பராசக்தி திரைப்படத்தின் உச்சகட்ட நீதிமன்றக் காட்சியின் வசனங்களை நீங்கள் அனைவருமே கேட்டிருப்பீர்கள். அவை 28 வயது இளைஞன் கருணாநிதியின் பேனாவிலிருந்து புறப்பட்ட பீரங்கி வசனங்கள். அந்தக் காட்சியும் வசனங்களும் தமிழகத்தின், ஏன் ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக அவலங்களைப் படிமமாக்கிக் காட்டின.
இந்தியச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வேறுபாடுகள், மதத்தின் பெயரிலான சுரண்டல்கள், ஏழை பணக்கார வர்க்கங்களுக்கிடையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகள், சாதி அமைப்பையும் வர்க்க வேறுபாடுகளையும் பாதுகாத்து நிற்கும் நிலவுடைமை முறை, இவற்றிக்குப் பாதுகாவலனாகச் செயல்படும் அரசு அதிகாரமும் நீதிமன்றங்களும், இந்த அமைப்பில் அன்றாடம் ஒடுக்கப்பட்டு தொடர்ந்து குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தி வைக்கப்படும் அடித்தட்டு மக்கள் என இந்தியச் சமூக, அரசியல், பொருளாதார நிதர்சனத்தின் படிமமாகவே இந்தக் காட்சியும் வசனங்களும் நம் முன் விரிகின்றன. கூடவே எழுகின்றது இந்தச் சமூக அவலங்களைத் தகர்த்து, சமூக சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டதொரு புத்துலகம் படைக்கத் துடிக்கும் இளைஞன் கருணாநிதியின் சமூக நீதிக்கான கர்ஜனை!
இந்தக் குரலின் வழியாக வெளிப்படுவது கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின், இளைஞனின் கருத்துக்கள் என்று கொள்வதைவிட, எந்த சமூக, சமத்துவக் கோட்பாடுகளின்மீது திருக்குறள் முதல் சித்தர்கள், வள்ளலார் போன்றோரின் சிந்தனைகள் வேரூன்றி இந்த மண்ணில் வளர்ந்தனவோ, எத்தகைய சமூக மாற்றத்தை இலட்சியமாக வரித்துக்கொண்டு திராவிட அடையாளமும், பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளும் தலைத்தோங்கி விரிந்தனவோ, அந்தச் சிந்தனைகளின் அழகு தமிழ் வடிவம் என்று கருதுவதே பொருத்தமானதாக இருக்கும்.
இளமைத் துடிப்போடு புரட்சி முழக்கம் செய்த கருணாநிதி, பின்னர் தேர்தல் அரசியலின் கணக்கீடுகள், குடும்பம் விளைவித்த குழப்பங்கள், கட்சியையும் ஆட்சியையும் காக்கச் செய்துகொண்ட சமரசங்கள் என நெருக்கடிகள் பலவற்றிற்கு முகம் கொடுத்து தனது வீரியத்தை சற்றே குறைத்துக் கொண்டாலும், சமூகநீதி கொள்கைகளின் சாரம் தணிந்துவிடாமல் அவருக்குள் சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டே இருந்தது, அவரது இறுதி மூச்சிருக்கும் வரையிலும்.
19 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக, சுமார் 20 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, 7 பிரதமர்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு 45 ஆண்டுகள் இந்திய அரசியலில் தவிர்க்கவியலாத தலைவராக, எழுத்தாளராக, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் 50 ஆண்டுகாலத் தலைவராக, தனி மனிதனாக சமூக நீதிக்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் கலைஞர் ஆற்றிய மலைக்க வைக்கும் பணிகளுக்கு உரிய சமூக, அரசியல் அங்கீகாரம் வழங்குவது இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரிய பொறுப்பு.
சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கலைஞரின் சமூகநீதிச் சமர்
சாதிக் கட்டமைப்பின் கோரமுகம் குறித்து கலைஞர் மிகத் தெளிவான புரிதலைப் பெற்றிருந்தார், தானே நேரடியாகவும் சாதி ஒடுக்குமுறையின் தழும்புகளையும் மனதில் சுமந்திருந்தார். சாதி ஒழிப்பிற்கான அவரது முன்னெடுப்புகள் இந்தியாவில் இடதுசாரி ஆட்சி நடைபெற்ற மாநிலங்களால்கூட வியப்போடு உற்று நோக்கப்பட்ட திட்டங்களாக அமைந்திருந்தன.
பெரியாருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக நீடித்திருந்த கருவறைத் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் புரட்சிகரமானதொரு சட்டத்தை 1970-71 ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார் கலைஞர். கோயில்கள் யாருடய கொள்ளைக் கூடாரங்களாக இன்றளவும் உள்ளனவோ, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். அரசியல் சட்டத்தின்படி இந்தச் சட்டத்தைச் செல்லாததாக அறிவிக்க முடியாத உச்சநீதிமன்றம், ‘அரசியல் சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லுபடியாகக் கூடியதுதான். ஆனால், அதே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-இன் படி தமிழகக் கோயில்களில் இதுவரை அர்ச்சகர்களாக பணியாற்றி வருவோரின் மரபுசார் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. ‘ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால் பேஷண்ட் டெட்!’ என்று வழக்கின் தீர்ப்புப்பற்றி தனக்கே உரிய நறுக்குத் தெறித்த மொழியில் சாடினார் பெரியார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் கலைஞரின் நெஞ்சிலும் ஊடுருவிப் பாய்ந்திருக்க வேண்டும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை புதிய வடிவில் 2006-07-இல் கொண்டு வந்ததோடு நில்லாமல், அவ்வாறு அர்ச்சகர் பயிற்சியினை ஆகம விதிப்படி கற்றுத் தேர்ந்தவர்களை இதுநாள்வரை வேதக்கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து உருவாக்க அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி ஒன்றினையும் திருவண்ணாமலையில் நிறுவினார் கலைஞர்.
பல்வேறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மொத்தம் 206 அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பணி வாய்ப்புக்காகக் காத்திருந்த சூழலில்தான் உச்சநீதிமன்றம் மதுரைக் கிளை சிவாச்சாரியார்களுக்கு ஆதரவானதொரு தீர்ப்பினை வழங்கி மீண்டும் இச்சட்டத்தின் சாரத்தை நீர்த்துப்போகச் செய்தது.
ஆனால் கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவ்வாறு அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலொன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார், அதுவும் பல்வேறு தடைகளைத் தாண்டி. இந்த நியமனத்தை ஒரு தற்காலிக வெற்றி என்று கூட கூற முடியாது. இத்துனை முயற்சிகளுக்கும் சட்டப் போராட்டங்களுக்கும் பின்னரும் பெரியாரின் நெஞ்சில் தைத்து, கலைஞரின் உள்ளத்தில் ஊடுருவிய கருவறைத் தீண்டாமை என்னும் ஈராயிரம்காலப் பழமையான முள் அகற்றப்படாமல்தான் உள்ளது.
அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத மற்றுமொரு சாதித் தகர்ப்புச்சட்டம் அமலுக்கு வந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, முதல் வேலையாக சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். அகமண முறையே சாதி அமைப்பை இவ்வளவு நூற்றாண்டுகளாக இறுக்கமாக்கிப் பாதுகாத்து வரும் கூறு என்பதை அம்பேத்கர் தொடங்கி மானுடவியலாளர்கள் வரை அனைவரும் எடுத்துக் காட்டுகின்றனர். சாதிக் கட்டமைப்பைத் தகர்க்கவும், திருமணங்களில் பார்ப்பனிய சடங்குகள், ஆடம்பரங்களைத் தவிர்க்கவும் பெரியார் சுயமரியாதை திருமணங்களை தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தினார்.
