சமீபத்தில் வெளியான ‘வட சென்னை’ திரைப்படம் மிகுந்த வரவேற்புகளுக்கு இடையே, வட சென்னைப் பகுதி மக்களைத் தவறானவர்களாகக் காட்டியுள்ளனர் என்பது மாதிரியான எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இதுநாள் வரையிலான ‘விக்ரம் வேதா’ வரை பல திரைப்படங்களில் இப்படிக் காட்டியிருந்தாலும், ‘வட சென்னை’ திரைப்படத்திற்கு மட்டும் எதிர்ப்பு ஏன்? ஏனென்றால், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்குகின்றனர். இவர்கள் திரையில் காட்டுவது உண்மைதான் என்று வெகுமக்கள் நம்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவேதான், மற்றவர்களை விடவும் வெற்றிமாறன் போன்றவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. அப்படியொரு இயக்குநரான பாலா இயக்கத்தில் உருவான ‘நான் கடவுள்’ திரைப்படம் தான் இப்பகுதியில் இடம்பெறுகிறது.
நான் கடவுள் திரைப்படத்தில், நாயகி பூஜா எந்தவொரு ஆதரவும் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி. சாலை ஓரங்களில், மக்கள் கூடும் இடங்களில் கூத்தாடும் தொழில் செய்கின்ற எளிய மனிதர்களின் ஆதரவில் வளர்கிறாள். மாற்றுத்திறனாளிகளை, ஆதரவற்றவர்களை வைத்து தொழில் முறையாக பிச்சையெடுக்கும் கும்பல் இவளைப் பார்க்கிறது. இவளின் பாடும் திறனைக் கண்டுகொண்ட அந்தக் கும்பல், அவளை தங்களது கூட்டத்திற்குக் கடத்திச் செல்கிறது. இந்நிலையில் காசியில் அகோரி சாமியாராக இருக்கும் நாயகன் ஆர்யா அந்த ஊருக்கு வருகிறான். நாயகனைப் பற்றி அறிந்த இவள், தன்னைக் காப்பாற்றக் கோரி தஞ்சம் கேட்கிறாள். அதற்கு ஒப்புக்கொண்ட நாயகன், இவளை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதாகத் திரைப்படம் நிறைவடைகிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, பல வகையான மாற்றுத்திறனாளிகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் படுகின்ற பாடுகள் மட்டுமின்றி, இயக்குநர் பாலாவின் திரைப்படங்களுக்கே உரிய அதிர வைக்கும் அடிகளும் அடிக்கடி விழுகின்றன. ஆனாலும், அவர்களுக்கு இடையே காணப்படுகின்ற கொண்டாட்டமும், மகிழ்ச்சியும்தான் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று. அதுவும் கூட, உருவத்தை அல்லது உடல் குறைபாடுகளை வைத்துச் செய்யப்படும் நகைச்சுவை துளியளவும் இல்லை என்பதுதான் இயக்குநர் பாலாவின் தனித்துவமான படைப்பாக்கம்.
பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நடிகை பூஜா, அசலான மாற்றுத்திறனாளியாகவே திரையில் வாழ்ந்திருப்பார். அதாவது அவர் பேசும் இயல்பும், பாடும்போது வெளிப்படுத்தும் முகபாவங்களும் அவ்வளவு துல்லியமாக இருக்கும். மேலும், அவரது உடல்மொழியும்கூட வெண்கோல் பயன்படுத்தும் அனுபவம் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி என்பதை இயல்பாகக் காட்டியிருக்கும். புதிதாகச் சேர்ந்த இடத்தில் உடனடியாக ஒருங்கிணையும் தன்மை, சாமியாரான நாயகனுக்குக் குடும்பம் குறித்து அறிவுரை கூறும் அக்கறை என எல்லா விதத்திலும் நாயகியின் கதாபாத்திரம் முன்மாதிரியானதாகவே உருவாக்கப்பட்டிருக்கும்.
தொடக்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான நாயகியைப் பராமரித்து வருபவர்கள் மிகமிக ஏழ்மையான எளிய மனிதர்கள். பிறகு இன்னொரு கூட்டத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கும் ஒரு திருநங்கை உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் ஆறுதல் அளிக்கின்றனர். மேலும், தனது குறைபாட்டினை வைத்துப் பிச்சையெடுக்க மறுக்கும் உறுதி கொண்டவளாகவும் நாயகி இருக்கிறாள். இப்படியாக, பல்வேறு அருமையான கதாபாத்திரங்களைத் திரையில் உலாவச் செய்துள்ள இயக்குநர் பாலா மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவர்.
