ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம், ஒரு அடையாளம் உண்டு. சிலர் வாழும்போது தனக்கான அடையாளத்தை உருவாக்குகின்றனர்; சிலர் பிறக்கும்போதே அடையாளத்துடன் பிறந்து, அந்த அடையாளத்தோடே வாழ்ந்து, அதிலிருந்து வெளிவராமல் தன்னை நிரூபிக்கப் போராடுகின்றனர். ஆசிரியர், ராணுவ வீரர் முதலியோர் முதலாவது கருத்திற்கான சான்றுகள். மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது கருத்திற்கான சான்றுகள். ஏன்! தற்போது நடந்த ஆசிய ஒலிம்பிக் போட்டியில், ஆறு விரல் கொண்ட ஸ்வப்னா பர்மன் என்ற இந்திய வீராங்கனை ஹெப்டாத்லான் (Heptathlon) போட்டியில் பதக்கம் பெற்றதன் மூலம், தனது அடையாளத்தோடு போராடி வெற்றி பெறவில்லையா?
ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியும் தங்களை நிரூபிக்கவே தங்களின் வாழ்நாட்களைச் செலவிட வேண்டியதாக இருக்கிறது. நான் இந்தக் கட்டுரைக்கான செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோது, நானே என்னை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன். காரணம், என் பார்வையற்ற சமூகத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டு வீரர் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றிருக்கிறார் என்பது எம்மைப் போன்ற மக்களுக்கு அல்லவா முதலில் தெரிந்திருக்க வேண்டும்? இது எம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெருமை தானே! விராட் கோலி ‘கேல் ரத்னா’ விருதைப் பெற்றார் என தெரிந்துகொண்ட நான், என்னைப் போன்ற ஒருவர் ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றார் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை!
ஓட்டப் பந்தயம் என்றால் உங்களுக்கு உசேன் போல்ட், பீ.டீ. உஷா, தற்போது ஹிமா தாஸ் போன்றவர்கள்தான் நினைவிற்கு வருகிறார்களா? அப்படியே அங்கூர் தாமாவையும் (Ankur Dhama) பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஓட்டப் பந்தயத்தில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 5000 மீ., 10000 மீ. என பல பிரிவுகள் உண்டு. போட்டியில் கலந்துகொள்ளும் பார்வையற்ற வீரர்களுக்கு ஒரு துணையாளர் (Guide) இருத்தல் வேண்டும். அவர் பக்கத்துத் தடத்தில் (Track) அவருக்கு ஒரு கயிற்றின் மூலம் வழியைக் காட்டுவார். மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளுக்கு ஈடாக, மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைச் சில அமைப்புகள் ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றன.
பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடையே பன்முகத் திறமைகள் இருக்கும். கிரிக்கெட், சதுரங்கம், தனிநபர் விளையாட்டுகளான தடகளப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இந்தியர்களிடையே இருக்கும் ரசனை காரணமாக இம்மாதிரியான தனிநபர் போட்டிகளைப் பலரும் கண்டுகொள்வதில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தினால், இத்தகையவர்களின் சாதனையைப் பேச நாம் மறந்துவிடுகிறோம். அப்படி மறந்துபோன, பலராலும் பேசப்படாத ஒருவர்தான் அங்கூர் தாமா!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் (Baghpat) என்ற ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் அங்கூர் தாமா. இன்று ஏட்டளவில் ‘இந்தியாவின் முதுகெலும்பு’ என அழைக்கப்படும் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். தனது ஆறு வயதுவரை ஆரவாரமாய்த் திரிந்த இவருக்கு, விதி வேறு ஒரு கணக்கு வைத்திருந்தது. ஒரு விபத்தின் மூலம் அவரது கண் பார்வையை இழந்தார் அங்கூர். அப்புறம் என்ன? மருத்துவமனை மருத்துவமனையாய் ஏறி இறங்கியிருக்கிறார்கள்; எந்த மாற்றமும் இல்லை. ஒரு மருத்துவரின் வழிகாட்டலில், புதுடெல்லியில் உள்ள JPM உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார் அங்கூர்.