இதுநாள் வரை இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இத்தகையதொரு திருமணமுறை இவ்வளவு பரவலாக நிகழவும் இல்லை, இத்தகைய திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் கலைஞர் பெரும் பங்காற்றினார். அதனுடன் நில்லாமல், தனது 1989-91 ஆட்சிக்காலத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலோனோர் சேரிகளில், அதுவும் குடிசைகளில் வாழ்ந்து அன்றாடம் அல்லல்களைச் சந்தித்து வருவதைக் கருத்தில்கொண்டு, குடிசைகளை ஒழித்து அவற்றிற்கு மாற்றாக காங்க்ரீட் வீடுகள் கட்டியெழுப்புவதையே பிரத்யேகப் பணியாகக் கொண்டதொரு வாரியத்தை ‘குடிசை மாற்றுவாரியம்’ என்ற பெயரில் உருவாக்கினார். கூடவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பெரும்பாலோனோர் வீடற்ற ஏழைகளாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கென காங்க்ரீட் வீடுகள் கட்டித்தரும் சிறப்புத் திட்டத்தை 1969-76 காலகட்டத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியது கருணாநிதி அரசு. மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கென பிரத்யேகமாகச் செயலாற்றும் வகையில் தனித்தனி அமைச்சகங்களை உருவாக்கினார் கலைஞர்; அதுவும், மத்திய அரசு கூட இப்படியொரு அமைச்சகத்தை நினைத்தும் பார்த்திராத 1970-களிலேயே!
தமிழகத்தில் அரசுப்பணிகள், கல்விச்சேர்க்கை, போன்ற அரசு நடைமுறைகளில் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக நீதிக்கட்டமைப்புக்குச் சிறந்த கட்டியமாகும். 1970 காலகட்டத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 15 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது.
பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவினை உருவாக்கி அதில் வன்னியர், கள்ளர் போன்ற சாதிகள் 1989-இல் சேர்க்கப்பட்டன. கொங்கு வெள்ளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, இஸ்லாமியர்களுக்கு தனியாக பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கியது, இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து பிரிவினருக்கும் இலவசக் கல்வி வழங்கி, அரசு சலுகைகளைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை நீக்கியது போன்ற முன்னோடி நடவடிக்கைகள் தமிழகத்தின் சாதி, பொருளாதார ஒடுக்குமுறைகளைக் கடந்து முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் இன்று அரசுப் பதவிகளைப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்பதில் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர்.
கலைஞர் தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அருந்ததியருக்கு மொத்த தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம், தலித் சாதிகளுள் ஒடுக்கப்பட்டவர்களாக இப்போதும் நடத்தப்படும் அருந்ததியர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெற்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழியேற்பட்டுள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கலைஞரின் சமூகநீதி, சாதி ஒழிப்பு முயற்சிகளுள் மிக முக்கியமானதொரு முன்னெடுப்பாக அமைந்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 250 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு அவற்றில் அனைத்து சாதிகளையும் சார்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது, ஊனமுற்றோர், திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் ஆக விளிம்புநிலை மக்கள் வசிப்பதற்கான உறைவிடங்களாகவும் இந்த சமத்துவபுரங்கள் உள்ளன. கட்சிக்காரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, சாதி ஒற்றுமை பெரிய அளவுக்கு ஏற்படாமல் போனது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கொள்கை அடிப்படையில் இது ஒரு முற்போக்கு அம்சங்கள் நிறைந்த திட்டம் என்பதில் ஐயமில்லை.
மேலும் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள், வீட்டுமனைகள் ஒதுக்கித் தருவதற்கான பாரிய முயற்சிகள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாட்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு அதே இடத்தை வழங்க வகைசெய்த குடியிருப்புத் திட்டம், மீனவர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்புத் திட்டம், சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு அரசுப் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்து வழங்கிய திட்டம் ஆகியவை சமூகத்தின் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் மக்களுக்கு உறைவிடம் என்னும் அடிப்படை உரிமையை உறுதிசெய்திருக்கின்றன. இவரது 2006-2011 ஆட்சிக் காலத்தில் 21 லட்சம் குடிசை வீடுகளுக்கு மாற்றாக நிரந்தர காங்க்ரீட் வீடுகள் கட்டித் தருவதற்கான மாபெரும் நீண்டகாலத் திட்டம் ‘கலைஞர் வீட்டுவசதித் திட்டம்’ என்ற பெயரில் வகுக்கப்பட்டு, சுமார் இரண்டரை லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே காணப்பட்ட பெரும் வரவேற்பைக் கருதி, பின்னர் வந்த அரசும் வேறு பெயர்களில் சில பெயரளவிலான மாற்றங்களோடு இதே திட்டத்தைச் செயல்படுத்தியது.
பாலின சமத்துவம் காணப் பாடுபட்ட பெருந்தலைவர்
1989-இல் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இந்து வாரிசு உரிமைச் சட்டம் தமிழ்நாடு திருத்தம் (The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989) கொண்டுவரப்பட்டது. புதிய திருத்தத்தின் மூலம் 01.01.1989-க்குப் பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் தமது மூதாதையரின் சொத்துக்களில் ஆண்களுக்கு இணையான உரிமை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு இணையான சொத்துரிமை வழங்கும் சட்டத்திருத்தம் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் நாளில் தான் இந்தியா முழுமைக்கும் அமலுக்கு வந்தது என்பதும், ஆனால் அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒப்பீடாகும்.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு பதவிகளை ஒதுக்கீடு செய்தது, பெண்கள் சிறுவணிகங்கள் செய்வதற்கு ஏதுவாக சேமிப்புக் கணக்குடன் கூடிய கடனுதவி வழங்கியது, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவற்றின் மூலம் சுமார் பத்து லட்சம் பெண்களுக்கு சிறுதொழில் வாய்ப்புகளை உருவாக்கியது போன்ற நடவடிக்கைகள் பெண்கள் தற்சார்பும் தன்னம்பிக்கையும் கொண்ட குடிமக்களாக உருவாக பெரிதும் பங்களிப்பு செய்துள்ளன.
அதே போன்று, மூவாலூர் இராமாமிருதம் அம்மையாரின் நினைவாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கிச் செயல்படுத்தியது, மறுமணம் செய்துகொள்ளும் கைம்பெண்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கியது போன்றவை இந்தியாவின் பிற எந்த மாநிலத்திலும் நினைத்துக்கூடப் பார்த்திட முடியாத பெண்கள் நலனுக்கும், சமூக சமத்துவத்திற்கும் வித்திட்ட திட்டங்களாக அமைந்தன.
பாலினச் சிறுபான்மையினரான மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகளையும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் குறைத்து, அவர்களுக்கு சமூக அங்கீகாரமும், சுயமரியாதையுள்ள வாழ்வையும் உறுதிப்படுத்த திருநங்கைகள் நலவாரியம் இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான், அதுவும் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான். பிற மாநில மூன்றாம் பாலினத்தவர்கூட, 'தமிழகத்தில் அமைக்கப்பட்டிருப்பது போன்றதொரு நலவாரியம் வேண்டும்' என்றுதான் தங்களது அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நலவாரியம் அமைந்த பின்னர்தான் மூன்றாம் பாலினத்தவர் குடும்ப அட்டை கூட பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினர் நலம் காத்த சீரிய திட்டங்கள்
வரலாற்று நோக்கில் பின்னோக்கிச் சிந்திக்கும்போது, வேறுபட்ட மத நம்பிக்கைகளுக்கும் மாறுபட்ட சிந்தனைகளுக்கும் மதிப்பளித்துப் பாதுகாக்கும் இடமாகவே தமிழகமும், தென்னிந்தியாவும் இருந்திருக்கின்றன. பெரியாரும், திராவிட இயக்கமும் சிறுபான்மையினர் நலன், சுயமரியாதை, உரிய உரிமைகள் போன்றவற்றை உறுதிசெய்வதில் பெரும் முனைப்புக் காட்டின; இப்போதும்கூட அது தொடர்வதனாலேயே மதம் சார்ந்த கலவரங்களோ பிரிவினைகளோ தமிழகத்தில் ஏற்படுவதில்லை.
