‘சின்னச் சின்ன ஆசை’ எனக் கிளம்பி, தமிழ் திரையிசை ராக ராஜியத்தை ராஜாவிடமிருந்து மெல்ல கைப்பற்றிக் கொண்ட A.R. ரஹ்மான், திரையிசைக்குப் பல திறமையான இருபால் பாடகர்களை அறிமுகம் செய்தார்.
‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தில், ‘பொன்மானே! கோபம் ஏனோ?’ என 1983-இல் பாடிய உன்னி மேனனையும், ‘காயத்ரி’ படத்தில், ‘காலைப்பனியில் ஆடும் மலர்கள்’ என 1975-லேயே பாடிவிட்டு, காலம் செய்த மாயமாய்த் தமிழ் திரை இசையுலகில் தலைகாட்டாமல் இருந்த சுஜாதாவையும், 1992-இல் வெளிவந்த தன் முதல் படமான ‘ரோஜா’-வில் இணைத்து, ‘புது வெள்ளை மழை’ பொழியச் செய்து, நம்மை நனையச் செய்தார் ரஹ்மான்.
அந்த வரிசையில், ‘தமிழா! தமிழா!’ என ஹரிஹரனை விளிக்கச் செய்து எழுச்சியூட்டினார். ‘என்னவளே! அடி என்னவளே!’ என உன்னிகிருஷ்ணனைக் குழையச் செய்து உசுப்பேற்றினார். ‘நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது’ என 13 வயது பாலகி ஹரிணியை நம் காதோரம் கிசுகிசுக்க வைத்தார்.
ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் என எல்லோருமே ரசிகர்களின் உணர்வுகளை மேடை அரங்கேற்றம் செய்கிற மேன்மை பொருந்திய மேட்டுக்குடி குரல்களாகத் திகழ்ந்தார்கள். உருகி உருகிப் பாடிய அவர்களின் குரல்கள் ரசிகனுக்கானதாக இருந்ததே அன்றி, ரசிகனே தனக்காய்ப் பாடுவதாக இல்லை. தன் இசையில் இருந்த இந்த மிக நுட்பமான குறையை ரசிகன் உணர்வதற்கு முன்னதாகவே உணர்ந்துகொண்டு விழித்துக்கொண்டார் ரஹ்மான்.
ராஜாவின் காலத்திலும்கூட, என்னதான் S.P.B.-யும் மனோவும் ராகமழையில் தங்களைக் கரைத்துக்கொண்டாலும், ரசிகனும் தன்னை அதில் ததும்பத் ததும்ப நனைத்துக்கொண்டாலும், ராஜாவின் குரலில்தான் தானே பாடுவதான ஒரு தன்மையை உணர்ந்தான் ரசிகன். ரஹ்மானுக்கு அதிலும் சிக்கல்; தன்னுடையது இயல்பான மேல்தட்டுக் குரல் என்பதால், கடைநிலை ரசிகனையும் தன் பாடல்களோடு ஒன்றச் செய்யும் பொறுப்பைத் தன் உற்ற தோழனிடம் கொடுத்தார் ரஹ்மான்.
ஷாகுல் ஹமீது என்கிற அந்த உயிர்த்தோழனும் தன் ஊண் குழைத்து, உயிர் உருக்கிப் பாடிய அத்தனையிலும் அப்பழுக்கற்ற ரசிகனின் முகம் பளிச்சிட்டது.
‘கண்டமனூரு மைதாரேன், கண்ணுல வச்சா ஆகாதா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேந்து போனா ஆகாதா?’
என்று அவர் பாடியபோது, சிலித்துக்கிட்டுப்போற சின்னப்பொண்ணை நிறுத்தி, களத்துமேட்டுக் காதலனான தானே அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டதாகக் கிறங்கினான் ரசிகன்.