என்னதான் அவரது பார்வை பறிபோனாலும், விதிக்கோ கடவுளுக்கோ தெரியாது, இவர் கடிவாளம் இல்லாத குதிரை என்று. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே அங்கூருக்கு கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்; அதிலும், கிரிக்கெட்டில் மற்றவருக்கு ரன்னராக ஓட மிகுந்த ஆர்வம். என்ன செய்ய? நம் நாட்டில்தான் கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதாதே! அதனாலோ என்னவோ, அவரது கிரிக்கெட் ஆர்வம் அவர் படித்த JPM பள்ளி காம்பௌண்ட் சுவருக்குள்ளேயே புதைந்துவிட்டது.
பள்ளிப் படிப்பை முடித்த தாமா, டெல்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். தாமா இக்கல்லூரியை பற்றி இவ்வாறு சொல்கிறார், “எனது விளையாட்டிற்கு எங்கள் கல்லூரி எல்லா வகையிலும் உதவியது. நான் செல்லும் எல்லாப் போட்டிகளுக்கும் அனுமதி அளித்து, எனக்கு வருகைப் பதிவில் எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர் கல்லூரி நிர்வாகிகள்”.
கால்பந்தும், தடகள விளையாட்டும் திறமைவாய்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ளும்; அவ்வளவு காதல் நம் மேல். அப்படியே ஒரு ரோஜாப் பூவைக் கொடுத்து முதுகில் தட்டிக்கொடுக்கச் சிறந்த நண்பர்களும், பயிற்சியாளரும் கிடைத்தால் போதும்; அந்தக் காதல் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதற்கு அங்கூர் தாமா ஒரு உதாரணம்.
ஆம்! அங்கூருக்குக் கிடைத்த அத்தகைய பயிற்சியாளரின் பெயர் சத்தியபால் சிங். இந்தியாவில் இளவயதில் ‘துரோணாச்சாரியா’ விருதைப் பெற்றவர். பயிற்சியாளர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அங்கூருக்கு பயிற்சி அளித்து, இன்று 2017-18-ஆம் ஆண்டிற்கான ‘அர்ஜூனா’ விருதைப் பெறவைத்துள்ளார். நாள்தோறும் காலையிலும், மாலையிலும் நேரு விளையாட்டு அரங்கத்தில் இவர் அங்கூருக்கு பயிற்சி அளித்திருக்கிறார்; இதற்காக எவ்வித கட்டணமும் அவர் பெறவில்லை.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், சத்தியபால் சிங்கைப் பற்றி அங்கூர் தமா இப்படிக் கூறுகிறார், “எனது பயிற்சியாளர் எனக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்கள், அயல்நாட்டு போக்குவரத்துச் செலவுகள், தங்குமிடச் செலவுகள், எனது இதரத் தேவைகள் என அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். நான் நாட்டிற்காகப் பதக்கம் வெல்கிறேனோ இல்லையோ, கண்டிப்பாக எனது பயிற்சியாளர் சத்தியபால் சிங் அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நெகிழ்ந்துள்ளார். இதைவிட ஒரு குருவிற்கு வேறு பெருமை வேண்டுமா என்ன? அவர் குறிப்பிட்டபடியே வெற்றி பெற்று, அவரது குருவிற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார் அங்கூர்.
அவரது வெற்றிக்கு உதவிய இன்னொரு கையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். நான் மேலே கூறியது போன்று, ஒரு பார்வையற்ற தடகள வீரர் ஒரு துணையாளரை வைத்திருக்கவேண்டும் அல்லவா? ஆம், அங்கூருக்கு ஒரு சிறந்த துணையாளர் கிடைத்தார்; அவரும் ஒரு தடகள வீரர்தான். ஆனால் என்ன, அவருக்கு நமது நாட்டில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால்தான் அங்கூர் அவரது துனையாளருக்காகவும் பதக்கம் வெல்ல வேண்டும் என வேட்கை கொண்டார்.
அங்கூரின் பதக்க வேட்டை
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் சாதனை புரிந்த வீரர்களுக்குப் பெரும்பாலும் அவர்களது பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகள்தான் துணையாக நிற்பார்கள். அதே நியதிதான் அங்கூர் தாமாவின் வாழ்விலும் நடந்தது. அவரது சகோதரி ஒரு உடற்கல்வி ஆசிரியை. அவரின் தூண்டுதல் மூலம்தான் அங்கூருக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து உலகத்தில் லயோனல் மெஸ்ஸியின் கால்களை ‘மாயக் கால்கள்’ என கூறுவதுண்டு; அதுபோலதான் இந்த கட்டுரை நாயகனின் கால்களைச் சொல்லவேண்டும். காரணம், 2013-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவிற்கான முதல் கோல் அடித்த பெருமை அங்கூருக்குத்தான் உண்டு!