முகமது நபி பிறந்த நாளான மிலாது நபியை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது, உருது பேசும் முஸ்லிம்களை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இணையாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றால் சிறுபான்மையர் சமூக ஒன்றுதல் உணர்வும், உரிமைகளும் பெற்றுள்ளனர். இன்னும் முக்கியமாக, இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் அரசு இந்தியாவில் ஒரு புதிய முன்னுதாரணத்தைப் படைத்துள்ளது. கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும், மிகக் குறைவான அளவே பங்கேற்ற அவர்கள் புதிய முனைப்புடன் தற்போது சமூக இயக்கத்தில் பங்களிப்பது, தமது பழமைவாதச் சிந்தனைகளை மாற்றி பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குவது போன்ற மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
‘இந்து, இந்தி, இந்தியா’வை ஏற்க மறுத்த இடிமுழக்கம்
தேர்தல் அரசியலின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தி.மு.க. தனது 'திராவிட நாடு' கொள்கையை 1960-களில் மாற்றிக் கொண்டாலும், 'வலிமையான மாநிலங்களே வளமான இந்தியாவை உருவாக்கும்' என்ற முழக்கத்தினை கலைஞர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் இருந்தார். பின்னர் வந்த அரசுகள் கூட மாநில சுயாட்சிக்கான திராவிட இயக்கத்தின் குரலை ஒலித்துக் கொண்டுதான் இருந்தன; வெகு சமீபம் வரையில். சென்னை மாகாணத்தை தமிழ்நாடாக மாற்றியது இந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையின் முக்கியமானதொரு கூறு என்றே பல வரலாற்று ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கலைஞர் வடமொழிக்கும், ஆங்கிலத்திற்கும் பதிலாக அழகு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை நிறுவனமயப்படுத்தினார். இந்தி மொழி வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்களும், தனது ஆட்சிக்காலத்தில் தமிழர் வரலாறு, இலக்கியம், இந்துத்துவத்தின் வரையறைக்குள் எப்போதுமே அடங்காத தமிழகத்தின் பண்பாடு ஆகியவற்றை முதன்மைப்படுத்துவதில் பெரும் முனைப்புக் காட்டியதும் இந்த நோக்கங்களுக்காகவே. அதன் விளைவே, விவேகானந்தர் பாறை இருக்கும் குமரிக்கடலின் முனையில் 133 அடி திருவள்ளுவர் சிலையும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், பூம்புகார் சுற்றுலாத் தளமும், மெட்ராஸ் மாநகரம் சென்னை என்ற நிரந்தரப் பெயர் பெற்றதும், சென்னையின் மையப் பகுதியில் செம்மொழிப் பூங்காவும், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதும், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபங்களும், கண்ணகியின் சிலையும். தமிழ் மரபு சார்ந்த குறியீடுகளை முதன்மைப்படுத்திய இந்த எல்லா முயற்சிகளும், ‘இந்து, இந்தி, இந்தியா’ என்ற ஒற்றைச் சட்டகத்தினுள் பல்வேறு பண்பாட்டு மரபுகளைக் கொண்ட மக்களை அடைக்க முயலும் பெரும்பான்மைவாதச் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்க்கமானதொரு சமூகநீதிப் பார்வையை முன்வைத்தன.
கலைஞர் தனது எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திய சந்தச்சுவை மிக்க அழகு தமிழ் பற்றி பலரும் புகழ்ந்துரைத்துள்ளனர். அவரது தமிழ் அழகானது என்பதைவிட, அது பகுத்தறிவுக் கூறுகளால் நிறைந்தது என்பதே அவரது சிறப்பு. அழகு தமிழ் வசனங்களை திருவிளையாடல் திரைப்படத்திலும்கூட நாம் கேட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஆனால், அந்தத் தமிழின் அழகை பராசக்தி திரைப்படத்தின் வீச்சோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. முன்னது அழகான தமிழ்; பின்னதோ இந்தியச் சமூக அரசியல் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் ஒடுக்குமுறைகளை அகழ்ந்து சொல்லும் பகுத்தறிவுத் தமிழ்!
இந்த ரீதியிலேயே ஊனமுற்றோருக்கு அவர் உருவாக்கி வெற்றிகரமாக வெகு சீக்கிரத்திலேயே பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்த ‘மாற்றுத்திறனாளிகள்' என்ற சொல்லும், மூன்றாம் பாலினத்தவற்கான 'திருநங்கை' என்ற சொல்லும் சிறப்புப் பெறுகின்றன. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ‘திவ்யங்' என்ற சொல் ஊனமுற்றோரை 'புனித உடல்' கொண்ட, உணர்வோ சுயமோ இல்லாத பண்டங்கள் என்ற நிலைக்குக் கீழ்மைப்படுத்திய நிலையில், 'மாற்றுத்திறனாளிகள்' என்ற பதம் ஊனமுற்றோரின் திறன்களை மையப்படுத்தியதொரு புதிய சிந்தனைப் போக்கை உருவாக்கியது. இந்தப் பதம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் ஊனமுற்றோருக்கு ஓரளவு சமூக அங்கீகாரமும், புதியதொரு அடையாளமும் கிடைத்துள்ளன என்று துணிந்து சொல்வதற்கான உதாரணங்கள் நிறையவே உள்ளன.
ஊனமுற்றோர் உரிமைகளைப் பெற உறுதுணை புரிந்த உணர்வாளர்
டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில் உயர்கல்வி வாய்ப்புகள் கோரியும், தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவும் ஊனமுற்றோர் அமைப்புகள், குறிப்பாக பார்வையற்றோருக்கான அமைப்புகள் மாபெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த 1970-களின் தொடக்கத்தில் கலைஞர் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார். இங்குள்ள ஊனமுற்றோருக்கான அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் கோரிக்கைகளை ஏற்று, 1974-இல் முதல்வரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 'கருணை அடிப்படையில்' முதன் முறையாக சில ஊனமுற்றோருக்கு அரசு வேலைகளை வழங்கினார். ஆனால், எத்துனை பேருக்கு என்னென்ன வேலைகள் வழங்கப்பட்டன என்ற தரவுகள் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன.
பின்னர், 1981-இல் எம்.ஜி.ஆர். அரசு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணையைச் செயல்படுத்தத் தேவையான திருத்தங்களை அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை 1986, 1987 ஆகிய ஆண்டுகளில்தான் கொண்டு வந்தது. ஆனாலும் 1989 வரை எந்த ஒரு ஊனமுற்றவரும் இந்த அரசாணையைப் பயன்படுத்தி பணியில் அமர்த்தப்படவில்லை. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த அரசாணையை போர்க்கால அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் செயல்படுத்துமாறு அவசர உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையிலேயே உடனடியாக ஊனமுற்றோர் பலர் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுகளில் ஊனமுற்றோரை நியமிக்கும்போது அடையாளம் காணப்பட்ட பணிகளில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற விதியினை ஏற்படுத்தாமல், எல்லா அரசுத்துறைகளிலும் பாகுபாடின்றி நியமனங்களை மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கலைஞர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையும் ஊனமுற்றோரின் பணிவாய்ப்புகளை பெரிதும் உயர்த்தியது.
இந்த ஆணையின் விளைவாகவே உயர்கல்வி நிறுவனங்களில் மூன்று விழுக்காடு இடம் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியிலும், சமூகப் படிநிலைகளிலும் பின்தங்கிய ஊனமுற்றோர், குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள் பல பட்டதாரிகளாக வளர முடிந்தது. அதற்கு முன்னரும் ஊனமுற்றோர் உயர்கல்வி வாய்ப்புகளை பெற்று வந்தார்கள் என்றாலும், அவர்கள் பொதுப் பிரிவுகளிலேயே விண்ணப்பித்து இடங்களைப் பெற வேண்டியிருந்தது. அத்தகைய வாய்ப்பு, சமூகத்தின் மேல்தட்டில் இருந்த ஊனமுற்றோருக்கே கிடைத்திருக்க முடியும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பின்னர், 1996-2001 காலத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளில் அமரும் வாய்ப்பு பல ஊனமுற்றோருக்குக் கிடைத்தது. 1995-இல் கொண்டு வரப்பட்ட 'ஊனமுற்றோர் (சமவாய்ப்பு, சம பங்கேற்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்புச்) சட்டத்தின்’படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரை (State Commissioner for the Disabled) நியமித்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்தான்! கலைஞர் 1999-இல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் ஊனமுற்றோர் தமக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்படும் போதும், தமக்கு அநீதி இழைக்கப்படும் போதும் முறையிடுவதற்கு நீதித்துறை நடுவருக்கு இணையான அதிகாரம் பெற்ற ஓர் அரசு உயர் அலுவலர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டார்.
