்தைப் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக மாற்றியது.
இஸ்லாமியர்களும் அருந்ததியினரும் அரசு வேலையில் சமவாய்ப்பைப் பெறவேண்டும் என்று கருதிய கலைஞர், தனது ஆட்சியில் அவர்களுக்கென்று தனி ஒரு சட்டமியற்றி இட ஒதுக்கீட்டை வழங்கினார். இது குறிப்பாக அருந்ததியினர் பிரிவைச் சார்ந்தவர்கள் எளிதாக அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பெரும் உதவிபுரிகிறது. மேலும், அவர்களது சுயமரியாதையை இந்த சாதியச் சமூகத்தில் நிலைநாட்டி, அவர்கள் பொருளாதாரத் தன்னிறைவோடு வாழ்வதற்கு இந்த இட ஒதுக்கீடு பயன்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதுபோன்ற தனி இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் கலைஞர் சாதியப் படிநிலைகளை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார் என்பதைத் தெளிவாக வெளிக்கொணர்கிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
கல்வித்துறையில் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அடுத்து வந்த முதல்வர்கள் அனைவராலும் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், அவர் செயல்படுத்தி வந்த பெருமளவு பள்ளிகளைத் திறப்பது, பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது போன்றவற்றை கலைஞர் அரசு தொடர்ந்து இன்னும் விரிவாகச் செயல்படுத்தியது. இவை மட்டுமன்றி, அனைவருக்கும் பி.யு.சி. வரை இலவசக் கல்வி வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக சத்துணவுடன் முட்டைகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கி பின்னர் அதனை கல்லூரி மாணாக்கர்களுக்கும் விரிவுபடுத்தியது, பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு பதினைந்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, 2010-11 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எல்லாப் படிப்புகளுக்கும் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம், மாநில மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியரின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் திட்டம், மாநில மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசும் உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கியது, மாற்றுப் பாலினத்தவர் கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கு உரிய ஆணைகள் பிறப்பித்தது, அரசுக் கல்லூரி மாணாக்கர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது போன்றவற்றால் தமிழகத்தில் கல்வி பயில்வதற்கு எந்தச் சமூக ஒடுக்குமுறையும், பொருளாதார நிலையும் தடையாக இருக்காது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும், கலைஞர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு உயர்கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. கோவையில் தமிழகத்தின் முதல் வேளாண் பல்கலைக்கழகம் (1971), 1989-இல் மாதவரத்தில் தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், 1997-இல் இந்தியாவிலேயே முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், 2001-இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), மாநில உருது அகாதெமி அமைத்தது, சூழலியல் கல்விப் பாதுகாப்பிற்காகத் தொல்காப்பியர் பூங்கா (Adyar Ecological Research Park) நிறுவியது, தமிழகத்தில் மொத்தமுள்ள 26 மருத்துவக் கல்லூரிகளில் 19 இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது, இன்னும் ஒருபடி மேலே 2009-இல் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்ததைப் பயன்படுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமையச் செய்தது போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கலைஞர் ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்கும் பல்வேறு துறைகளில் உயராய்வுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளன.
இவற்றிற்கெல்லாம் மேலாக, கலைஞர் அரசு மேற்கொண்ட இரண்டு கல்விசார் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை முற்றிலுமாக ரத்துசெய்தது, மற்றொன்று சமச்சீர் கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்தியது. இவ்விரண்டு முன்னெடுப்புகளும் தமிழக கிராமப்புற ஏழை மாணாக்கர்கள் சம வாய்ப்பும், சமமான, தரமான கல்வியும் பெறுவதற்கு எந்த அளவுக்கு உறுதுணை புரிந்துள்ளன என்பதை இங்கு விவரிக்கத் தேவையில்லை.
இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும், இந்தி எதிர்ப்பின் வாயிலாக தமிழ்நாட்டிற்கென்றே தனியொரு இடத்தைப் பிடித்துக்கொடுத்தவர் கலைஞர். தி.மு.கழகம் தீவிரமாக முன்னெடுத்த இந்தி எதிர்ப்பின் மூலமாகவே இன்றைக்கு இந்தி தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. அதேபோல, இந்தி மொழி வழிக் கல்வியை முன்னிறுத்தும் ‘நவோதயா’ போன்ற மத்திய அரசுப் பள்ளிகளுக்குத் தமிழகம் தொடர்ந்து தனது தீவிர எதிர்ப்பைப் பதிவுசெய்து வருவது கலைஞர் தலைமை ஏற்று நடத்திய தி.மு.கழகத்தின் வெற்றியாகும்.