எப்போதும் உச்ச ஸ்தாயில் பாடும் ஹமீது,
‘பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை அறிஞ்சுக்கனும்;
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே, புரிஞ்சு நீயும் நடந்துக்கனும்’
என செந்தமிழ் நாட்டு தமிழச்சியைத் தன் தாழ்த்திய குரலால் செல்லமாகவும் தட்டிக்கொடுத்திருக்கிறார்.
‘குட்டைக்காமன் தேவன் கட்டி வச்ச கம்மாய்,
கூத வரும் முன்னால குளிக்கட்டுமா?’
என்று கேட்கும்போதே நாம் நனைந்துவிடுவதுதான் அவரின் குரல் கொண்ட மாயம்.
‘வாரத்துக்கு ஏழுநாளு;
வந்தவளோ நாளுபேரு;
மூணுபேரு குறையுதடி கணக்கு’
என்று நம்மை ஒரு பாடலில் சிரிக்க வைத்தவர், வேறொரு பாடலில் தன் குரலைக் குழைத்து, வார்த்தைகள் அத்தனையிலும் விம்மலை விதைத்து, கேட்பதனாலோ பாடுவதாலோ அல்ல, நினைத்தாலே நம் கண்களில் நீர் செருகிடும்படி தன்னோடு அந்தப் பாடலையும் நித்தியமாக்கிவிட்டார் ஹமீது. ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கான இசை ரஹ்மான்.
ஒரு புது முயற்சியாக, இசைக்கருவிகளின் துணையில்லாமல், வெறும் குரல்களை வைத்துக்கொண்டே அந்தப் பாடலை வடிவமைத்தார் ரஹ்மான். பாடலின் மனம்கவர் வெற்றிக்குக் காரணங்கள் இரண்டு; ஒன்று வைரமுத்துவின் மண்வாசனை மிகுந்த வரிகள். மற்றொன்று, அந்த வாசனையின் நிறம் மாறாது, ரசிகர்களிடம் அப்படியே பரிமாறிய ஷாகுல் ஹமீதின் குரல்.
‘கார வீட்டுத் திண்ணையில, கறிக்கு மஞ்சள் அரைக்கையில,
கரிசக்காட்டு ஓடையில, கண்டாங்கி துவைக்கையில’
என நினைவுகளை ஒன்றுகூட்டி, ஒப்பாரி வைப்பதான அவரின் குரல்பாவத்தைக் கேட்கையில், உரத்து அழுதுவிட ஏங்குகிறது மனம்.
‘தொட்டுத் தொட்டுப் பொட்டு வச்ச சுட்டுவிரல் காயலையே!
மதுரையில வாங்கி வந்த வளவி உடையலையே! – அந்தக்
கழுத்துத் தேமலையும், காதோரம் மச்சத்தையும் பார்ப்பதெப்போ? – அந்தக்
கொலுசு மணிச்சிரிப்பும், குமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ?’
என பிரிவின் ஆற்றாமையில் புரண்டழுகிற நாயகனை மட்டுமல்ல; தன் சொல்லொணாச் சோகத்தைக் கண்ணீரில் கரைத்தபடி, விதிவழி நடக்கிற நாயகியின் வடிவழகையும் வார்த்தைக்கு வார்த்தைத் தன் குரல் கம்மலால் கண்முன் நிறுத்திவிடுவார் ஹமீது. கமகம்தான் பாடகருக்கு அழகென்று நினைத்தால், குரல் கம்முதலும் பேரழகாய் வாய்த்தது ஹமீதின் குரலுக்கு மட்டும்தான்.
‘நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு,
அரளிப் பூச்சூடி அழுதபடி போறபுள்ள’
என்ற வரியை இப்போது கேட்டால், ‘நண்பா! இன்னும் ஏராளமாய் உனக்கு வாய்ப்புகள் வழங்கக் காத்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாயே!’ என ரஹ்மானே தேம்புவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது நமக்கு.