2006-11 கலைஞரின் ஆட்சிக்காலத்தை, தமிழக ஊனமுற்றோர் மிக அதிக உரிமைகளைப் பெற்ற காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006, 2007, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஐநூறு ஊனமுற்றோர் சிறப்புப் பணிநியமன ஆணைகளின் மூலம் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்த மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு முறைப்படி முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு அவை ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2007-இல் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைத்தது, 2009-இல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்ததொரு துறையினை உருவாக்கியது, 2010-இல் அதனை தனியொரு அமைச்சகம் என்ற நிலைக்கு உயர்த்தி தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் ஊனமுற்றோருக்கான சிறப்புத் திட்டங்களை வகுக்கவும், வகுத்த திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் பெரிதும் பயனளித்திருக்கின்றன.
மேலும், போராட்டம் நடத்திய பார்வையற்றவர்களை சென்னை மாநகருக்கு வெளியே சுடுகாட்டில் நள்ளிரவில் விட்டுவிட்டு வந்த (2014), தமது உரிமைகளைக் கேட்டுப் போராடிய 93 பார்வையற்ற ‘CSGAB’ உறுப்பினர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்த (1995) அரசுகள் கோலோச்சிய தமிழகத்தில்தான் 2009-இல் பார்வயற்றோர் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, ‘அவர்களைச் சந்தித்த பின்னர்தான் நான் காலை உணவு கொள்வேன்' என்று சொல்லி, போராடியவர்களை நேரில் சந்தித்து, தமிழகம் முழுவதும் 25 விழுக்காடு கட்டணத்தில் பேருந்துப் பயணச் சலுகை, மாற்றுத்திறனாளிப் பணியாளர்களின் பணிநேரத்தில் கடைசி கால்மணி நேரம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளை விரைவாகப் பிறப்பித்தார் கலைஞர்.
2010-இல் ‘துக்ளக்’ பத்திரிக்கையில் முருகராஜன் என்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கலைஞர் அதிக அளவில் ஊனமுற்றோரை பணியில் நியமித்து அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பார்வையற்றோர் பலரும் அந்த ஆசாமியிடம் ‘உரிய மரியாதையுடன்’ எதிர்க்கேள்வி கேட்க, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரினார். ஊனமுற்றோர் அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்க புதிதாக அரசு நிர்வாகத்தில் ஒன்றுமில்லை என்ற உண்மை ஒருபுறம் இருக்க, இப்படியொரு குற்றச்சாட்டு எழும் அளவுக்கு ஊனமுற்றோரின் பணி நியமனங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நடந்துள்ளன என்பதை அப்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த பிரமுகரே பொறாமையுடன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
'இவனுங்களுக்கெல்லாம் வந்த வாழ்வ பாருங்க' என்று ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்வில் முன்னேறும் போதெல்லாம் வசைமொழிகள் சொறியப்படுவது வழக்கமான ஒன்றுதான்; அதற்கு ஊனமுற்றோர் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறே, இவர்களையெல்லாம் அரசுப் பணிகளில் நியமித்து 'ஒழுங்காக இருந்த நாட்டைக் கெடுத்துவிட்டார்' என்று பிற்போக்குவாதிகள் கலைஞரை வசைபாடுவதும் வழக்கமான அன்றாட நிகழ்வுதான். இவை இரண்டுமே, சமூக நீதியை நோக்கிய பயணம் தொடர்வதையும், அதில் கலைஞர் பங்கு பெருமளவு இருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன! தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஒரு உடல் ஊனமுற்றவராக ஊனத்தின் நிதர்சனத்தை தனது சொந்த அனுபவத்தில் கண்டவர் கலைஞர் என்பதும், 'முதல்வரைச் சக்கர நாற்காலியில் மூட்டை போல தூக்கிச் செல்கிறார்கள்' என்பது போன்ற அருவருக்கத்தக்க வெறுப்புமொழிகள் அவரது ஊனத்தை மையமாக வைத்து அவர்மீது வீசப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய உண்மைகள்.
முன்பே குறிப்பிட்டுள்ளது போல, ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பதம் ‘கூன்’, ‘குருடு’, ‘செவிடு’ என்று அறியப்பட்ட பல்வகை ஊனமுற்றோருக்கும் புதியதொரு சமூக அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ‘ஊனம்’ என்பது தனிமனிதனை மட்டும் வைத்து உருவாவதில்லை; மாறாக சமூகம் மாறுபட்ட உடற்கூறு கொண்டவர்களை ஊனமுற்றோராக மாற்றுகிறது என்ற புரிதல் கொண்டவர்களுக்கும், வெறும் பதங்களை மாற்றுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டவர்களும் கொண்டாடுவதற்கு ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லில் பெரிதாக எதுவும் இல்லைதான் என்றாலும், சமூகத்தை அன்றாடம் எதிர்கொள்ளும், அதன் வசைகளுக்கும், வன்முறைகளுக்கும் நேரடியாக முகம் கொடுக்கும் ஊனமுற்றோர் லட்சக்கணக்கானோருக்கு இந்தப் பதம் புதியதொரு சமூக மதிப்பையும், துணிவையும் வழங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
சமூகநீதி அளவுகோலில் ஒரு மதிப்பீடு
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சமூக நீதிக்கு எதிரான செயல்கள் நடக்காமல் இல்லை. 1997 மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின்போது 17 பேர் போலீஸ் தடியடியால் தாமிரபரணி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது அவற்றுள் முக்கியமானது. இதுதவிர, இன்னும் சிலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். காலந்தோறும், ஊனமுற்றோர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தமது போராட்டத்தாலும் தியாகத்தாலுமே உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதே உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கும் வரலாறு. கலைஞர் அத்தகைய உரிமைப் போராட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்தம் குறைகளை தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் களைய உண்மையாகவே முயன்றார் என்பதே அவரது சிறப்பாக வரலாற்றில் நிலைக்கப்போகிறது. காரணம், பெரியார் என்னும் பெரும் நெருப்பு (சற்றே தணிந்த வடிவத்திலேனும்) கலைஞரின் மனதுக்குள் சமூக நீதிக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கலைந்து, எல்லோருக்கும் சம நீதி, சுயமரியாதை, வளமான வாழ்வு ஆகிய விழுமியங்களுக்காகச் சுடர்விட்டுக் கொண்டேதான் இருந்தது.
தமிழகம் பொருளாதார, சமூக, மனிதவளக் குறியீடுகளில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பதையும் அமர்த்தியா சென் உள்ளிட்ட பல பொருளாதார, சமூகவியல் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த வளர்ச்சியின் சிறப்பு என்னவெனில், தமிழகம் தனது வளர்ச்சியில் அனைத்துப் பிரிவுகளை சார்ந்த மக்களையும் உள்ளடக்கியதான முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது என்பதுதான். இந்தச் சாதனைக்கு கருணாநிதி என்ற தனிமனிதன் பல்வேறு நிலைகளில் செய்துள்ள பங்களிப்பு மிகப்பெரியது. அவரது சமூகநீதி காக்கும் பணிகளுக்காகவே ‘பிரிவினைவாதி’ என்றும், 'மொழி வெறியர்' என்றும், 'இந்துக்களின் எதிரி' என்றும் வட இந்தியாவின் ஊடகங்களாலும், இந்துச் சாமியார்களாலும் தூற்றப்பட்டிருக்கிறார்; பலமுறை காரணமற்ற வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறார். அவரது சமூகப் பின்னணியும் அவர் மதித்த கொள்கைகளும் அதற்கு முக்கியமான காரணங்கள்.
1972-இல் கலைஞர் தமிழக சட்டமன்றத்தில் தமது அரசு பற்றி இப்படிக் கூறினார், “சிலர் இந்த அரசை 'மூன்றாம் தர அரசு' என்று சொல்கிறார்கள். இல்லை, இது நாளாந்தர (சூத்திரர்களின்) அரசு!' இது அவர் மறையும் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவு உண்மையாகவே இருந்தது.
சதிகள் பலவும் நம்மைச் சூழ்ந்து சமருக்கு அழைக்கும் நேரத்தில், கலைஞர் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டார். ஆனால், சாதிய வர்க்க, இன, மொழி, பிராந்திய, பாலின, உடல் ஏற்றத்தாழ்வுகளால் தம் வாழ்வின் ஓரத்தை நோக்கித் துரத்தப்படும் விளிம்புநிலை மக்களின் ஓட்டத்தை நிறுத்தும் குரல்கள் எங்கெல்லாம் ஒலிக்கின்றனவோ, அவர்தம் வாட்டத்தைப் போக்கும் செயல்கள் எங்கெல்லாம் நடந்தேறுகின்றனவோ, சமத்துவத்தை நோக்கி சட்டங்கள் எங்கெல்லாம் திருத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் கலைஞர் சமூகநீதிப் போராளிகளின் உள்ளத்தில் உந்து சக்தியாய் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்!