இவ்வளவு காலம் தானும் வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் நாயகி வாழ்கிறாள்; ஒருமுறைகூட தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவிற்கு அவள் வரவேயில்லை; உடன் இருக்கின்ற எளிய மனிதர்களும் அந்த நம்பிக்கையை நாள்தோறும் வளர்த்துக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனாலும், தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கின்ற நாயகனுக்கு மட்டும் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? வார்த்தைகளால் கூற முடியாத துன்புறுத்தல்களை நாள்தோறும் தாங்கிக்கொண்டுதான் பலரும் அங்கு வாழ்கின்றனர். அப்படியானால், நாயகி மட்டும் இந்தச் சூழலில் வாழ இயலாது என்ற முடிவிற்கு வருவதற்கான காரணம் எது?
அவள் பார்வை மாற்றுத்திறனாளி என்பது மட்டுமின்றி, அவள் நாயகி என்பதால், அவளது கற்பு பாதுகாக்கப்பட வேண்டிய கருத்தாக்கமும் உள்ளது. ஆமாம்! நாயகி என்பவள் கற்பை இழக்காதவளாகத்தான் இருக்க வேண்டுமல்லவா? ஆக, அவள் கற்புடனே இறந்துவிட்டால் ஒருவித நிம்மதி அடைகிறது பொதுப்புத்தி. ஆகவேதான், அவளைப் பழைய குடும்பத்தினருடன் சேர்த்துவிடலாம் என்ற சிந்தனைகூட பொதுப்புத்தியில் தோன்றுவதில்லை. இத்தகைய சிந்தனைதான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் இறந்துவிடுவதாக அல்லது தற்கொலை செய்துகொள்வதாகக் காட்சிகள் அமைக்கச் செய்கிறது. தரமான இயக்குநர் என்று பெயர்பெற்ற பாலாவின் திரைப்படங்களும்கூட இந்த ரீதியில் இருப்பதால், தரம் என்பதற்கும் நியாயம் என்பதற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பிரித்து உணர வேண்டியிருக்கிறது.
இதைத்தான் தாகூர் மிகவும் நயம்படப் பின்வருமாறு கூறுகிறார், ‘எறியும் நெருப்பு அனலை வீசி வெளிப்படையாக எச்சரிக்கிறது; சாம்பல் பூத்த நெருப்புதான் விபரீதங்களை மறைத்து வைத்து போக்குக் காட்டுகிறது’. ஆமாம், வணிக ரீதியான திரைப்படங்களை உருவாக்குவோர் என்று பெயர்பெற்ற இயக்குநர்கள் வெளிப்படையாக இருக்கின்றனர். அதாவது தங்களது படைப்பாளிகளை ரசிக்கலாம்; நம்பிக்கை வைத்து ஏற்றுப் பின்பற்ற வேண்டாம் என்று. ஆனால், யதார்த்த வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொள்வோர், தேன் தடவிய நஞ்சாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத அவலம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நைசாக பிற்போக்கான கருத்துக்களை வெகுமக்கள் மனங்களில் விதைத்து வளர்க்கின்றனர் இவர்கள்.
‘தகுதி உள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்’ என்ற டார்வினின் கோட்பாட்டினைப் பலரும் ஏற்கவில்லை. ஆனாலும், சிலர் மட்டும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். அதாவது, இயற்கை விதியின்படி தகுதி, வலிமை, திறமைக் குறைவானவர்கள், தற்காத்துக்கொள்ள இயலாதவர்கள் அழிக்கப்படுவது அல்லது அடிமைகள் ஆக்கப்படுவது நியாயம்தானே என்பது இவர்களது வாதம். இந்தச் சிந்தனைதான் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, மானிய ஒழிப்பு போன்றவற்றை நியாயப்படுத்துகிறது. இத்தகைய அறமற்ற சிந்தனையுடன் எளிய மக்களை அழித்தொழிக்கும், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது.