மக்கள் நலவாழ்வு
மருத்துவம், நலவாழ்வு, பொதுச்சுகாதாரம் ஆகிய அளவீடுகளிலும் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தச் சிறப்புமிகு நிலையினை எட்டுவதற்குக் கலைஞரின் ஆட்சியும், அவரது முன்னோடித் திட்டங்களும் பெருமளவில் பங்களித்துள்ளன. கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்களை கிராமங்கள்தோறும் இலவசமாக நடத்தியது, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கிராமங்கள்தோறும் நிறுவி கடைக்கோடி மக்களுக்கும் அடிப்படை அவசர மருத்துவ உதவிகளை இலவசமாகக் கொண்டுசேர்த்தது, புற்றுநோய், சர்க்கரைநோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கும் பொருட்டு ‘நலமான தமிழகம்’ திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தியது, உயிர்காக்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தியது போன்றவை இந்தியச் சுகாதாரத்துறை வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகவே கருதப்படுகின்றன.
கலைஞர் அறிமுகப்படுத்திய மருத்துவச் சேவைகளுள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது அவர் கொண்டுவந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத்திட்டத்தின்கீழ் 2011 வரை மட்டும் சுமார் 750 கோடி காப்பீட்டுத் தொகை வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மூன்று இலட்சம் மக்களின் மருத்துவத்திற்காக வழங்கப்பட்டது. தி.மு.க.வைத் தொடர்ந்துவந்த அரசும்கூட இந்தத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதனைத் தொடர்ந்து செயல்படுத்தியதோடு, காப்பீட்டுநிதி பெறுவதற்கான மருத்துவ சேவைகளின் எண்ணிக்கையையும் விரிவுபடுத்தியது. அரசின் சேவையாக இருக்கவேண்டிய மருத்துவத்தில் தனியாரின் இலாபத்திற்கு இந்தத்திட்டம் பெருமளவில் பயன்பட்டது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் தனியார் மருத்துவமனைகளின் அதிநவீன வசதிகளை ஏழைகளும் பெறுவதற்கு இந்தத்திட்டம் வழிசெய்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இத்தகையதொரு திட்டத்தைத்தான் மத்திய அரசு 'உலகின் மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்ற விளம்பரத்தோடு தற்போது செயல்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
பொது விநியோகம்
தமிழகத்தில் கலைஞர் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்திய பொதுவிநியோகத் திட்டம் எல்லா இந்திய மாநிலங்களுக்கும், ஏன் மத்திய அரசுக்கும்கூட முன்மாதிரியான வழிகாட்டும் திட்டமாக அமைந்திருப்பதாகப் பல பொருளாதார வல்லுனர்கள் பதிவுசெய்துள்ளனர். இதுபற்றி விரிவாக எடுத்துரைப்பது இங்கு அவசியமாகிறது. நீதிக் கட்சி தொடங்கி, காமராசர், அண்ணா ஆட்சிக் காலங்களில் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், 1996-2001 கலைஞர் ஆட்சிக் காலத்தில் இது பொது விநியோகத் திட்டமாக (Universal Public Distribution System (PDS)) பரிணாம வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு இந்தப் பொதுவிநியோகத் திட்டத்தில் என்னவென்றால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி பயன்பெற விரும்பிய அனைவருக்கும் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1996-இல் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற அளவில் தொடங்கி, சர்க்கரை, சமையலுக்குப் பயன்படும் மண்ணெண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டு, 2007-இல் கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சில்லறைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாடப் பயன்பாட்டிற்கும் உணவுக்கும் தேவையான பொருட்கள் பொதுவிநியோகத் திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளபோதும், பொதுவிநியோகத் திட்டத்தை தனது சொந்த செலவில் தொடர தற்போதைய தமிழக அரசும் முடிவுசெய்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் ராம், “எல்லாத் திட்டங்களையும் போலவே இதிலும் ஊழல் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய மாபெரும் மக்கட்தொகைக்கு இதன் பயன்கள் சென்று சேர்ந்துள்ளன” என்கிறார்.