‘ஆத்தங்கரை மரமே’, ‘குறுக்குச் சிறுத்தவளே’, ‘ஈச்சு எலுமிச்சு’ என நிலம் சார்ந்த எத்தனையோ பாடல்களை ரஹ்மான் தந்திருந்தாலும், ஷாகுல் ஹமீதைப் போல வெள்ளந்தியான ஒரு நிலம் சார்ந்த குரலை (Nativity Voice) இன்றளவும் ரஹ்மானால் அடையாளம் காணமுடியவில்லை என்பதே உண்மை.
‘அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்’ – ‘நேருக்குநேர்’ படத்தில் இடம்பெற்ற ‘அவள் வருவாளா’ பாடலில் பயின்ற மிகப்பிரபலமான இந்த வரியைப் பாடிய ஹமீது அவர்கள், அந்தப் பாடல் வெளியான 1997-இல் உயிரோடு இல்லை. அதற்கு முந்தைய ஆண்டு என்பதாகத்தான் நினைவு; உடுமலைப்பேட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மரணமடைந்தார் பாடகர் ஷாகுல் ஹமீது. ‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி’ என்பதுதான் கடைசியாக அவர் குரலில் வெளிவந்த பாடல்.
வித்யாசாகர் இசையில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, தேவாவின் இசையில் ‘நேருக்குநேர்’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் பாடிய ஷாகுல் ஹமீது, ரஹ்மான் இசையில் பாடிய பாடல்களும் 25-ஐத் தாண்டாது. ஆனாலும், அவர் குரல்தான் அத்தனை நெருக்கமாய் ரஹ்மானின் இசையைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. ஏனெனில், அவருக்கு வாய்த்தது ரசிகனுக்கான குரல் அல்ல; அது ரசிகனின் குரல். சாகும்வரை அவர் பாடியதெல்லாம் சாமானியனின் சங்கீதம்.
அவரின் மரணச் செய்தியை அறிவித்த கொழும்பு வானொலி தன் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், ‘திரு. ஷாகுல் ஹமீது அவர்களே! இத்தனை சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து செல்லவா நீங்கள் இப்படிப் பாடிவைத்தீர்கள்?’ என்று கேட்டபடி அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்தப் பாடல், ‘ராசாத்தி! என் உசுரு என்னதில்ல’ (பாடலைக் கேட்க).
...ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: [email protected]
‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தில், ‘பொன்மானே! கோபம் ஏனோ?’ என 1983-இல் பாடிய உன்னி மேனனையும், ‘காயத்ரி’ படத்தில், ‘காலைப்பனியில் ஆடும் மலர்கள்’ என 1975-லேயே பாடிவிட்டு, காலம் செய்த மாயமாய்த் தமிழ் திரை இசையுலகில் தலைகாட்டாமல் இருந்த சுஜாதாவையும், 1992-இல் வெளிவந்த தன் முதல் படமான ‘ரோஜா’-வில் இணைத்து, ‘புது வெள்ளை மழை’ பொழியச் செய்து, நம்மை நனையச் செய்தார் ரஹ்மான்.
அந்த வரிசையில், ‘தமிழா! தமிழா!’ என ஹரிஹரனை விளிக்கச் செய்து எழுச்சியூட்டினார். ‘என்னவளே! அடி என்னவளே!’ என உன்னிகிருஷ்ணனைக் குழையச் செய்து உசுப்பேற்றினார். ‘நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது’ என 13 வயது பாலகி ஹரிணியை நம் காதோரம் கிசுகிசுக்க வைத்தார்.
ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் என எல்லோருமே ரசிகர்களின் உணர்வுகளை மேடை அரங்கேற்றம் செய்கிற மேன்மை பொருந்திய மேட்டுக்குடி குரல்களாகத் திகழ்ந்தார்கள். உருகி உருகிப் பாடிய அவர்களின் குரல்கள் ரசிகனுக்கானதாக இருந்ததே அன்றி, ரசிகனே தனக்காய்ப் பாடுவதாக இல்லை. தன் இசையில் இருந்த இந்த மிக நுட்பமான குறையை ரசிகன் உணர்வதற்கு முன்னதாகவே உணர்ந்துகொண்டு விழித்துக்கொண்டார் ரஹ்மான்.