கால்பந்து தவிர, ஓட்டப் போட்டியில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கிறார் அங்கூர். பள்ளியில் படிக்கும்போதே பாரா ஒலிம்பிக்கைப் பற்றித் தெரிந்து கொண்ட அவர், அப்பொழுதிலிருந்தே அதற்கான பயிற்சியினைத் தொடங்கிவிட்டார். 2008-இல் இந்திய பார்வையற்ற விளையாட்டு சங்கம் (Indian Blind Sports Association – IBSA) நடத்திய தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். இந்த இரண்டு போட்டிகளிலும் அங்கூர் ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்! அதாவது, இந்த 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் அதற்கு முன்பு 1.3 நிமிடங்களும், 2.37 நிமிடங்களுமாக இருந்த சாதனையை முறியடித்து 1.1 நிமிடத்திலும், 2.25 நிமிடத்திலும் கடந்து இன்று வரை சிறுவர்களுக்கான முறியடிக்கப்படாத சாதனையைத் தன்னகத்தே வைத்துள்ளார் அங்கூர்! 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற, உலக இளைஞர்களுக்கான தடகளப் போட்டியிலும் (World Youth and Student Championships) அவர் பங்கேற்றுள்ளார்.
இவரது கால்களின் ஓட்டம் போலவே, பதக்க வேட்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் 800 மீ. மற்றும் 1500 மீ. ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். அதைத் தொடர்ந்து, துபாயில் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளியையும், 1500 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஷார்ஜாவில் 1500 மீ. ஓட்டத்தில் தங்கமும், 800 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் பெற்றுவந்தார். 2014-ஆம் ஆண்டு இஞ்சியனில் [Incheon] நடைபெற்ற ஆசிய பாரா தடகளப் போட்டியில் 1500 மீ. ஓட்டத்தை 4.23 நிமிடத்தில் கடந்து வெண்கலமும், 800 மீ. ஓட்டத்தை 2.9 நிமிடத்தில் கடந்து வெள்ளியையும் வென்று இந்தியக் கொடியை விண்ணுயரச் செய்தார் இந்த தாமா. அதே தொடரில், முதன்முதலாக 5000 மீ. ஓட்டத்தில் கலந்து கொண்ட அவர், 16.41 நிமிடத்தில் கடந்து இரண்டாவது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
இவ்வாறு தொடர்ந்து அங்கூர் தாமா பெற்ற பதக்கங்கள் மூலம் அவருக்கு இந்தியாவில் விளையாட்டிற்குக் கிடைக்கும் உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருது வழங்கப்பட்டது. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அவ்விருதினை வழங்கி அங்கூர் தாமாவைப் பெருமைப்படுத்தினார். ராம் கரன் சிங் என்ற பார்வையற்றவருடன் சேர்ந்து ‘அர்ஜூனா’ விருதுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார் அங்கூர் தாமா.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டைப் பொறுத்தவரை, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சலுகைகள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். பெரும்பாலும் நன்கொடையாளர்கள் மூலமோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமோதான் இதுவரை விளையாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடிகிறது. இம்மாதிரியான கடினங்கள் அங்கூரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த அங்கூரால் அவரது பயிற்சியாளர் சத்தியபால் சிங், இந்திய பார்வையற்றோருக்கான விளையாட்டு சங்கம் (IBSA), சுருக்கமாக BRA என்று அழைக்கப்படும் ‘Blind Relief Association’ ஆகியோர் மூலமாகத்தான் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. இறுதியில், ‘GoSports Foundation’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவருக்கு உதவ முன்வந்தது; அபினவ் பிந்த்ரா, ராகுல் டிராவிட் மற்றும் புல்லேலா கோபிசந்த் போன்றவர்கள் இவ்வமைப்பின் நிர்வாகிகள். இந்நிறுவனம் திறமையுள்ள வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சி மற்றும் பண உதவிகளைச் செய்து வருகிறது.