இத்திட்டத்தின் வெற்றிகரமான தொடர் செயல்பாட்டிற்கு எவ்வளவு உழைப்பும் திட்டமிடலும் செலவிடப்படுகின்றன என்பது குறித்து 2010-இல் ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரையொன்று வெளியானது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கான களப்பணி இந்தத் திட்டத்தின் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும். கொண்டு செல்லப்படும் வழியில் எந்த விதத்திலும் மடைமாற்றப்பட்டுவிடாமல், ஒவ்வொரு மாதமும் மூன்று இலட்சத்துப் பதினேழாயிரம் டன் அரிசியும் பிற பொருட்களும் 31,439 ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை சுமார் ஒரு கோடியே 97 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். முந்தைய மாதத்தின் இருபதாம் தேதியிலிருந்தே தமிழக அரசின் 310 சேமிப்புக் கிடங்குகளிலிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் பொதுவழங்கல் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் உடன் செல்ல, GPS உள்ளிட்ட தொழில்நுட்பக் கண்காணிப்பு, காவல்த்துறையினரின் திடீர் சோதனை முதலானவற்றோடு வரைபடத்துடன் கூடிய குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டுசெல்லப்படுகின்றன. எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியும், அரசு ஊழியரும் முறைகேடுகள் ஏதேனும் நடப்பதாக ஐயமேற்பட்டால் உடனடியாக சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தின் கிடங்குகளில் எப்போதும் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வறிக்கை. இத்தகைய மாபெரும் திட்டமிடல், செயல்முறை காரணமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் பொதுவிநியோக முறையாக இது வளர்ந்துள்ளது.
ஒழிக்கப்பட்டது கை ரிக்ஷா
மனிதனை மனிதனே இழுத்துச்செல்லும் இழிநிலையை போக்கும் விதமாக 1970-களிலேயே கை ரிக்ஷாவை ஒழித்து இலவசமாக சைக்கிள் ரிக்ஷாவை வழங்கி சுயமரியாதையை நிலைநாட்டியது கலைஞரின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு தமிழகத்தில் சைக்கிள் ரிக்ஷா பெருமளவில் குறைந்துள்ளது. தேசிய தலைநகரமான டெல்லியில்கூட சைக்கிள் ரிக்ஷா பரவலாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கொடியேற்றும் சுதந்திரம்
இந்திய முதலமைச்சர்களில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர் அவர்கள். தான் முதலமைச்சராக இருந்தபொழுது, 1974-ஆம் ஆண்டு மத்திய அரசோடு போராடி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை பெற்று, முதல்முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 15, 1974 அன்று கலைஞர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். அதேபோல, தனது வாழ்நாள் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் கொள்கையான ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். குறிப்பாக, எப்பொழுதெல்லாம் மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டதோ, அப்பொழுதெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சிக் கொள்கையையும் வலியுறுத்தக் கலைஞர் தவறியதேயில்லை.
நெருக்கடிநிலை காலகட்டத்தில் மாநிலங்களின் அனைத்து அதிகாரமும் பறிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றபொழுது, கலைஞர் அதனை மிக வன்மையாக கண்டித்து, ‘மாநிலங்கள் ஒன்றும் உள்நாட்டு காலனிகள் அல்ல’ என உரக்கக் கூறி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்து, ஏறக்குறைய ஆறு மாதம் தமிழகத்தில் ஆட்சியை நடத்தினார். பின்னர், மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசு கலைஞரின் ஆட்சியைக் களைத்தது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
தேசிய அளவிலுள்ள அரசியல்வாதிகளில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய புரிதல்களில் கலைஞர் என்றைக்குமே முதலிடத்தில்தான் இருந்திருக்கிறார். இன்றைக்கு உள்ள மத்திய அரசு ஊனமுற்றோரை ‘கடவுளின் உடலைப் பெற்றவர்கள்’ (திவ்யங்) என்று இழிவுபடுத்தி அதனை அனைத்து அரசு ஆவணங்களிலும் கொண்டுவந்திருக்கும் இந்த வேளையில், தமிழகத்தில் மட்டும் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சுயமரியாதை வார்த்தை அரசு ஆவணங்களிலும் மக்கள் மத்தியிலும் வெகுவாக நடைமுறையில் இருப்பதற்கு காரணம் கலைஞர் அவர்கள். ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற வார்த்தை திறனை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
பொருளாதாரச் சுதந்திரத்தின் மூலமாகவே மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையோடு ஊனத்தை இழிவாகக் கருதும் இந்தச் சமூகத்தில் வாழமுடியும் என்று கருதிய கலைஞர் அவர்கள், 1981-இல் நிறைவேற்றிய ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை 1989-இல் ஆட்சிக்கு வந்த உடனேயே முதல்முறையாக அமல்படுத்தினார். அதேபோலவே, அவர்களின் இட ஒதுக்கிட்டை சமூகநீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் அமைத்துள்ளார் என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இதுபோன்ற சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசில்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எந்த ஒரு மாநில முதலமைச்சரும் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு கலைஞர் மாற்றுத்திறனாளிகளுக்கென்றே தனியொரு துறையை அமைத்து, அதைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார் என்பது வியக்கத்தக்கது. தனது கடைசி ஆட்சி காலத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி, அவர்களை மற்றவர்களுக்கு இணையாக அமர்த்தி அழகு பார்த்தவர் கலைஞர். அதேபோல, தனது கனவுக் கோட்டையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென்றே கீழ் தளத்தில் ஒரு சிறப்பான அதிநவீன வசதியைக்கொண்ட அறையை அமைத்து, அவர்களின் புத்தக வாசிப்பில் பெரும் பங்காற்றி இருக்கிறார்.
