"எடுத்த பொருள எடுத்த எடத்துல வெக்கலன்னா எம்பாடு திண்டாட்டந்தான்!" என்ற ஒற்றை வரி வசனத்திலேயே பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை நாயகனின் வாயாலேயே கூறவைத்துத் திரைப்படம் தொடங்குகிறது. தொடர்ந்து குரலை, வாசனையை, நடை ஓசையை வைத்தே ஒவ்வொருவரையும் நாயகன் அடையாளம் கண்டுகொள்வதும் திரைப்படம் முழுதும் ஆங்காங்கே காட்டப்படுகிறது. நாயகன் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்வதைப் பலரும் வியக்கின்றனர். பலரை வியக்க வைக்கும் நாயகன் வேறு எந்த வேலையும் செய்யாமல் பாட்டுப்பாடி பிச்சை எடுப்பது ஏன்?
அதற்கான காரணத்தையும் நாயகனே ஒருமுறை கூறுகிறார். "அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைத்த பிறகு எந்த வேலை செய்தாவது குடும்பத்தைக் காப்பாற்றுவேன்" என்று கூறுவார். அப்படியானால் பார்வை இல்லாத நிலையில் எந்தவொரு வேலையும் செய்ய முடியாதா? இத்தனைக்கும் நாயகன் ஊர் செழிப்பான கிராமம்தான். பாட்டுப் பாடியது போக எஞ்சிய நேரத்தில் ஏதாவது விவசாய வேலை செய்வது போல காட்டியிருக்கக் கூடாதா? நாயகன் மீது அனுதாபம் வரவேண்டும் என்பதற்காகப் பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்தினரின் திறமைகளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமா?
பாட்டுப்பாடும் நாயகன் ஒருபோதும் வேறு திரைப்படப் பாடல்களைப் பாடுவதில்லை. சொந்தக் கற்பனையில் பாடல்களை உருவாக்கி மெட்டமைத்து, இசைத்துப் பாடுபவராகக் காட்டப்படுகிறார். ஒரு காட்சியில் கிராமிய இசைக்குழு ஒன்றிற்கு முன்னரே உறுதியளித்தபடி பாடல் ஒன்றைப் பாடி அளிக்கிறார் நாயகன். அப்போது ஒருவர் சரியாக வாசிக்காத இசைக்கருவியை வாங்கி, தானே இசைத்தும் கற்றுக்கொடுக்கிறார். இவ்வளவு செய்கின்ற நாயகன், அந்த இசைக்குழுவுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று ஒருமுறைகூடக் கூறவில்லை; வேறு எந்த இடத்திலும் இசை தொடர்பான வாய்ப்போ வேலையோ நாயகன் கேட்பதாகவும் காட்டப்படவில்லை. ஆக, எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிச்சை எடுத்து மட்டுமே பிழைக்க முடியும் என்பதை வெகு எளிதாக நம்பவைக்க முடிகிறது. இதுதான் யதார்த்த சமூகத்தின் விழிப்புணர்வின் தரநிலை.
ஒரு பெண்மணி கொடுக்கும் கிழிந்த ரூபாய்த் தாளைப் பார்வை மாற்றுத்திறனாளி நாயகன் கண்டுகொள்வது ஆச்சரியமான காட்சியாக வைக்கப்பட்டிருக்கும். கிழிந்த ரூபாய்த் தாளை, அதுவும் ஒட்டுக்கூட போடாத கிழிந்த ரூபாய்த் தாளைத் தடவிப் பார்த்துக் கண்டுபிடிப்பது செயற்கரிய செயலா? வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில்கூட ரூபாய்த் தாளை மாற்றிக்கொடுத்து ஏமாற்றுவதை பார்வை மாற்றுத்திறனாளி சரியாகக் கண்டுபிடித்துவிடுவதாக ஒரு காட்சி இருக்கும். ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் எப்படிக் கண்டுபிடிக்கின்றனர் என்பதை எந்தத் திரைப்படத்திலும் காட்டுவதில்லை. அது ஏதோ பார்வை மாற்றுத்திறனாளிகளின் அபூர்வத் திறன் எனப் பொதுச் சமூகத்தை நம்பவைக்கின்றனர். இதனால் யாருக்கு இழப்பு தெரியுமா? முழுப் பாதிப்பும் பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்குத்தான்.