நான் கடவுள் திரைப்படத்திற்கு மாறாக, இயல்பான வாழ்க்கை, சின்னச் சின்ன கொண்டாட்ட தருணங்கள், யதார்த்தமான ஏமாற்றங்கள் என பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை இன்னொரு கோணத்தில் காட்டிய திரைப்படம் அது. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இணையாக பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் பாடல்களைக் கொடுத்த இளைய தலைமுறை இசையமைப்பாளர் இடம்பெற்ற அந்தத் திரைப்படம், அடுத்த பகுதியில்!
***
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]
நான் கடவுள் திரைப்படத்தில், நாயகி பூஜா எந்தவொரு ஆதரவும் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி. சாலை ஓரங்களில், மக்கள் கூடும் இடங்களில் கூத்தாடும் தொழில் செய்கின்ற எளிய மனிதர்களின் ஆதரவில் வளர்கிறாள். மாற்றுத்திறனாளிகளை, ஆதரவற்றவர்களை வைத்து தொழில் முறையாக பிச்சையெடுக்கும் கும்பல் இவளைப் பார்க்கிறது. இவளின் பாடும் திறனைக் கண்டுகொண்ட அந்தக் கும்பல், அவளை தங்களது கூட்டத்திற்குக் கடத்திச் செல்கிறது. இந்நிலையில் காசியில் அகோரி சாமியாராக இருக்கும் நாயகன் ஆர்யா அந்த ஊருக்கு வருகிறான். நாயகனைப் பற்றி அறிந்த இவள், தன்னைக் காப்பாற்றக் கோரி தஞ்சம் கேட்கிறாள். அதற்கு ஒப்புக்கொண்ட நாயகன், இவளை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதாகத் திரைப்படம் நிறைவடைகிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, பல வகையான மாற்றுத்திறனாளிகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் படுகின்ற பாடுகள் மட்டுமின்றி, இயக்குநர் பாலாவின் திரைப்படங்களுக்கே உரிய அதிர வைக்கும் அடிகளும் அடிக்கடி விழுகின்றன. ஆனாலும், அவர்களுக்கு இடையே காணப்படுகின்ற கொண்டாட்டமும், மகிழ்ச்சியும்தான் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று. அதுவும் கூட, உருவத்தை அல்லது உடல் குறைபாடுகளை வைத்துச் செய்யப்படும் நகைச்சுவை துளியளவும் இல்லை என்பதுதான் இயக்குநர் பாலாவின் தனித்துவமான படைப்பாக்கம்.
பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நடிகை பூஜா, அசலான மாற்றுத்திறனாளியாகவே திரையில் வாழ்ந்திருப்பார். அதாவது அவர் பேசும் இயல்பும், பாடும்போது வெளிப்படுத்தும் முகபாவங்களும் அவ்வளவு துல்லியமாக இருக்கும். மேலும், அவரது உடல்மொழியும்கூட வெண்கோல் பயன்படுத்தும் அனுபவம் இல்லாத பார்வை மாற்றுத்திறனாளி என்பதை இயல்பாகக் காட்டியிருக்கும். புதிதாகச் சேர்ந்த இடத்தில் உடனடியாக ஒருங்கிணையும் தன்மை, சாமியாரான நாயகனுக்குக் குடும்பம் குறித்து அறிவுரை கூறும் அக்கறை என எல்லா விதத்திலும் நாயகியின் கதாபாத்திரம் முன்மாதிரியானதாகவே உருவாக்கப்பட்டிருக்கும்.
தொடக்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான நாயகியைப் பராமரித்து வருபவர்கள் மிகமிக ஏழ்மையான எளிய மனிதர்கள். பிறகு இன்னொரு கூட்டத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கும் ஒரு திருநங்கை உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் ஆறுதல் அளிக்கின்றனர். மேலும், தனது குறைபாட்டினை வைத்துப் பிச்சையெடுக்க மறுக்கும் உறுதி கொண்டவளாகவும் நாயகி இருக்கிறாள். இப்படியாக, பல்வேறு அருமையான கதாபாத்திரங்களைத் திரையில் உலாவச் செய்துள்ள இயக்குநர் பாலா மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவர்.