மத்திய அரசில் கலைஞரின் ஆளுமை
திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டு கூட்டாட்சித் தத்துவத்தைக் கையிலெடுத்த தி.மு.க., 1960-களில் மாநில சுயாட்சியை முழங்கத் துவங்கியது. இதன் விளைவாகவே தி.மு.க. தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்து தேசிய அரசியலில் பங்கேற்கத் தொடங்கியது. இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசில் பங்கேற்ற உடனேயே, கலைஞர் தனது மக்கள் நலக் கொள்கையான வங்கிகளைத் தேசியமயமாக்குதலை வலியுறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாகவே இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கினார் என்று கூறப்படுகிறது.
தனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் மத்திய அரசியலில் தவிர்க்கமுடியாத இடத்தை மாநிலக் கட்சியான தி.மு.க.விற்குக் கலைஞர் பெற்றுக்கொடுத்திருக்கிறார். டெல்லி அரசியலில் திராவிடக் கொள்கையை பரப்புவதற்கு முரசொலி மாறனை நியமித்து, பாராளுமன்றத்திலும் வெளியிலும் தேசிய நிகழ்வுகளில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இந்திரா காந்தி முதல் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் வரை ஏழு பிரதமர்களை நியமிப்பதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். அதேபோல, இரண்டு ஜனாதிபதிகளை நியமிப்பதில் கலைஞர் பெரும் பங்காற்றி இருக்கிறார்.
1992-இல் பாபர் மசூதி இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்டபோதும், 2002-இல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகளால் ஏவப்பட்ட வன்முறையை எதிர்த்தும் மிக தீவிரமாக கலைஞர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். 1989-இல் மத்தியில் இருந்த V.P. சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தபொழுது, வட இந்தியாவில் தீவிர எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில்தான் கலைஞர் அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். இது அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கலைஞரின் அறிவுரையின் பேரில் தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினை விரைந்து நிறைவேற்றக் கோரியும் மற்றும் அதனிலுள்ள குறைகளை கலையக்கோரியும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தார். இச்சட்டத்திற்காக குரல் கொடுத்த மிகச் சிலருள் கனிமொழியும் ஒருவர். அதேபோலவே, திருநங்கைகளின் நலவாழ்வுக்காக மத்திய அரசில் தனியாக ஒரு சட்டம் இயற்றுவதற்கு தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் தனிப்பட்ட முறையில் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தனி ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழக அரசியலிலும் வரலாற்றிலும் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர், தேசிய அரசியலிலும் தனக்கென தனி ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். இதற்கு மெத்தப்படித்த பொருளாதார வல்லுனர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே ஒருமுறை, ‘நான் பிரதமராக இருந்தபொழுது கலைஞரிடம் ஆலோசனை பெற்றுத்தான் முக்கிய முடிவுகளை எடுத்தேன்’ என்று கூறிய வாசகம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை, சாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, சமதர்மம், பெண்ணுரிமை போன்றவற்றில் தமிழகத்தைத் தேசிய அளவில் உயர்த்திக் காட்டியவர் கலைஞர். அதேபோல, தேசிய அரசியலில் திராவிடக் கொள்கைகளைப் பாய்ச்சிக் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சிக் கொள்கையையும் நிலைநாட்டுவதற்கு கடைசிவரை போராடினார். இவரது பரந்துபட்ட சிந்தனைகளும், ஒடுக்கப்பட்டவர்களின் மீது இவர் கொண்டிருந்த தனி அக்கறையும் தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் இவருக்கு ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
--
(கட்டுரையாளர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]