--
(கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
இந்தியச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வேறுபாடுகள், மதத்தின் பெயரிலான சுரண்டல்கள், ஏழை பணக்கார வர்க்கங்களுக்கிடையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகள், சாதி அமைப்பையும் வர்க்க வேறுபாடுகளையும் பாதுகாத்து நிற்கும் நிலவுடைமை முறை, இவற்றிக்குப் பாதுகாவலனாகச் செயல்படும் அரசு அதிகாரமும் நீதிமன்றங்களும், இந்த அமைப்பில் அன்றாடம் ஒடுக்கப்பட்டு தொடர்ந்து குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தி வைக்கப்படும் அடித்தட்டு மக்கள் என இந்தியச் சமூக, அரசியல், பொருளாதார நிதர்சனத்தின் படிமமாகவே இந்தக் காட்சியும் வசனங்களும் நம் முன் விரிகின்றன. கூடவே எழுகின்றது இந்தச் சமூக அவலங்களைத் தகர்த்து, சமூக சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டதொரு புத்துலகம் படைக்கத் துடிக்கும் இளைஞன் கருணாநிதியின் சமூக நீதிக்கான கர்ஜனை!
இந்தக் குரலின் வழியாக வெளிப்படுவது கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின், இளைஞனின் கருத்துக்கள் என்று கொள்வதைவிட, எந்த சமூக, சமத்துவக் கோட்பாடுகளின்மீது திருக்குறள் முதல் சித்தர்கள், வள்ளலார் போன்றோரின் சிந்தனைகள் வேரூன்றி இந்த மண்ணில் வளர்ந்தனவோ, எத்தகைய சமூக மாற்றத்தை இலட்சியமாக வரித்துக்கொண்டு திராவிட அடையாளமும், பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளும் தலைத்தோங்கி விரிந்தனவோ, அந்தச் சிந்தனைகளின் அழகு தமிழ் வடிவம் என்று கருதுவதே பொருத்தமானதாக இருக்கும்.
இளமைத் துடிப்போடு புரட்சி முழக்கம் செய்த கருணாநிதி, பின்னர் தேர்தல் அரசியலின் கணக்கீடுகள், குடும்பம் விளைவித்த குழப்பங்கள், கட்சியையும் ஆட்சியையும் காக்கச் செய்துகொண்ட சமரசங்கள் என நெருக்கடிகள் பலவற்றிற்கு முகம் கொடுத்து தனது வீரியத்தை சற்றே குறைத்துக் கொண்டாலும், சமூகநீதி கொள்கைகளின் சாரம் தணிந்துவிடாமல் அவருக்குள் சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டே இருந்தது, அவரது இறுதி மூச்சிருக்கும் வரையிலும்.
19 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக, சுமார் 20 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, 7 பிரதமர்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு 45 ஆண்டுகள் இந்திய அரசியலில் தவிர்க்கவியலாத தலைவராக, எழுத்தாளராக, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் 50 ஆண்டுகாலத் தலைவராக, தனி மனிதனாக சமூக நீதிக்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் கலைஞர் ஆற்றிய மலைக்க வைக்கும் பணிகளுக்கு உரிய சமூக, அரசியல் அங்கீகாரம் வழங்குவது இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரிய பொறுப்பு.
சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கலைஞரின் சமூகநீதிச் சமர்
சாதிக் கட்டமைப்பின் கோரமுகம் குறித்து கலைஞர் மிகத் தெளிவான புரிதலைப் பெற்றிருந்தார், தானே நேரடியாகவும் சாதி ஒடுக்குமுறையின் தழும்புகளையும் மனதில் சுமந்திருந்தார். சாதி ஒழிப்பிற்கான அவரது முன்னெடுப்புகள் இந்தியாவில் இடதுசாரி ஆட்சி நடைபெற்ற மாநிலங்களால்கூட வியப்போடு உற்று நோக்கப்பட்ட திட்டங்களாக அமைந்திருந்தன.
பெரியாருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக நீடித்திருந்த கருவறைத் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் புரட்சிகரமானதொரு சட்டத்தை 1970-71 ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார் கலைஞர். கோயில்கள் யாருடய கொள்ளைக் கூடாரங்களாக இன்றளவும் உள்ளனவோ, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். அரசியல் சட்டத்தின்படி இந்தச் சட்டத்தைச் செல்லாததாக அறிவிக்க முடியாத உச்சநீதிமன்றம், ‘அரசியல் சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லுபடியாகக் கூடியதுதான். ஆனால், அதே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-இன் படி தமிழகக் கோயில்களில் இதுவரை அர்ச்சகர்களாக பணியாற்றி வருவோரின் மரபுசார் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. ‘ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால் பேஷண்ட் டெட்!’ என்று வழக்கின் தீர்ப்புப்பற்றி தனக்கே உரிய நறுக்குத் தெறித்த மொழியில் சாடினார் பெரியார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் கலைஞரின் நெஞ்சிலும் ஊடுருவிப் பாய்ந்திருக்க வேண்டும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை புதிய வடிவில் 2006-07-இல் கொண்டு வந்ததோடு நில்லாமல், அவ்வாறு அர்ச்சகர் பயிற்சியினை ஆகம விதிப்படி கற்றுத் தேர்ந்தவர்களை இதுநாள்வரை வேதக்கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து உருவாக்க அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி ஒன்றினையும் திருவண்ணாமலையில் நிறுவினார் கலைஞர்.
பல்வேறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மொத்தம் 206 அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பணி வாய்ப்புக்காகக் காத்திருந்த சூழலில்தான் உச்சநீதிமன்றம் மதுரைக் கிளை சிவாச்சாரியார்களுக்கு ஆதரவானதொரு தீர்ப்பினை வழங்கி மீண்டும் இச்சட்டத்தின் சாரத்தை நீர்த்துப்போகச் செய்தது.
ஆனால் கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவ்வாறு அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலொன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார், அதுவும் பல்வேறு தடைகளைத் தாண்டி. இந்த நியமனத்தை ஒரு தற்காலிக வெற்றி என்று கூட கூற முடியாது. இத்துனை முயற்சிகளுக்கும் சட்டப் போராட்டங்களுக்கும் பின்னரும் பெரியாரின் நெஞ்சில் தைத்து, கலைஞரின் உள்ளத்தில் ஊடுருவிய கருவறைத் தீண்டாமை என்னும் ஈராயிரம்காலப் பழமையான முள் அகற்றப்படாமல்தான் உள்ளது.
அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத மற்றுமொரு சாதித் தகர்ப்புச்சட்டம் அமலுக்கு வந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, முதல் வேலையாக சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். அகமண முறையே சாதி அமைப்பை இவ்வளவு நூற்றாண்டுகளாக இறுக்கமாக்கிப் பாதுகாத்து வரும் கூறு என்பதை அம்பேத்கர் தொடங்கி மானுடவியலாளர்கள் வரை அனைவரும் எடுத்துக் காட்டுகின்றனர். சாதிக் கட்டமைப்பைத் தகர்க்கவும், திருமணங்களில் பார்ப்பனிய சடங்குகள், ஆடம்பரங்களைத் தவிர்க்கவும் பெரியார் சுயமரியாதை திருமணங்களை தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தினார்.
இதுநாள் வரை இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இத்தகையதொரு திருமணமுறை இவ்வளவு பரவலாக நிகழவும் இல்லை, இத்தகைய திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் கலைஞர் பெரும் பங்காற்றினார். அதனுடன் நில்லாமல், தனது 1989-91 ஆட்சிக்காலத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலோனோர் சேரிகளில், அதுவும் குடிசைகளில் வாழ்ந்து அன்றாடம் அல்லல்களைச் சந்தித்து வருவதைக் கருத்தில்கொண்டு, குடிசைகளை ஒழித்து அவற்றிற்கு மாற்றாக காங்க்ரீட் வீடுகள் கட்டியெழுப்புவதையே பிரத்யேகப் பணியாகக் கொண்டதொரு வாரியத்தை ‘குடிசை மாற்றுவாரியம்’ என்ற பெயரில் உருவாக்கினார். கூடவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பெரும்பாலோனோர் வீடற்ற ஏழைகளாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கென காங்க்ரீட் வீடுகள் கட்டித்தரும் சிறப்புத் திட்டத்தை 1969-76 காலகட்டத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியது கருணாநிதி அரசு. மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கென பிரத்யேகமாகச் செயலாற்றும் வகையில் தனித்தனி அமைச்சகங்களை உருவாக்கினார் கலைஞர்; அதுவும், மத்திய அரசு கூட இப்படியொரு அமைச்சகத்தை நினைத்தும் பார்த்திராத 1970-களிலேயே!