ராஜாவின் காலத்திலும்கூட, என்னதான் S.P.B.-யும் மனோவும் ராகமழையில் தங்களைக் கரைத்துக்கொண்டாலும், ரசிகனும் தன்னை அதில் ததும்பத் ததும்ப நனைத்துக்கொண்டாலும், ராஜாவின் குரலில்தான் தானே பாடுவதான ஒரு தன்மையை உணர்ந்தான் ரசிகன். ரஹ்மானுக்கு அதிலும் சிக்கல்; தன்னுடையது இயல்பான மேல்தட்டுக் குரல் என்பதால், கடைநிலை ரசிகனையும் தன் பாடல்களோடு ஒன்றச் செய்யும் பொறுப்பைத் தன் உற்ற தோழனிடம் கொடுத்தார் ரஹ்மான்.
ஷாகுல் ஹமீது என்கிற அந்த உயிர்த்தோழனும் தன் ஊண் குழைத்து, உயிர் உருக்கிப் பாடிய அத்தனையிலும் அப்பழுக்கற்ற ரசிகனின் முகம் பளிச்சிட்டது.
‘கண்டமனூரு மைதாரேன், கண்ணுல வச்சா ஆகாதா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேந்து போனா ஆகாதா?’
என்று அவர் பாடியபோது, சிலித்துக்கிட்டுப்போற சின்னப்பொண்ணை நிறுத்தி, களத்துமேட்டுக் காதலனான தானே அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டதாகக் கிறங்கினான் ரசிகன்.
எப்போதும் உச்ச ஸ்தாயில் பாடும் ஹமீது,
‘பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை அறிஞ்சுக்கனும்;
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே, புரிஞ்சு நீயும் நடந்துக்கனும்’
என செந்தமிழ் நாட்டு தமிழச்சியைத் தன் தாழ்த்திய குரலால் செல்லமாகவும் தட்டிக்கொடுத்திருக்கிறார்.
‘குட்டைக்காமன் தேவன் கட்டி வச்ச கம்மாய்,
கூத வரும் முன்னால குளிக்கட்டுமா?’
என்று கேட்கும்போதே நாம் நனைந்துவிடுவதுதான் அவரின் குரல் கொண்ட மாயம்.
‘வாரத்துக்கு ஏழுநாளு;
வந்தவளோ நாளுபேரு;
மூணுபேரு குறையுதடி கணக்கு’
என்று நம்மை ஒரு பாடலில் சிரிக்க வைத்தவர், வேறொரு பாடலில் தன் குரலைக் குழைத்து, வார்த்தைகள் அத்தனையிலும் விம்மலை விதைத்து, கேட்பதனாலோ பாடுவதாலோ அல்ல, நினைத்தாலே நம் கண்களில் நீர் செருகிடும்படி தன்னோடு அந்தப் பாடலையும் நித்தியமாக்கிவிட்டார் ஹமீது. ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கான இசை ரஹ்மான்.
ஒரு புது முயற்சியாக, இசைக்கருவிகளின் துணையில்லாமல், வெறும் குரல்களை வைத்துக்கொண்டே அந்தப் பாடலை வடிவமைத்தார் ரஹ்மான். பாடலின் மனம்கவர் வெற்றிக்குக் காரணங்கள் இரண்டு; ஒன்று வைரமுத்துவின் மண்வாசனை மிகுந்த வரிகள். மற்றொன்று, அந்த வாசனையின் நிறம் மாறாது, ரசிகர்களிடம் அப்படியே பரிமாறிய ஷாகுல் ஹமீதின் குரல்.
‘கார வீட்டுத் திண்ணையில, கறிக்கு மஞ்சள் அரைக்கையில,
கரிசக்காட்டு ஓடையில, கண்டாங்கி துவைக்கையில’
என நினைவுகளை ஒன்றுகூட்டி, ஒப்பாரி வைப்பதான அவரின் குரல்பாவத்தைக் கேட்கையில், உரத்து அழுதுவிட ஏங்குகிறது மனம்.