வாழ்க்கையில் தடைகள் இல்லாமல் போனால், எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க நினைவுகள் எதுவும் இருக்காது. இவ்வளவு தடைகளைத் தாண்டியதால்தான், அங்கூர் தாமாவால் ‘ராஷ்டிரபதி பவனில்’ ராஜாங்க நடை போட முடிந்தது. இவர் வாழ்க்கையில் மேலும் பல சிகரங்களைத் தொட என் சார்பாகவும், இதழின் சார்பாகவும் அங்கூருக்கு வாழ்த்துகள்!
***
தொடர்புக்கு: [email protected]
ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியும் தங்களை நிரூபிக்கவே தங்களின் வாழ்நாட்களைச் செலவிட வேண்டியதாக இருக்கிறது. நான் இந்தக் கட்டுரைக்கான செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோது, நானே என்னை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன். காரணம், என் பார்வையற்ற சமூகத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டு வீரர் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றிருக்கிறார் என்பது எம்மைப் போன்ற மக்களுக்கு அல்லவா முதலில் தெரிந்திருக்க வேண்டும்? இது எம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெருமை தானே! விராட் கோலி ‘கேல் ரத்னா’ விருதைப் பெற்றார் என தெரிந்துகொண்ட நான், என்னைப் போன்ற ஒருவர் ‘அர்ஜூனா’ விருதைப் பெற்றார் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை!
ஓட்டப் பந்தயம் என்றால் உங்களுக்கு உசேன் போல்ட், பீ.டீ. உஷா, தற்போது ஹிமா தாஸ் போன்றவர்கள்தான் நினைவிற்கு வருகிறார்களா? அப்படியே அங்கூர் தாமாவையும் (Ankur Dhama) பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஓட்டப் பந்தயத்தில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 5000 மீ., 10000 மீ. என பல பிரிவுகள் உண்டு. போட்டியில் கலந்துகொள்ளும் பார்வையற்ற வீரர்களுக்கு ஒரு துணையாளர் (Guide) இருத்தல் வேண்டும். அவர் பக்கத்துத் தடத்தில் (Track) அவருக்கு ஒரு கயிற்றின் மூலம் வழியைக் காட்டுவார். மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளுக்கு ஈடாக, மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைச் சில அமைப்புகள் ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றன.
பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடையே பன்முகத் திறமைகள் இருக்கும். கிரிக்கெட், சதுரங்கம், தனிநபர் விளையாட்டுகளான தடகளப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இந்தியர்களிடையே இருக்கும் ரசனை காரணமாக இம்மாதிரியான தனிநபர் போட்டிகளைப் பலரும் கண்டுகொள்வதில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தினால், இத்தகையவர்களின் சாதனையைப் பேச நாம் மறந்துவிடுகிறோம். அப்படி மறந்துபோன, பலராலும் பேசப்படாத ஒருவர்தான் அங்கூர் தாமா!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் (Baghpat) என்ற ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் அங்கூர் தாமா. இன்று ஏட்டளவில் ‘இந்தியாவின் முதுகெலும்பு’ என அழைக்கப்படும் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். தனது ஆறு வயதுவரை ஆரவாரமாய்த் திரிந்த இவருக்கு, விதி வேறு ஒரு கணக்கு வைத்திருந்தது. ஒரு விபத்தின் மூலம் அவரது கண் பார்வையை இழந்தார் அங்கூர். அப்புறம் என்ன? மருத்துவமனை மருத்துவமனையாய் ஏறி இறங்கியிருக்கிறார்கள்; எந்த மாற்றமும் இல்லை. ஒரு மருத்துவரின் வழிகாட்டலில், புதுடெல்லியில் உள்ள JPM உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார் அங்கூர்.
என்னதான் அவரது பார்வை பறிபோனாலும், விதிக்கோ கடவுளுக்கோ தெரியாது, இவர் கடிவாளம் இல்லாத குதிரை என்று. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே அங்கூருக்கு கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்; அதிலும், கிரிக்கெட்டில் மற்றவருக்கு ரன்னராக ஓட மிகுந்த ஆர்வம். என்ன செய்ய? நம் நாட்டில்தான் கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதாதே! அதனாலோ என்னவோ, அவரது கிரிக்கெட் ஆர்வம் அவர் படித்த JPM பள்ளி காம்பௌண்ட் சுவருக்குள்ளேயே புதைந்துவிட்டது.