தமிழகத்தில் அரசுப்பணிகள், கல்விச்சேர்க்கை, போன்ற அரசு நடைமுறைகளில் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக நீதிக்கட்டமைப்புக்குச் சிறந்த கட்டியமாகும். 1970 காலகட்டத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 15 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது.
பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவினை உருவாக்கி அதில் வன்னியர், கள்ளர் போன்ற சாதிகள் 1989-இல் சேர்க்கப்பட்டன. கொங்கு வெள்ளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, இஸ்லாமியர்களுக்கு தனியாக பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கியது, இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து பிரிவினருக்கும் இலவசக் கல்வி வழங்கி, அரசு சலுகைகளைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை நீக்கியது போன்ற முன்னோடி நடவடிக்கைகள் தமிழகத்தின் சாதி, பொருளாதார ஒடுக்குமுறைகளைக் கடந்து முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் இன்று அரசுப் பதவிகளைப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்பதில் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர்.
கலைஞர் தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அருந்ததியருக்கு மொத்த தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம், தலித் சாதிகளுள் ஒடுக்கப்பட்டவர்களாக இப்போதும் நடத்தப்படும் அருந்ததியர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெற்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழியேற்பட்டுள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கலைஞரின் சமூகநீதி, சாதி ஒழிப்பு முயற்சிகளுள் மிக முக்கியமானதொரு முன்னெடுப்பாக அமைந்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 250 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு அவற்றில் அனைத்து சாதிகளையும் சார்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது, ஊனமுற்றோர், திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் ஆக விளிம்புநிலை மக்கள் வசிப்பதற்கான உறைவிடங்களாகவும் இந்த சமத்துவபுரங்கள் உள்ளன. கட்சிக்காரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, சாதி ஒற்றுமை பெரிய அளவுக்கு ஏற்படாமல் போனது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கொள்கை அடிப்படையில் இது ஒரு முற்போக்கு அம்சங்கள் நிறைந்த திட்டம் என்பதில் ஐயமில்லை.
மேலும் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள், வீட்டுமனைகள் ஒதுக்கித் தருவதற்கான பாரிய முயற்சிகள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாட்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு அதே இடத்தை வழங்க வகைசெய்த குடியிருப்புத் திட்டம், மீனவர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்புத் திட்டம், சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு அரசுப் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்து வழங்கிய திட்டம் ஆகியவை சமூகத்தின் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் மக்களுக்கு உறைவிடம் என்னும் அடிப்படை உரிமையை உறுதிசெய்திருக்கின்றன. இவரது 2006-2011 ஆட்சிக் காலத்தில் 21 லட்சம் குடிசை வீடுகளுக்கு மாற்றாக நிரந்தர காங்க்ரீட் வீடுகள் கட்டித் தருவதற்கான மாபெரும் நீண்டகாலத் திட்டம் ‘கலைஞர் வீட்டுவசதித் திட்டம்’ என்ற பெயரில் வகுக்கப்பட்டு, சுமார் இரண்டரை லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே காணப்பட்ட பெரும் வரவேற்பைக் கருதி, பின்னர் வந்த அரசும் வேறு பெயர்களில் சில பெயரளவிலான மாற்றங்களோடு இதே திட்டத்தைச் செயல்படுத்தியது.
பாலின சமத்துவம் காணப் பாடுபட்ட பெருந்தலைவர்
1989-இல் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இந்து வாரிசு உரிமைச் சட்டம் தமிழ்நாடு திருத்தம் (The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989) கொண்டுவரப்பட்டது. புதிய திருத்தத்தின் மூலம் 01.01.1989-க்குப் பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் தமது மூதாதையரின் சொத்துக்களில் ஆண்களுக்கு இணையான உரிமை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு இணையான சொத்துரிமை வழங்கும் சட்டத்திருத்தம் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் நாளில் தான் இந்தியா முழுமைக்கும் அமலுக்கு வந்தது என்பதும், ஆனால் அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒப்பீடாகும்.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு பதவிகளை ஒதுக்கீடு செய்தது, பெண்கள் சிறுவணிகங்கள் செய்வதற்கு ஏதுவாக சேமிப்புக் கணக்குடன் கூடிய கடனுதவி வழங்கியது, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவற்றின் மூலம் சுமார் பத்து லட்சம் பெண்களுக்கு சிறுதொழில் வாய்ப்புகளை உருவாக்கியது போன்ற நடவடிக்கைகள் பெண்கள் தற்சார்பும் தன்னம்பிக்கையும் கொண்ட குடிமக்களாக உருவாக பெரிதும் பங்களிப்பு செய்துள்ளன.
அதே போன்று, மூவாலூர் இராமாமிருதம் அம்மையாரின் நினைவாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கிச் செயல்படுத்தியது, மறுமணம் செய்துகொள்ளும் கைம்பெண்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கியது போன்றவை இந்தியாவின் பிற எந்த மாநிலத்திலும் நினைத்துக்கூடப் பார்த்திட முடியாத பெண்கள் நலனுக்கும், சமூக சமத்துவத்திற்கும் வித்திட்ட திட்டங்களாக அமைந்தன.
பாலினச் சிறுபான்மையினரான மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகளையும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் குறைத்து, அவர்களுக்கு சமூக அங்கீகாரமும், சுயமரியாதையுள்ள வாழ்வையும் உறுதிப்படுத்த திருநங்கைகள் நலவாரியம் இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான், அதுவும் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான். பிற மாநில மூன்றாம் பாலினத்தவர்கூட, 'தமிழகத்தில் அமைக்கப்பட்டிருப்பது போன்றதொரு நலவாரியம் வேண்டும்' என்றுதான் தங்களது அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நலவாரியம் அமைந்த பின்னர்தான் மூன்றாம் பாலினத்தவர் குடும்ப அட்டை கூட பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினர் நலம் காத்த சீரிய திட்டங்கள்
வரலாற்று நோக்கில் பின்னோக்கிச் சிந்திக்கும்போது, வேறுபட்ட மத நம்பிக்கைகளுக்கும் மாறுபட்ட சிந்தனைகளுக்கும் மதிப்பளித்துப் பாதுகாக்கும் இடமாகவே தமிழகமும், தென்னிந்தியாவும் இருந்திருக்கின்றன. பெரியாரும், திராவிட இயக்கமும் சிறுபான்மையினர் நலன், சுயமரியாதை, உரிய உரிமைகள் போன்றவற்றை உறுதிசெய்வதில் பெரும் முனைப்புக் காட்டின; இப்போதும்கூட அது தொடர்வதனாலேயே மதம் சார்ந்த கலவரங்களோ பிரிவினைகளோ தமிழகத்தில் ஏற்படுவதில்லை.