‘தொட்டுத் தொட்டுப் பொட்டு வச்ச சுட்டுவிரல் காயலையே!
மதுரையில வாங்கி வந்த வளவி உடையலையே! – அந்தக்
கழுத்துத் தேமலையும், காதோரம் மச்சத்தையும் பார்ப்பதெப்போ? – அந்தக்
கொலுசு மணிச்சிரிப்பும், குமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ?’
என பிரிவின் ஆற்றாமையில் புரண்டழுகிற நாயகனை மட்டுமல்ல; தன் சொல்லொணாச் சோகத்தைக் கண்ணீரில் கரைத்தபடி, விதிவழி நடக்கிற நாயகியின் வடிவழகையும் வார்த்தைக்கு வார்த்தைத் தன் குரல் கம்மலால் கண்முன் நிறுத்திவிடுவார் ஹமீது. கமகம்தான் பாடகருக்கு அழகென்று நினைத்தால், குரல் கம்முதலும் பேரழகாய் வாய்த்தது ஹமீதின் குரலுக்கு மட்டும்தான்.
‘நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு,
அரளிப் பூச்சூடி அழுதபடி போறபுள்ள’
என்ற வரியை இப்போது கேட்டால், ‘நண்பா! இன்னும் ஏராளமாய் உனக்கு வாய்ப்புகள் வழங்கக் காத்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாயே!’ என ரஹ்மானே தேம்புவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது நமக்கு.
‘ஆத்தங்கரை மரமே’, ‘குறுக்குச் சிறுத்தவளே’, ‘ஈச்சு எலுமிச்சு’ என நிலம் சார்ந்த எத்தனையோ பாடல்களை ரஹ்மான் தந்திருந்தாலும், ஷாகுல் ஹமீதைப் போல வெள்ளந்தியான ஒரு நிலம் சார்ந்த குரலை (Nativity Voice) இன்றளவும் ரஹ்மானால் அடையாளம் காணமுடியவில்லை என்பதே உண்மை.
‘அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்’ – ‘நேருக்குநேர்’ படத்தில் இடம்பெற்ற ‘அவள் வருவாளா’ பாடலில் பயின்ற மிகப்பிரபலமான இந்த வரியைப் பாடிய ஹமீது அவர்கள், அந்தப் பாடல் வெளியான 1997-இல் உயிரோடு இல்லை. அதற்கு முந்தைய ஆண்டு என்பதாகத்தான் நினைவு; உடுமலைப்பேட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மரணமடைந்தார் பாடகர் ஷாகுல் ஹமீது. ‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி’ என்பதுதான் கடைசியாக அவர் குரலில் வெளிவந்த பாடல்.
வித்யாசாகர் இசையில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, தேவாவின் இசையில் ‘நேருக்குநேர்’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் பாடிய ஷாகுல் ஹமீது, ரஹ்மான் இசையில் பாடிய பாடல்களும் 25-ஐத் தாண்டாது. ஆனாலும், அவர் குரல்தான் அத்தனை நெருக்கமாய் ரஹ்மானின் இசையைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. ஏனெனில், அவருக்கு வாய்த்தது ரசிகனுக்கான குரல் அல்ல; அது ரசிகனின் குரல். சாகும்வரை அவர் பாடியதெல்லாம் சாமானியனின் சங்கீதம்.
அவரின் மரணச் செய்தியை அறிவித்த கொழும்பு வானொலி தன் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், ‘திரு. ஷாகுல் ஹமீது அவர்களே! இத்தனை சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து செல்லவா நீங்கள் இப்படிப் பாடிவைத்தீர்கள்?’ என்று கேட்டபடி அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்தப் பாடல், ‘ராசாத்தி! என் உசுரு என்னதில்ல’ (பாடலைக் கேட்க).
...ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: [email protected]