பள்ளிப் படிப்பை முடித்த தாமா, டெல்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். தாமா இக்கல்லூரியை பற்றி இவ்வாறு சொல்கிறார், “எனது விளையாட்டிற்கு எங்கள் கல்லூரி எல்லா வகையிலும் உதவியது. நான் செல்லும் எல்லாப் போட்டிகளுக்கும் அனுமதி அளித்து, எனக்கு வருகைப் பதிவில் எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர் கல்லூரி நிர்வாகிகள்”.
கால்பந்தும், தடகள விளையாட்டும் திறமைவாய்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ளும்; அவ்வளவு காதல் நம் மேல். அப்படியே ஒரு ரோஜாப் பூவைக் கொடுத்து முதுகில் தட்டிக்கொடுக்கச் சிறந்த நண்பர்களும், பயிற்சியாளரும் கிடைத்தால் போதும்; அந்தக் காதல் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதற்கு அங்கூர் தாமா ஒரு உதாரணம்.
ஆம்! அங்கூருக்குக் கிடைத்த அத்தகைய பயிற்சியாளரின் பெயர் சத்தியபால் சிங். இந்தியாவில் இளவயதில் ‘துரோணாச்சாரியா’ விருதைப் பெற்றவர். பயிற்சியாளர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அங்கூருக்கு பயிற்சி அளித்து, இன்று 2017-18-ஆம் ஆண்டிற்கான ‘அர்ஜூனா’ விருதைப் பெறவைத்துள்ளார். நாள்தோறும் காலையிலும், மாலையிலும் நேரு விளையாட்டு அரங்கத்தில் இவர் அங்கூருக்கு பயிற்சி அளித்திருக்கிறார்; இதற்காக எவ்வித கட்டணமும் அவர் பெறவில்லை.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், சத்தியபால் சிங்கைப் பற்றி அங்கூர் தமா இப்படிக் கூறுகிறார், “எனது பயிற்சியாளர் எனக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்கள், அயல்நாட்டு போக்குவரத்துச் செலவுகள், தங்குமிடச் செலவுகள், எனது இதரத் தேவைகள் என அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். நான் நாட்டிற்காகப் பதக்கம் வெல்கிறேனோ இல்லையோ, கண்டிப்பாக எனது பயிற்சியாளர் சத்தியபால் சிங் அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நெகிழ்ந்துள்ளார். இதைவிட ஒரு குருவிற்கு வேறு பெருமை வேண்டுமா என்ன? அவர் குறிப்பிட்டபடியே வெற்றி பெற்று, அவரது குருவிற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார் அங்கூர்.
அவரது வெற்றிக்கு உதவிய இன்னொரு கையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். நான் மேலே கூறியது போன்று, ஒரு பார்வையற்ற தடகள வீரர் ஒரு துணையாளரை வைத்திருக்கவேண்டும் அல்லவா? ஆம், அங்கூருக்கு ஒரு சிறந்த துணையாளர் கிடைத்தார்; அவரும் ஒரு தடகள வீரர்தான். ஆனால் என்ன, அவருக்கு நமது நாட்டில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால்தான் அங்கூர் அவரது துனையாளருக்காகவும் பதக்கம் வெல்ல வேண்டும் என வேட்கை கொண்டார்.
அங்கூரின் பதக்க வேட்டை
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் சாதனை புரிந்த வீரர்களுக்குப் பெரும்பாலும் அவர்களது பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகள்தான் துணையாக நிற்பார்கள். அதே நியதிதான் அங்கூர் தாமாவின் வாழ்விலும் நடந்தது. அவரது சகோதரி ஒரு உடற்கல்வி ஆசிரியை. அவரின் தூண்டுதல் மூலம்தான் அங்கூருக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து உலகத்தில் லயோனல் மெஸ்ஸியின் கால்களை ‘மாயக் கால்கள்’ என கூறுவதுண்டு; அதுபோலதான் இந்த கட்டுரை நாயகனின் கால்களைச் சொல்லவேண்டும். காரணம், 2013-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவிற்கான முதல் கோல் அடித்த பெருமை அங்கூருக்குத்தான் உண்டு!