முகமது நபி பிறந்த நாளான மிலாது நபியை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது, உருது பேசும் முஸ்லிம்களை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இணையாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றால் சிறுபான்மையர் சமூக ஒன்றுதல் உணர்வும், உரிமைகளும் பெற்றுள்ளனர். இன்னும் முக்கியமாக, இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் அரசு இந்தியாவில் ஒரு புதிய முன்னுதாரணத்தைப் படைத்துள்ளது. கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும், மிகக் குறைவான அளவே பங்கேற்ற அவர்கள் புதிய முனைப்புடன் தற்போது சமூக இயக்கத்தில் பங்களிப்பது, தமது பழமைவாதச் சிந்தனைகளை மாற்றி பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குவது போன்ற மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
‘இந்து, இந்தி, இந்தியா’வை ஏற்க மறுத்த இடிமுழக்கம்
தேர்தல் அரசியலின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தி.மு.க. தனது 'திராவிட நாடு' கொள்கையை 1960-களில் மாற்றிக் கொண்டாலும், 'வலிமையான மாநிலங்களே வளமான இந்தியாவை உருவாக்கும்' என்ற முழக்கத்தினை கலைஞர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் இருந்தார். பின்னர் வந்த அரசுகள் கூட மாநில சுயாட்சிக்கான திராவிட இயக்கத்தின் குரலை ஒலித்துக் கொண்டுதான் இருந்தன; வெகு சமீபம் வரையில். சென்னை மாகாணத்தை தமிழ்நாடாக மாற்றியது இந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையின் முக்கியமானதொரு கூறு என்றே பல வரலாற்று ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கலைஞர் வடமொழிக்கும், ஆங்கிலத்திற்கும் பதிலாக அழகு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை நிறுவனமயப்படுத்தினார். இந்தி மொழி வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்களும், தனது ஆட்சிக்காலத்தில் தமிழர் வரலாறு, இலக்கியம், இந்துத்துவத்தின் வரையறைக்குள் எப்போதுமே அடங்காத தமிழகத்தின் பண்பாடு ஆகியவற்றை முதன்மைப்படுத்துவதில் பெரும் முனைப்புக் காட்டியதும் இந்த நோக்கங்களுக்காகவே. அதன் விளைவே, விவேகானந்தர் பாறை இருக்கும் குமரிக்கடலின் முனையில் 133 அடி திருவள்ளுவர் சிலையும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், பூம்புகார் சுற்றுலாத் தளமும், மெட்ராஸ் மாநகரம் சென்னை என்ற நிரந்தரப் பெயர் பெற்றதும், சென்னையின் மையப் பகுதியில் செம்மொழிப் பூங்காவும், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதும், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபங்களும், கண்ணகியின் சிலையும். தமிழ் மரபு சார்ந்த குறியீடுகளை முதன்மைப்படுத்திய இந்த எல்லா முயற்சிகளும், ‘இந்து, இந்தி, இந்தியா’ என்ற ஒற்றைச் சட்டகத்தினுள் பல்வேறு பண்பாட்டு மரபுகளைக் கொண்ட மக்களை அடைக்க முயலும் பெரும்பான்மைவாதச் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்க்கமானதொரு சமூகநீதிப் பார்வையை முன்வைத்தன.
கலைஞர் தனது எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திய சந்தச்சுவை மிக்க அழகு தமிழ் பற்றி பலரும் புகழ்ந்துரைத்துள்ளனர். அவரது தமிழ் அழகானது என்பதைவிட, அது பகுத்தறிவுக் கூறுகளால் நிறைந்தது என்பதே அவரது சிறப்பு. அழகு தமிழ் வசனங்களை திருவிளையாடல் திரைப்படத்திலும்கூட நாம் கேட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஆனால், அந்தத் தமிழின் அழகை பராசக்தி திரைப்படத்தின் வீச்சோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. முன்னது அழகான தமிழ்; பின்னதோ இந்தியச் சமூக அரசியல் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் ஒடுக்குமுறைகளை அகழ்ந்து சொல்லும் பகுத்தறிவுத் தமிழ்!
இந்த ரீதியிலேயே ஊனமுற்றோருக்கு அவர் உருவாக்கி வெற்றிகரமாக வெகு சீக்கிரத்திலேயே பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்த ‘மாற்றுத்திறனாளிகள்' என்ற சொல்லும், மூன்றாம் பாலினத்தவற்கான 'திருநங்கை' என்ற சொல்லும் சிறப்புப் பெறுகின்றன. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ‘திவ்யங்' என்ற சொல் ஊனமுற்றோரை 'புனித உடல்' கொண்ட, உணர்வோ சுயமோ இல்லாத பண்டங்கள் என்ற நிலைக்குக் கீழ்மைப்படுத்திய நிலையில், 'மாற்றுத்திறனாளிகள்' என்ற பதம் ஊனமுற்றோரின் திறன்களை மையப்படுத்தியதொரு புதிய சிந்தனைப் போக்கை உருவாக்கியது. இந்தப் பதம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் ஊனமுற்றோருக்கு ஓரளவு சமூக அங்கீகாரமும், புதியதொரு அடையாளமும் கிடைத்துள்ளன என்று துணிந்து சொல்வதற்கான உதாரணங்கள் நிறையவே உள்ளன.
ஊனமுற்றோர் உரிமைகளைப் பெற உறுதுணை புரிந்த உணர்வாளர்
டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில் உயர்கல்வி வாய்ப்புகள் கோரியும், தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவும் ஊனமுற்றோர் அமைப்புகள், குறிப்பாக பார்வையற்றோருக்கான அமைப்புகள் மாபெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த 1970-களின் தொடக்கத்தில் கலைஞர் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார். இங்குள்ள ஊனமுற்றோருக்கான அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் கோரிக்கைகளை ஏற்று, 1974-இல் முதல்வரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 'கருணை அடிப்படையில்' முதன் முறையாக சில ஊனமுற்றோருக்கு அரசு வேலைகளை வழங்கினார். ஆனால், எத்துனை பேருக்கு என்னென்ன வேலைகள் வழங்கப்பட்டன என்ற தரவுகள் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன.
பின்னர், 1981-இல் எம்.ஜி.ஆர். அரசு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணையைச் செயல்படுத்தத் தேவையான திருத்தங்களை அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை 1986, 1987 ஆகிய ஆண்டுகளில்தான் கொண்டு வந்தது. ஆனாலும் 1989 வரை எந்த ஒரு ஊனமுற்றவரும் இந்த அரசாணையைப் பயன்படுத்தி பணியில் அமர்த்தப்படவில்லை. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த அரசாணையை போர்க்கால அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் செயல்படுத்துமாறு அவசர உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையிலேயே உடனடியாக ஊனமுற்றோர் பலர் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுகளில் ஊனமுற்றோரை நியமிக்கும்போது அடையாளம் காணப்பட்ட பணிகளில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற விதியினை ஏற்படுத்தாமல், எல்லா அரசுத்துறைகளிலும் பாகுபாடின்றி நியமனங்களை மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கலைஞர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையும் ஊனமுற்றோரின் பணிவாய்ப்புகளை பெரிதும் உயர்த்தியது.
இந்த ஆணையின் விளைவாகவே உயர்கல்வி நிறுவனங்களில் மூன்று விழுக்காடு இடம் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியிலும், சமூகப் படிநிலைகளிலும் பின்தங்கிய ஊனமுற்றோர், குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள் பல பட்டதாரிகளாக வளர முடிந்தது. அதற்கு முன்னரும் ஊனமுற்றோர் உயர்கல்வி வாய்ப்புகளை பெற்று வந்தார்கள் என்றாலும், அவர்கள் பொதுப் பிரிவுகளிலேயே விண்ணப்பித்து இடங்களைப் பெற வேண்டியிருந்தது. அத்தகைய வாய்ப்பு, சமூகத்தின் மேல்தட்டில் இருந்த ஊனமுற்றோருக்கே கிடைத்திருக்க முடியும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பின்னர், 1996-2001 காலத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளில் அமரும் வாய்ப்பு பல ஊனமுற்றோருக்குக் கிடைத்தது. 1995-இல் கொண்டு வரப்பட்ட 'ஊனமுற்றோர் (சமவாய்ப்பு, சம பங்கேற்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்புச்) சட்டத்தின்’படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரை (State Commissioner for the Disabled) நியமித்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்தான்! கலைஞர் 1999-இல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் ஊனமுற்றோர் தமக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்படும் போதும், தமக்கு அநீதி இழைக்கப்படும் போதும் முறையிடுவதற்கு நீதித்துறை நடுவருக்கு இணையான அதிகாரம் பெற்ற ஓர் அரசு உயர் அலுவலர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டார்.
2006-11 கலைஞரின் ஆட்சிக்காலத்தை, தமிழக ஊனமுற்றோர் மிக அதிக உரிமைகளைப் பெற்ற காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006, 2007, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஐநூறு ஊனமுற்றோர் சிறப்புப் பணிநியமன ஆணைகளின் மூலம் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்த மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு முறைப்படி முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு அவை ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2007-இல் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைத்தது, 2009-இல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்ததொரு துறையினை உருவாக்கியது, 2010-இல் அதனை தனியொரு அமைச்சகம் என்ற நிலைக்கு உயர்த்தி தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் ஊனமுற்றோருக்கான சிறப்புத் திட்டங்களை வகுக்கவும், வகுத்த திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் பெரிதும் பயனளித்திருக்கின்றன.