இவ்வளவு காலம் தானும் வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் நாயகி வாழ்கிறாள்; ஒருமுறைகூட தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவிற்கு அவள் வரவேயில்லை; உடன் இருக்கின்ற எளிய மனிதர்களும் அந்த நம்பிக்கையை நாள்தோறும் வளர்த்துக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனாலும், தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கின்ற நாயகனுக்கு மட்டும் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? வார்த்தைகளால் கூற முடியாத துன்புறுத்தல்களை நாள்தோறும் தாங்கிக்கொண்டுதான் பலரும் அங்கு வாழ்கின்றனர். அப்படியானால், நாயகி மட்டும் இந்தச் சூழலில் வாழ இயலாது என்ற முடிவிற்கு வருவதற்கான காரணம் எது?
அவள் பார்வை மாற்றுத்திறனாளி என்பது மட்டுமின்றி, அவள் நாயகி என்பதால், அவளது கற்பு பாதுகாக்கப்பட வேண்டிய கருத்தாக்கமும் உள்ளது. ஆமாம்! நாயகி என்பவள் கற்பை இழக்காதவளாகத்தான் இருக்க வேண்டுமல்லவா? ஆக, அவள் கற்புடனே இறந்துவிட்டால் ஒருவித நிம்மதி அடைகிறது பொதுப்புத்தி. ஆகவேதான், அவளைப் பழைய குடும்பத்தினருடன் சேர்த்துவிடலாம் என்ற சிந்தனைகூட பொதுப்புத்தியில் தோன்றுவதில்லை. இத்தகைய சிந்தனைதான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் இறந்துவிடுவதாக அல்லது தற்கொலை செய்துகொள்வதாகக் காட்சிகள் அமைக்கச் செய்கிறது. தரமான இயக்குநர் என்று பெயர்பெற்ற பாலாவின் திரைப்படங்களும்கூட இந்த ரீதியில் இருப்பதால், தரம் என்பதற்கும் நியாயம் என்பதற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பிரித்து உணர வேண்டியிருக்கிறது.
இதைத்தான் தாகூர் மிகவும் நயம்படப் பின்வருமாறு கூறுகிறார், ‘எறியும் நெருப்பு அனலை வீசி வெளிப்படையாக எச்சரிக்கிறது; சாம்பல் பூத்த நெருப்புதான் விபரீதங்களை மறைத்து வைத்து போக்குக் காட்டுகிறது’. ஆமாம், வணிக ரீதியான திரைப்படங்களை உருவாக்குவோர் என்று பெயர்பெற்ற இயக்குநர்கள் வெளிப்படையாக இருக்கின்றனர். அதாவது தங்களது படைப்பாளிகளை ரசிக்கலாம்; நம்பிக்கை வைத்து ஏற்றுப் பின்பற்ற வேண்டாம் என்று. ஆனால், யதார்த்த வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொள்வோர், தேன் தடவிய நஞ்சாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத அவலம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நைசாக பிற்போக்கான கருத்துக்களை வெகுமக்கள் மனங்களில் விதைத்து வளர்க்கின்றனர் இவர்கள்.
‘தகுதி உள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்’ என்ற டார்வினின் கோட்பாட்டினைப் பலரும் ஏற்கவில்லை. ஆனாலும், சிலர் மட்டும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். அதாவது, இயற்கை விதியின்படி தகுதி, வலிமை, திறமைக் குறைவானவர்கள், தற்காத்துக்கொள்ள இயலாதவர்கள் அழிக்கப்படுவது அல்லது அடிமைகள் ஆக்கப்படுவது நியாயம்தானே என்பது இவர்களது வாதம். இந்தச் சிந்தனைதான் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, மானிய ஒழிப்பு போன்றவற்றை நியாயப்படுத்துகிறது. இத்தகைய அறமற்ற சிந்தனையுடன் எளிய மக்களை அழித்தொழிக்கும், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது.
நான் கடவுள் திரைப்படத்திற்கு மாறாக, இயல்பான வாழ்க்கை, சின்னச் சின்ன கொண்டாட்ட தருணங்கள், யதார்த்தமான ஏமாற்றங்கள் என பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை இன்னொரு கோணத்தில் காட்டிய திரைப்படம் அது. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இணையாக பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் பாடல்களைக் கொடுத்த இளைய தலைமுறை இசையமைப்பாளர் இடம்பெற்ற அந்தத் திரைப்படம், அடுத்த பகுதியில்!
***
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]