சுதந்திர இந்தியாவில் ரூபாய்த் தாள்களில் பல மாற்றங்கள் காலந்தோறும் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்திய உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்புவரை ஒரு விசயத்தை மட்டும் மாற்றாமல் பின்பற்றப்பட்டது. அதாவது ஒவ்வொரு மதிப்பு ரூபாய்த் தாள்களுக்கும் குறிப்பிட்ட அளவு மாற்றப்படாமல் இருந்தது. மேலும், தடவிப் பார்த்து அறியும் விதமாக தடிப்பான, தனித்தனியான குறியீடுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. ரூபாய்த் தாள்களின் அளவு அல்லது அந்தத் தடிப்பான குறியீடுகளை வைத்தே பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
பார்வை மாற்றுத்திறனாளிகளை வியந்து பாராட்டுகின்ற அல்லது அனுதாபத்தை ஏற்படுத்துகின்ற திரைப்படங்கள் இந்த எளிமையான, முக்கியமான விசயத்தை இதுவரையிலும் காட்டவில்லை. இதன் விளைவு, தற்போதைய புதிய ரூபாய்த் தாள்கள் புதிய அளவுகளில், தடிப்பான குறியீடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இன்னல்களை பொதுச் சமூகத்தினால் உணர முடியவில்லை. தற்போது நூறு, ஐம்பது மற்றும் பத்து ரூபாய்த் தாள்கள் புதியவை, பழையவை இரண்டுமே புழக்கத்தில் இருப்பதால் எதன் அடிப்படையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ரூபாய்த் தாள்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?
தனக்கு, தன் குடும்பத்தினருக்கு நேர்ந்த அவலங்களை எண்ணி வருந்தும் நாயகன், "இந்தப் பாழாப்போன சமூகத்தைப் பார்க்காமல் இப்படியே இருந்துவிடுகிறேன்" என்று கூறுவதாகத் திரைப்படம் நிறைவடையும். அதற்கு முன்னதாக ஒரு வசனம் வரும். "பார்வை கிடைக்கனும்னு ஆசப்பட்டதுக்கு ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை கொடுத்துட்டான்". அப்படியானால் பார்வை இல்லாமல் போனது இறைவனின் செயல், அதை மீறிப் பார்வை கிடைக்க முயற்சிப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம், இல்லையா? இன்றைக்கும்கூட அறுவை சிகிச்சைக்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கின்ற நடைமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், பார்வை மாற்றுத்திறனாளி பார்வை கிடைக்க ஆசைப்படுவதே குற்றம் என்பதெல்லாம் என்ன வகையான படைப்பு? இவரெல்லாம் ஒரு படைப்பாளியா?
இறுதியாக, நிறைவாக இசைஞானி இளையராஜா. இத்திரைப்படத்தில் இளையராஜா அவர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் கூற இயலாது என்பதால்தான் நிறைவுப் பத்தி அவருக்கே அர்ப்பணம். மிக முக்கியமாக பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களின் குரலும் தொனியும், நாயகன் விக்ரம் பேசுகின்ற தொனியை ஒத்ததாகவே இருக்கும். அதிலும் ஒருவரையே அனைத்துப் பாடல்களையும் பாட வைத்திருப்பது, நாயகனே பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இளையராஜா, விக்ரம், ஹரிஹரன் போன்ற அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களை வைத்துக்கொண்டு இன்னமும் ஆக்கப்பூர்வமான படைப்பாக காசி இருந்திருக்கலாம் என்பதே பொதுவான ஏக்கம் அல்லது ஆதங்கம்.
இனி அடுத்த பகுதிக்கான டீசர்... அடுத்த பகுதி சற்றே வித்தியாசமாக இருக்கும். அதாவது, இதுவரையில் இருந்த மாதிரி முழுத் திரைப்படமாக இல்லாமல் சிறுசிறு கதாபாத்திரங்களாக உலா வந்த பார்வை மாற்றுத்திறனாளி வேடங்களின் தொகுப்பாக அடுத்த பகுதி. ஆகவே, நண்பர்கள் தங்களைக் கவர்ந்த பார்வை மாற்றுத்திறனாளித் துணைக் கதாபாத்திரங்களைப் பின்னூட்டங்களில் குறிப்பிடலாமே!
--
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]