மேலும், போராட்டம் நடத்திய பார்வையற்றவர்களை சென்னை மாநகருக்கு வெளியே சுடுகாட்டில் நள்ளிரவில் விட்டுவிட்டு வந்த (2014), தமது உரிமைகளைக் கேட்டுப் போராடிய 93 பார்வையற்ற ‘CSGAB’ உறுப்பினர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்த (1995) அரசுகள் கோலோச்சிய தமிழகத்தில்தான் 2009-இல் பார்வயற்றோர் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, ‘அவர்களைச் சந்தித்த பின்னர்தான் நான் காலை உணவு கொள்வேன்' என்று சொல்லி, போராடியவர்களை நேரில் சந்தித்து, தமிழகம் முழுவதும் 25 விழுக்காடு கட்டணத்தில் பேருந்துப் பயணச் சலுகை, மாற்றுத்திறனாளிப் பணியாளர்களின் பணிநேரத்தில் கடைசி கால்மணி நேரம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளை விரைவாகப் பிறப்பித்தார் கலைஞர்.
2010-இல் ‘துக்ளக்’ பத்திரிக்கையில் முருகராஜன் என்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கலைஞர் அதிக அளவில் ஊனமுற்றோரை பணியில் நியமித்து அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பார்வையற்றோர் பலரும் அந்த ஆசாமியிடம் ‘உரிய மரியாதையுடன்’ எதிர்க்கேள்வி கேட்க, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரினார். ஊனமுற்றோர் அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்க புதிதாக அரசு நிர்வாகத்தில் ஒன்றுமில்லை என்ற உண்மை ஒருபுறம் இருக்க, இப்படியொரு குற்றச்சாட்டு எழும் அளவுக்கு ஊனமுற்றோரின் பணி நியமனங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நடந்துள்ளன என்பதை அப்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த பிரமுகரே பொறாமையுடன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
'இவனுங்களுக்கெல்லாம் வந்த வாழ்வ பாருங்க' என்று ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்வில் முன்னேறும் போதெல்லாம் வசைமொழிகள் சொறியப்படுவது வழக்கமான ஒன்றுதான்; அதற்கு ஊனமுற்றோர் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறே, இவர்களையெல்லாம் அரசுப் பணிகளில் நியமித்து 'ஒழுங்காக இருந்த நாட்டைக் கெடுத்துவிட்டார்' என்று பிற்போக்குவாதிகள் கலைஞரை வசைபாடுவதும் வழக்கமான அன்றாட நிகழ்வுதான். இவை இரண்டுமே, சமூக நீதியை நோக்கிய பயணம் தொடர்வதையும், அதில் கலைஞர் பங்கு பெருமளவு இருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன! தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஒரு உடல் ஊனமுற்றவராக ஊனத்தின் நிதர்சனத்தை தனது சொந்த அனுபவத்தில் கண்டவர் கலைஞர் என்பதும், 'முதல்வரைச் சக்கர நாற்காலியில் மூட்டை போல தூக்கிச் செல்கிறார்கள்' என்பது போன்ற அருவருக்கத்தக்க வெறுப்புமொழிகள் அவரது ஊனத்தை மையமாக வைத்து அவர்மீது வீசப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய உண்மைகள்.
முன்பே குறிப்பிட்டுள்ளது போல, ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பதம் ‘கூன்’, ‘குருடு’, ‘செவிடு’ என்று அறியப்பட்ட பல்வகை ஊனமுற்றோருக்கும் புதியதொரு சமூக அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ‘ஊனம்’ என்பது தனிமனிதனை மட்டும் வைத்து உருவாவதில்லை; மாறாக சமூகம் மாறுபட்ட உடற்கூறு கொண்டவர்களை ஊனமுற்றோராக மாற்றுகிறது என்ற புரிதல் கொண்டவர்களுக்கும், வெறும் பதங்களை மாற்றுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டவர்களும் கொண்டாடுவதற்கு ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லில் பெரிதாக எதுவும் இல்லைதான் என்றாலும், சமூகத்தை அன்றாடம் எதிர்கொள்ளும், அதன் வசைகளுக்கும், வன்முறைகளுக்கும் நேரடியாக முகம் கொடுக்கும் ஊனமுற்றோர் லட்சக்கணக்கானோருக்கு இந்தப் பதம் புதியதொரு சமூக மதிப்பையும், துணிவையும் வழங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
சமூகநீதி அளவுகோலில் ஒரு மதிப்பீடு
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சமூக நீதிக்கு எதிரான செயல்கள் நடக்காமல் இல்லை. 1997 மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின்போது 17 பேர் போலீஸ் தடியடியால் தாமிரபரணி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது அவற்றுள் முக்கியமானது. இதுதவிர, இன்னும் சிலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். காலந்தோறும், ஊனமுற்றோர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தமது போராட்டத்தாலும் தியாகத்தாலுமே உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதே உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கும் வரலாறு. கலைஞர் அத்தகைய உரிமைப் போராட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்தம் குறைகளை தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் களைய உண்மையாகவே முயன்றார் என்பதே அவரது சிறப்பாக வரலாற்றில் நிலைக்கப்போகிறது. காரணம், பெரியார் என்னும் பெரும் நெருப்பு (சற்றே தணிந்த வடிவத்திலேனும்) கலைஞரின் மனதுக்குள் சமூக நீதிக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கலைந்து, எல்லோருக்கும் சம நீதி, சுயமரியாதை, வளமான வாழ்வு ஆகிய விழுமியங்களுக்காகச் சுடர்விட்டுக் கொண்டேதான் இருந்தது.
தமிழகம் பொருளாதார, சமூக, மனிதவளக் குறியீடுகளில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பதையும் அமர்த்தியா சென் உள்ளிட்ட பல பொருளாதார, சமூகவியல் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த வளர்ச்சியின் சிறப்பு என்னவெனில், தமிழகம் தனது வளர்ச்சியில் அனைத்துப் பிரிவுகளை சார்ந்த மக்களையும் உள்ளடக்கியதான முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது என்பதுதான். இந்தச் சாதனைக்கு கருணாநிதி என்ற தனிமனிதன் பல்வேறு நிலைகளில் செய்துள்ள பங்களிப்பு மிகப்பெரியது. அவரது சமூகநீதி காக்கும் பணிகளுக்காகவே ‘பிரிவினைவாதி’ என்றும், 'மொழி வெறியர்' என்றும், 'இந்துக்களின் எதிரி' என்றும் வட இந்தியாவின் ஊடகங்களாலும், இந்துச் சாமியார்களாலும் தூற்றப்பட்டிருக்கிறார்; பலமுறை காரணமற்ற வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறார். அவரது சமூகப் பின்னணியும் அவர் மதித்த கொள்கைகளும் அதற்கு முக்கியமான காரணங்கள்.
1972-இல் கலைஞர் தமிழக சட்டமன்றத்தில் தமது அரசு பற்றி இப்படிக் கூறினார், “சிலர் இந்த அரசை 'மூன்றாம் தர அரசு' என்று சொல்கிறார்கள். இல்லை, இது நாளாந்தர (சூத்திரர்களின்) அரசு!' இது அவர் மறையும் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவு உண்மையாகவே இருந்தது.
சதிகள் பலவும் நம்மைச் சூழ்ந்து சமருக்கு அழைக்கும் நேரத்தில், கலைஞர் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டார். ஆனால், சாதிய வர்க்க, இன, மொழி, பிராந்திய, பாலின, உடல் ஏற்றத்தாழ்வுகளால் தம் வாழ்வின் ஓரத்தை நோக்கித் துரத்தப்படும் விளிம்புநிலை மக்களின் ஓட்டத்தை நிறுத்தும் குரல்கள் எங்கெல்லாம் ஒலிக்கின்றனவோ, அவர்தம் வாட்டத்தைப் போக்கும் செயல்கள் எங்கெல்லாம் நடந்தேறுகின்றனவோ, சமத்துவத்தை நோக்கி சட்டங்கள் எங்கெல்லாம் திருத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் கலைஞர் சமூகநீதிப் போராளிகளின் உள்ளத்தில் உந்து சக்தியாய் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்!
--
(கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]