கால்பந்து தவிர, ஓட்டப் போட்டியில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கிறார் அங்கூர். பள்ளியில் படிக்கும்போதே பாரா ஒலிம்பிக்கைப் பற்றித் தெரிந்து கொண்ட அவர், அப்பொழுதிலிருந்தே அதற்கான பயிற்சியினைத் தொடங்கிவிட்டார். 2008-இல் இந்திய பார்வையற்ற விளையாட்டு சங்கம் (Indian Blind Sports Association – IBSA) நடத்திய தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். இந்த இரண்டு போட்டிகளிலும் அங்கூர் ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்! அதாவது, இந்த 400 மற்றும் 800 மீ. ஓட்டப் போட்டியில் அதற்கு முன்பு 1.3 நிமிடங்களும், 2.37 நிமிடங்களுமாக இருந்த சாதனையை முறியடித்து 1.1 நிமிடத்திலும், 2.25 நிமிடத்திலும் கடந்து இன்று வரை சிறுவர்களுக்கான முறியடிக்கப்படாத சாதனையைத் தன்னகத்தே வைத்துள்ளார் அங்கூர்! 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற, உலக இளைஞர்களுக்கான தடகளப் போட்டியிலும் (World Youth and Student Championships) அவர் பங்கேற்றுள்ளார்.
இவரது கால்களின் ஓட்டம் போலவே, பதக்க வேட்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் 800 மீ. மற்றும் 1500 மீ. ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். அதைத் தொடர்ந்து, துபாயில் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளியையும், 1500 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஷார்ஜாவில் 1500 மீ. ஓட்டத்தில் தங்கமும், 800 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் பெற்றுவந்தார். 2014-ஆம் ஆண்டு இஞ்சியனில் [Incheon] நடைபெற்ற ஆசிய பாரா தடகளப் போட்டியில் 1500 மீ. ஓட்டத்தை 4.23 நிமிடத்தில் கடந்து வெண்கலமும், 800 மீ. ஓட்டத்தை 2.9 நிமிடத்தில் கடந்து வெள்ளியையும் வென்று இந்தியக் கொடியை விண்ணுயரச் செய்தார் இந்த தாமா. அதே தொடரில், முதன்முதலாக 5000 மீ. ஓட்டத்தில் கலந்து கொண்ட அவர், 16.41 நிமிடத்தில் கடந்து இரண்டாவது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
இவ்வாறு தொடர்ந்து அங்கூர் தாமா பெற்ற பதக்கங்கள் மூலம் அவருக்கு இந்தியாவில் விளையாட்டிற்குக் கிடைக்கும் உயரிய விருதான ‘அர்ஜூனா’ விருது வழங்கப்பட்டது. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அவ்விருதினை வழங்கி அங்கூர் தாமாவைப் பெருமைப்படுத்தினார். ராம் கரன் சிங் என்ற பார்வையற்றவருடன் சேர்ந்து ‘அர்ஜூனா’ விருதுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார் அங்கூர் தாமா.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டைப் பொறுத்தவரை, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சலுகைகள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். பெரும்பாலும் நன்கொடையாளர்கள் மூலமோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமோதான் இதுவரை விளையாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடிகிறது. இம்மாதிரியான கடினங்கள் அங்கூரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த அங்கூரால் அவரது பயிற்சியாளர் சத்தியபால் சிங், இந்திய பார்வையற்றோருக்கான விளையாட்டு சங்கம் (IBSA), சுருக்கமாக BRA என்று அழைக்கப்படும் ‘Blind Relief Association’ ஆகியோர் மூலமாகத்தான் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. இறுதியில், ‘GoSports Foundation’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவருக்கு உதவ முன்வந்தது; அபினவ் பிந்த்ரா, ராகுல் டிராவிட் மற்றும் புல்லேலா கோபிசந்த் போன்றவர்கள் இவ்வமைப்பின் நிர்வாகிகள். இந்நிறுவனம் திறமையுள்ள வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சி மற்றும் பண உதவிகளைச் செய்து வருகிறது.
வாழ்க்கையில் தடைகள் இல்லாமல் போனால், எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க நினைவுகள் எதுவும் இருக்காது. இவ்வளவு தடைகளைத் தாண்டியதால்தான், அங்கூர் தாமாவால் ‘ராஷ்டிரபதி பவனில்’ ராஜாங்க நடை போட முடிந்தது. இவர் வாழ்க்கையில் மேலும் பல சிகரங்களைத் தொட என் சார்பாகவும், இதழின் சார்பாகவும் அங்கூருக்கு வாழ்த்துகள்!
***
தொடர்புக்கு: [email protected]